அது எப்படிச் செய்யணும்னு நினைச்சப்ப தான் அவன் கண்ணில உயிரைத் தேக்கி அந்த பொண்ணை அவன் ஒரு கடற்கரையில் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான். அப்பத்தான் பொறி தட்டுச்சு, அவளை தூக்கினா, அவன் கதறுவான். எனக்கு அதுதான வேணும்….ஹா ஹா
…………….
ஆமாடா பெரிய மாஸ்டர் பிளான் தான் போட்டேன், ஆனா மிஸ் ஆகிடுச்சு, எப்படித்தான் சரியான நேரத்தில அங்க வந்து நின்னானோ………..அந்த பொண்ண இன்னும் அஞ்சு நிமிஷம் கடலுக்குள்ளேயே வச்சிருந்தேன்னா ஜலசமாதி ஆகிருப்பா……..அதுக்கு விடாம வந்து அவளை அள்ளிப் போயிட்டான்.
…………
பெரிய தப்பு பண்ணிட்டேன், அன்னிக்கே அவளை முடிக்க ரெண்டாவது முறை முயற்சி செஞ்சேன்.
……..
ஆமா, ஆனா அதுக்குள்ள அவளுக்கு காவலா ஆட்கள் போட்டிருந்தான், அந்த பொண்ணை அதுக்கு பிறகு நெருங்கவே முடியலை.
………
ம்ம் என்னையும் அவன் டிடெக்டிவ் வச்சி கண்டு பிடிச்சிட்டான். நான் அவனை ஓப்பன் சாலஞ்ச் விட்டேன்.
……..
அவன் எனக்கு ஆயிரம் மெசேஜ் அனுப்பிருப்பான், உன் கோபம் என் மேலதானே அவளை விட்டுடு. நான் வேணா வந்து உன்னைப் பார்க்கிறேன். மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு…
…………….
அன்னிலிருந்து தான் நான் அடிக்கடி இடம் மாத்துறது, ஒரு பக்கம் அவனைக் குழப்பிட்டே இருந்தேன். இன்னொரு பக்கம் அவனுக்கு பிடிச்ச பொண்ணோட அப்பா கிட்ட போய் பேசினேன். அவரு எங்க தூரத்து ரிலேஷனாம்……….அது யாரா இருந்தா என்ன? எனக்கு பழி வாங்கனும் அவ்வளவு தான்.
………….
எதுக்கு அவனைப் போயி நான் பார்த்து பேசணும், அவன் அப்பவே பாடி பில்டர்.இப்போ இன்னும் முறுக்கேறி திம்முன்னு இருக்கான். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. நமக்கு உடம்புல தண்ணியடிச்சு வெறும் ஷோ பீஸ் தான் அவனோட ஒரு அடிக்கு தாங்குவேனா நான்…… அதான் ஹி ஹி என கேவலமான சிரிப்பை சிரித்து வைத்தான்.
………….
நான் முன்னமே இப்படித்தானேடா……….. இங்க வேலை விஷயமா இருக்கேன்னு வீட்டுல சொல்லி வச்சிருக்கேன், சும்மாவே வாரக்கணக்குல வெளில தங்கிற பழக்கம்னு அவங்களுக்கு தெரியும். அதான் கண்டுக்க மாட்டாங்க……கல்யாணம் பண்னப் போறேன்னதும் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம், பையன் அப்படியாவது திருந்தட்டும்னு………மறுபடி ஒரு கேவலமான சிரிப்பு……….
………
ஆமாடா பின்ன எதுக்கு முதல்ல அந்த பொண்ண நான் கட்டுனதும் அதிலயே அவன் பாதி செத்துடுவான். அதுக்கப்புறம் அவளை இஷ்டம் போல….ஹி ஹி…..கொஞ்ச நாள் கழிச்சு எங்கேயாவது மலை உச்சிக்கு கொண்டு போய் தள்ளிட்டு தெரியாம விழுந்திட்டான்னு சொல்லி நல்லவன் போல அழுதுடுவேன், எல்லோரும் என்னை நம்பிடுவாங்க……….அவன் அந்த ரூபன் கிறுக்கு பிடிச்சு தெரு தெருவா அலைவான், அலையணும். நான் அதைப் பார்க்கணும், பற்களை நெரித்துக் கொண்டிருந்தவன் பேச்சை இன்னும் கேட்க இயலாதவராக தட்டு தடுமாறியவராக ஒருவழியாக வீடு வந்துச் சேர்ந்தார்.
அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது, முகம் சரியில்லை என உணர்ந்து என்ன என்னவென்று துளைத்தெடுத்த மனைவியிடம் சொல்லக் கூட அவரால் முடியவில்லை. என் செல்லப் பெண்ணை மலை உச்சியிலிருந்து தள்ளுவானாம்? எதற்காம் நான் அவனை நம்பி பெண் கொடுப்பதற்காகவா?
மனைவியை பார்த்தவர் இவள் இதைக் கேட்டால் மனம் தாங்குவாளா? ஏற்கெனவே மகள் டிஸ்சார்ஜ் ஆகி ரூபன் வீட்டிற்கு சென்றிருக்க, கணவன் எப்போது அனுமதி தருவார் அவளைப் போய் பார்க்கலாம் என்று தவியாய் தவித்துக் கொண்டு, இரவு தூங்கவும் இயலாமல் படுக்கையில் உருண்டுக் கொண்டு, தனக்கு தெரியாமல் கண்ணீரை வடிக்கின்ற மனைவியை அவரும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றார்.
தான் எடுத்த முடிவு தவறென்று இதுவரை அவர் நினைத்திருக்கவில்லை, இப்போது தான் அவருக்கு அது எவ்வளவு பெரிய தவறென்று பொட்டில் அடித்தாற் போல தெரிந்தது. அந்தக் குடும்பத்தின் மருமகளாக மகள் செல்ல வேண்டுமென்று எண்ணினேனே, ஒரு பொழுதாவது அவனை சந்தேகித்து அவன் குண நலன் அறிய முயன்றேனா?
அவளை பாதுகாக்க ரூபன் ஏற்பாடு செய்திருக்கின்றானாம்………அத்னால் அவளை அணுக முடியாது அவளைக் கொல்ல என்னுடைய உதவியை தேடி இருக்கின்றான். எப்படிப்பட்ட கயமைத்தனம். இப்போது என்னை ஏமாற்றியது போலவே உங்கள் மகள் மலையுச்சியிலிருந்து விழுந்து விட்டாள் என அவன் முதலைக் கண்ணீர் உகுத்தால் தானும் நம்பியிருக்கத்தான் செய்வோம்.