11. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
வெகு இயல்பான நிகழ்வுகளுடன் இரண்டு நாட்கள் கடந்திருந்தன. கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்த மகளை கூர்ந்து நோக்கினார் மோகன். அவர் முகத்தில் யோசனை படர்ந்தது. எது நடக்கவே கூடாது என்று அவர் நினைக்கிறாரோ, அது யாழினிக்கு நிகழ்வதாய் தோன்றியது அவருக்கு!
பிரிவும் வலியும் ! அவை எவ்வளவு கொடுமையானது என்பதை அவரை விடவும் அறிந்தவர் இல்லை. அன்பான மனைவி, புத்திசாலி மகள் என சின்னஞ்சிறு உலகில் நிம்மதியாக வாழ்ந்தவர் மோகன். யாரையும் கடந்து ஜெயிக்கும் வெறியின்றி மிக நிதானமாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டு வந்தவர், தன் மனைவியின் மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
ஒருவர் மீது அன்பு செலுத்துவது தவறல்ல. அவரையே உலகமென நினைப்பதும் கூட தவறல்ல. ஆனால் அவர் மட்டுமே உலகம் என்றும், அவரின்றி வாழ்வே இல்லையென ஸ்தம்பிப்பதும் பெரிய தவறு. இதை அனுபவத்தால் உணர்ந்தார் மோகன். தனக்கு ஏற்பட்ட இவ்வலி தன் மகளுக்கும் வர கூடாது என்று நினைத்து தான் யாழினி தன்னை சார்ந்திருக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.
யாழினி தன் ஒரே மகள் ! தனக்கென இருக்கும் ஒரே உறவு. எனினும் அவள்மீது கொண்டுள்ள அதீத அன்பினை மறைத்தே வைத்தார். என்றுமே தன்னுடைய இல்லாமையால் அவள் பாதிக்கப்பட கூடாது என நினைத்தார்..யாழினியும் அதை அறியாதவள் இல்லை. எனினும் புகழின் பிரிவு அவளை பாதிக்கத்தான் செய்தது.
"யாழினி"
"அப்பா" அழைத்த குரலுக்கு விசை போட்டது போல ஓடி வரும் மகளை வாஞ்சையுடன் பார்த்தார் மோகன்.
"சொல்லுங்க அப்பா"
"ஏன் ஒரு மாதிரி இருக்க?"
"ஒ..ஒன்னுமில்ல அப்பா"
"அப்படி இருந்தால் நான் ஏன் உன்ன கேள்வி கேட்க போறேன்?"
".."
"புகழ் எப்போ வரானாம்...?"
"தெரிலப்பா...அவன் போனே பண்ணல" என்று தனது ஆதங்கத்தை குரலில் வெளிப்படுத்தினாள். மோகனின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. அதை யாழினியும் கண்டு கொண்டாள்.
"என்னப்பா? ஏதும் தப்பா சொல்லமாட்டேன்?"
".."
"புகழ் என் ப்ரண்டுதான் ப்பா...ப்ரண்டை மிஸ் பண்ண கூடாதாப்பா?"
"தராளமா மிஸ் பண்ணு... நான் உன்னை சந்தேகப்படல யாழினியும்.. ஆனால், அந்த மிஸ்ஸிங் உன்னையே மிஸ் பண்ண வைக்க கூடாது!"
".."
"ஒரு தற்காலிக பிரிவையே தாங்க முடியாத நீ, நிரந்தர பிரிவு வந்தால் என்ன செய்தியோ!" வருங்காலத்தை அறியாமலே சரியாக சொன்னார் அவர்.
"நான் என்ன பண்ணட்டும் ப்பா?"
"ஏதாச்சும் பண்ணு. உனக்கு பிடிச்ச விஷயத்துல உன்னை ஈடுபடுத்திக்க... உன்னையே இழந்து காத்திருந்தா மட்டும் சந்தோசம் வந்தடுமா? சந்தோசம் பூமி எங்கும் கொட்டி கிடக்கு..அதை ஒரே ஒருத்தர் மேல மட்டும் வெச்சு சுருக்கிடாதே !".தான் சொல்ல வந்தது அவ்வளவு தான் என்பது போல அங்கிருந்து நகர்ந்தார் மோகன். அவருக்கு தெரியும் தனது ரத்தின சுருக்கமான பேச்சே மகளே தெளிய வைத்துவிடும் என்று.
"ப்பா"
"ம்ம்?"
" சாயங்காலம் காலேஜ் முடிஞ்சதும் நான் பிருந்தாவனம் இல்லத்துக்கு போயிட்டு வரேன்" என்றாள் யாழினி.
"ம்ம் ஓகே..நான் பிக்அப் பண்ணிக்கவா?"
"வேணாம்பா வந்துடுவேன்.. " என்றவளுக்கு தெரியவில்லை தான் தமிழுடன் திரும்பி வரப்போவது!
கன்னியாகுமரி!
அந்தி சாயும் மாலை பொழுது! தன்னைவிட்டு ஓட தவிக்கும் ஆதவன் எனும் காதலை அணைத்து தன்னுள் புதைத்து வைத்துக் கொள்ள முடியாத சோகத்தில் முகம் வாடிப் போய்க்கொண்டிருந்தாள் வான்மகள். அவளின் வேதனையின் துளியளவும் குறையாதவளாய் புகழின் காரிலிருந்து இறங்கினாள் சஹீபா. கடற்கரை காற்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு “வா மகளே” என்று வரவேற்றது!
காரைவிட்டு இறங்கியவள், புகழைப் பார்த்தாள். அடுத்து என்ன என்று கேட்க வாய்வராமல் அமைதியாய் நின்றிருந்தான் அவன்.