37. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
கண்ணுக்குள்ளே ஒளிப் பிரவாகம், முன் தினம் காலை முதல் இரவு வரை எதிர்கொண்ட அவர்கள் திருமண வீடியோ ஷீட்டிங்க் ஃப்ளாஷ் லைட்டிங்கே காரணம், அசந்த தூக்கத்திலும் அவளது கண்கள் கூசின கண்களை புறங்கையால் தேய்த்து விட்டுக் கொண்டாள். முதல் குழந்தைப் பெற்றவர்களுக்கு குழந்தை செய்யும் எல்லாமே ஆச்சரியமாகவும், பார்க்க பார்க்க ஆசையாகவும் இருக்கும், அவளை மாரோடு அணைத்திருந்தவன் நிலையும் இங்கு அதுவாகத்தான் இருந்தது.
மனதின் உற்சாகத்தில் சீக்கிரமே விழிப்பு வந்து விட்ட போதும் படுக்கையை விட்டு எழவோ தன் மார் சாய்ந்து உறங்குகின்றவளை தள்ளிப் படுக்க வைக்கவோ அவனுக்கு விருப்பமில்லை. அவளையே கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இடை வரை நீண்ட அவள் முடி தாறுமாறாய் கலைந்து அவன் உடலிலும் பரவி கிடக்க, ஏக போக உரிமையோடு அவனை தலையணையாய் பாவித்து உறங்குகிறவள் தூக்கத்திலேயே பல்வேறு முகபாவனை காட்டி கண்களை கசக்கி விட்டுக் கொள்ள அதைப் பார்க்க பார்க்க மிக ரசனையாய் இருந்தது அவனுக்கு.
முகத்தில் உரசும் முடிகள் கூச்சமாய் இருக்க தூக்கத்திலேயே மென்மையாய் சிரித்தவள் அவன் மார்பில் முகத்தை தேய்த்தாள்.
டெடி…..என்றவளாய் முகத்தை திருப்பும் போது தான் அவனுக்கு அவள் அவனை டெடியென்று எண்ணிக் கொண்டாள் என புரிந்தது.
அடிங்க்……உனக்கு நான் டெடியா……காலைலயே காமெடி பண்ணுறா என்று மனதில் எண்ணியவனுக்கு புன்னகை பெரிதாய் விரிந்தது.
அப்படியே உருண்டவள் சட்டென்று விழித்து விழி சுருக்கி பார்த்தாள். சட்டென்று ஏதேதோ ஞாபகம் வர வெட்கி அவன் மார்புக்குள்ளேயே மறுபடி ஒளிந்தாள்.
அவள் தலைவருடியவன் சிறிது நேரம் கழித்து அவளை விட்டு எழுந்தான். உடனே குளித்து ரெடியாகியவன் நான் கொஞ்சம் வெளிய போய் வாரேன் அனி, மறுவீடு போகணும்னு அம்மா சொன்னாங்கல்லியா நீயும் புறப்பட்டுக்க. என்று அவளுக்கு தனிமை கொடுத்து அகன்றான்.
காலை உணவு நேரமே இருவரும் அனிக்காவின் வீடு செல்ல வேண்டியிருந்ததால் அவர்கள் சீக்கிரமே புறப்பட்டு விட்டனர். திருமண உடையை உடுத்துவதுதான் சம்பிரதாயம் என்பதால் அதே தேன் நிறச் சேலையில் பொன்னாய் ஜொலித்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு ரூபன் தன் சட்டையை அணிந்துக் கொண்டிருந்தான்.
தலை வாரிக் கொண்டிருந்தவளிடம்,
ரொம்ப அழகாயிருக்க அனி என்றான்.
வெட்க முறுவலோடு அவள் புன்னகைத்தாள்.
நான் நல்லாயிருக்கேனா? சிறு பிள்ளை போல கேள்வி எழுப்பினான், எல்லாம் சகவாச தோஷம்.
ம்ம்…… என்றவள் அதற்கு மேல் பேசவில்லை.
ஏ வாலு இன்னிக்கு என்ன இப்படி சைலண்ட் ஆயிட்ட, நேத்திக்கு போட வேண்டிய சண்டையை இன்னிக்கு போஸ்ட்போன் வேற பண்ணிருக்க……… என் கூட சண்டைப் போடலியா எனவும் சிரித்தாள்.
அவளருகே நெருங்கியவன், அணைத்துக் கொண்டவனாய் நீ எப்பவும் போல இரு அனி, அதான் நல்லாயிருக்கு என தன் முகம் பார்த்து நின்றவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
ராபினையும் அழைத்துக் கொண்டு புதுமணத் தம்பதிகள் மறுவீட்டுக்கு போக அங்கு மகளைப் பிரிந்து மாதக் கணக்கில் ஆனது போல சாராவும், தாமஸிம் இவர்களுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
கார் வாசலில் வந்து நிற்க மகளையும் மருமகனையும் வரவேற்க நின்ற சாராவிடம் அத்தம்மா என்று கதவை திறந்ததும் ராபின் முதல் ஆளாய் குரல் கொடுத்தான்.
வாங்க, வாங்க பேரப்புள்ளோ, இன்னிக்கு நீங்க ஸ்கூல் போகலியா என்றவாறு அவனை தூக்கிக் கொண்டு எதிரில் நின்ற மகளை வா வென்றுச் சொல்லி முன்னே நடக்க சற்று நேரத்தில் காரை பார்க் செய்து விட்டு ரூபன் உள்ளே நுழைந்தான்.
வா தம்பி என அவனையும் வாயிலில் வந்து அழைத்தவர் கணவரைப் பார்க்க, மகளிடம் பேசியவாறு நின்ற தாமஸ் மருமகனை வரவேற்றார்.
அக்கா எங்க அத்தம்மா…..என்றவனாய் ஹனியை தேட, இரட்டை தென்னை மரங்களை அவள் தலையில் உருவாக்கி கொண்டிருந்த பிரபா மகளை விட்டதும் ராபினை கவனியாமல் அவள் “அட்ட “ என்றவளாய் அனிக்காவிடம் பாய்ந்தாள்.
இப்போது அனியும் ஹனி பாப்பாவும் கொஞ்ச நேரம் கொஞ்சி தீர்த்தார்கள். பிரபாவும், கிறிஸ்ஸிம் வர ஹாலில் சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். முதலில் அனிக்காவையும், ரூபனையும் சாப்பிட வரச் சொல்ல எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோமே என ரூபன் கேட்டுக் கொண்டதால் அரட்டையோடு காலைச் சாப்பாடு மிகவும் ருசித்தது.
அதன் பின் அவன் தன் மாமனாரோடும் , கிறிஸ் அத்தானுடனும் உலக அரசியல் உள்ளூர் அரசியல் , தொழில் நிலவரம் முதலாக கதை பேச, சாராவும், பிரபாவும் மதிய சமையலில் ஈடுபட, அனிக்கா விளையாடிக் கொண்டிருந்த ராபின், ஹனியுடன் இணைந்துக் கொண்டாள்.