என் பல்வேறு எண்ணங்களுக்கிடையேயும், மகள் பத்திரமான இடத்தில் நல்லவன் ஒருவனின் கண்காணிப்பில் இருக்கிறாள் என்பதே அவருக்கு தெம்பளித்தது. ரூபன் மகள் மேல் ஒரு தூசியும் அணுக விட மாட்டான் என்பதே அவருக்கு ஆசுவாசமளித்தது.
அவரது வயதிற்கு முன் போல சட்டு சட்டென்று முடிவு எடுக்க முடியவில்லை. மகளுக்கு தற்போது ஆபத்தில்லை என்று உணர்ந்த பின்னரே கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு முடிவெடுக்க எண்ணினார்.
மகனும் வந்து அவரது முகம் பார்த்து என்ன ஆயிற்று என விசாரிக்க, அனைவரும் கவலைப் படுவார்கள் என்பதற்காகவே அவர்களோடு இணைந்து அரை குறையாக சாப்பிட்டு தூங்குவது போல படுத்தே கிடந்தார்.அவருக்கு மகளைக் குறித்த கவலை என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டனர்.
மகளை எண்ணி உள்ளுக்குள் அழுதுக் கொண்டு தூங்காமல் நெடு நேரம் விழித்திருந்த மனைவி தூங்கியதை முடிவுச் செய்தபின்னர் எழுந்து உட்கார்ந்தார்.
மனதிற்குள்ளாக பல்வேறு யோசனைகள், விடிந்ததும் தெளிந்திருந்தார்.
அடுத்த நாள் இரவே விக்ரமை தாமஸ் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் தூக்கியிருந்தனர். நடுக்காட்டில் ஒரு பங்களாவில் வாயில் பிளாஸ்டரும், கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் எதிரில் பலசாலியான பத்து பேர்கள் நடமாட அவனைக் கேட்காமலேயே பயத்தில் பேண்ட் ஈரமானது அவனுக்கு.
நான்கு நாட்கள் கடந்திருந்தன…… அவனது நிலையில் மாற்றமில்லை. குடித்து குடித்து உள்ளுக்குள் கெட்டுப் போன உடல். நல்ல உடையணிந்து படோபமாக ராஜா வீட்டு கன்னுக் குட்டியாய் திரிந்தவன் கை கால்களை நாளில் இரு நேரமே திறந்து விட்டு இயற்கை உபாதை கழிக்க சொல்லவும், ஒரு வேளை மட்டுமே மட்டமான சாப்பாடு கொடுத்து விடவும் செய்ய வெகுவாக களைத்துப் போயிருந்தான்.
காடு காடு சுற்றிலும் காடு அவனுக்கு உடல் வளையாமல் வளர்ந்திருந்தவன் ஆகையால் தானாகவே அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்தான். யாரையும் தொடர்புக் கொள்ள கையில் ஃபோனும் இல்லை.
கொடூர உருவங்கள் கொண்ட அவர்களிடம் பேசவும் பயந்து நடுங்கினான்.
ஆனால், அவர்கள் அடிக்கடி பெரியகருப்பன் அண்ணன் வந்தா இவன் கதை காலி, எதுக்கு இன்னும் வராம இழுத்தடிக்கிறாரு என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
எதற்காக தான் கடத்தப் பட்டிருக்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லை.
அன்று அவன் முன்னே உட்கார்ந்து அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவனை எதுக்குன்னே இங்க வச்சிருக்கோம்………
வேறெதுக்கு முடிக்கிறதுக்குத்தான்……
அப்ப இப்பவே ஒரு போடு போட்டு முடிச்சிர வேண்டியது தானே……..ஒரு ஈ காக்கா இல்லை இங்க யாருக்கு தெரியப் போகுது இவன் செத்தான இருக்கானான்னு………
எனக்கு தெரிஞ்சு இவனை அடிச்செல்லாம் சாகடிக்க வேண்டாம், அப்படியே போட்டுட்டு போயிடலாம், பட்டினி,பசியிலயே செத்திடுவான். இது மற்றவன்.
ஆமாடா இதுவும் நல்ல ஐடியா தான், எத்தனை நாள்தான் இவனுக்காக நாம காவல் காக்குறது. அப்படி இவனை விட்டுட்டு போகறதா இருந்தா நாமளும் நம்ம நம்ம வீடு வாசல் பார்க்க போகலாமில்ல. பெரிய கருப்பன் அண்ணன் வந்து இவனை முடிக்கிறதுக்காக நாம எவ்வளவு நாள்தான் காத்துக் கிட்டு இருக்கிறது.
இவன் அப்படி என்ன தப்பு செஞ்சிருப்பான், பார்க்க பெரிய இடத்து பையனா தெரியுதே………
ஒருத்தர் பொண்ணை கடல்ல தள்ளி கொல்ல பார்த்தானாம் மச்சி, அவரு நம்ம பெரிய கருப்பண்ணன் கிட்ட அவன் யாருன்னு கண்டு பிடிச்சு முடிச்சிடு, அவன் யாருன்னு கூட நான் முகம் பார்க்க ஆசைப்படலைன்னு சொல்லிட்டாராம்.
இப்ப நமக்கும், பெரிய கருப்பண்னனுக்கும் மட்டும் தான் இதுதான் இவன்னு தெரியும்.
எனக்கு கூட இவனை இந்த ஊரை விட்டு விரட்டி விட்டுருவோமா, பேசாம பயபுள்ள பிழைச்சு போகட்டும்னு விட்டுட்டு தப்பிச்சு போயிட்டான்னு சொல்லிடலான்னு தோணுச்சு, இவன் மறுபடி அந்த பொண்ணை போய் பார்க்காம இருக்கிற வரைக்கும் இவன் லைஃப் சேஃப்.
மறுபடி இவன் திமிருக்கு அந்த பொண்ணை கொல்ல போறேன்னு இறங்கினான்னா அந்த பொண்ண பாதுகாக்கிற பெரிய கருப்பண்ணன் கையாலே செத்து போகட்டும் என்ன நான் சொல்லுறது…….. என உரக்க பேச
விக்ரம் உயிர் பிழைக்க கிடைத்த வாய்ப்பெண்ணி கால்களை வேக வேகமாய் தரையில் அடித்தான்.
இப்ப உனக்கு என்னாச்சி, எதுக்கு இப்படி அலம்பல் பண்ணுற என்றவனாய் அவன் கன்னத்தில் ஒரு அறை ஓங்கி விட்டவன் வாயிலிருந்து பிளாஸ்டரை வேகமாய் அகற்றினான்.
என்னை பெரிய கருப்பண்ணன் வரதுக்கு முன்னாடி தப்பிச்சு விட்டுருங்க, நான் இந்த ஊர்லயே இருக்க மாட்டேன், எங்க ஊருக்கு போயிடுறேன். ஏன் இந்த நாட்டிலயே இருக்க மாட்டேன், வெளி நாட்டுக்கே போயிடறேன் இந்தியாவே வேண்டாம் எனக்கு
அப்படியா சொல்லுற, உன்னை விட்டுறணுமா, உன்னை விட்டா நாங்க எல்லோரும் பெரிய கருப்பண்ணன் கிட்ட அடி வாங்கில்ல சாகணும். எங்களுக்கு என்ன ஆதாயம்?