நான் உங்களுக்கு லட்ச லட்சமா பணம் தந்துடறேன். என் கூட யாராவது ஒருத்தர் வந்தீங்கன்னா போதும் என்னோட ஹோட்டல் ரூம்ல எப்பவுமே நிறைய ரூபா வச்சிருப்பேன். உங்களுக்கு தந்திடுவேன்.
நீ என்னை ஏமாத்திட்டீன்னா…….
அதெல்லாம் பண்ண மாட்டேன், இப்பவே முகத்தை மூடிட்டு தான் நான் அங்க போக போறேன். உங்க பெரிய கருப்பண்ணன் கண்ணில நான் படாம இங்கிருந்து தப்புறது தான் முக்கியம். இந்த நேரத்துல என் உயிரைக் காப்பாத்துற உங்களை கேவலம் பணத்துக்காக ஏமாத்த மாட்டேன். எங்க அப்பா கிட்ட ஏராளம் பணம் கொட்டி கிடக்குது. போனா போகட்டும் அதில கொஞ்சம் நீங்களும் அனுபவிச்சுக்கோங்க………
ஏய் என்ன நாங்க என்ன பிச்சைக் காரங்களா, நீ எங்களுக்கு போனா போகட்டும்னு தர, அதான் உன் கூட வர்றவன் கிட்ட துப்பாக்கி இருக்கே, நீ ஏதாவது திருட்டுத்தனம் பண்ணே அங்கயே உன்னை போட்டு தள்ளிட்டுதான் வேற வேலை……
ஸாரின்னே…..நான் அப்படி சொன்னதுக்காக கோச்சுக்காதீங்க, எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க நான் உங்களுக்கு தர வேண்டியதை நிச்சயமா தந்திடுவேன், அதை மாதிரி இங்க யார் கண்ணிலும் படாம போயிடுவேன். உனளுக்கும் என்னால ஒரு தொந்தரவும் இருக்காது, உங்க பெரிய கருப்பண்ணன் கண்னுலயும் நான் பட மாட்டேன் என்று கெஞ்சினான்.
பின்னர் அதன் படியே எல்லாம் நடைபெற தாமஸிக்கு விபரம் வந்துச் சேர்ந்தது. அதற்க்கிடையில் ரூபனுக்கு இசைவாக மகளுடனான் நிச்சயம் குறித்த நிகழ்வுகளை பேச ஆரம்பித்தார். மனைவி, பேத்தி மருமகளையும் அவளை சந்திக்க அனுப்பி வைத்தார். அப்பா விட்டாலும் நான் விடுவேனோவென எல்லா விஷயத்திலும் கிறிஸ் அவனோடு முரண்டிக் கொண்டு நிற்க, தான் திடீரென நல்லவராவது எல்லோர் கண்ணிலும் உறுத்தும் என்று அவர் மாறாத அதே கெத்தோடு இருந்துக் கொண்டார்.
அவரது தொழில்முறை வேலைகளுக்காக வைத்திருக்கும் நபர்கள் தான் அவர்கள். மிரட்டுவது வரைக்கும் தான் அவர் நடந்துக் கொள்ளுவார், தவறான வேலை எதுவும் இதுவரை செய்ததில்லை. மகள் விஷயத்தில் விக்ரமை கொன்று விடலாமா என அவருக்கு வெறியே வந்தது, ஆனாலும் அந்நேரம் இரவும் பகலும் ஜெபிக்கும் மனைவி தான் அவர் கண் முன் வந்தார்..
கணவர் வேலை அவருக்கு புரியுமோ என்னவோ, ஆனால் அடிக்கடி “நாம செய்யிற ஒவ்வொண்ணுக்கும் பலன் நம்ம பிள்ளைங்க வாழ்க்கைக்கு வரும்ங்க, நம்மளால நல்லது செய்ய முடியாட்டாலும், தப்பா எதுவும் செஞ்சு அவங்க தலையில சாபத்தை ஏத்தி வச்சிடக் கூடாது என்று பேசுவார்” தனக்கு தெரிந்தும் தெரியாமலும் மனைவி செய்யும் அனேக நல்ல காரியங்கள் அவருக்கு தெரியும்.
யார் உதவி என்று வந்தாலும் மறுப்பதில்லை, செய்து விட்டு போகட்டும் என்று அதை இவர் கண்டுக் கொள்வதுமில்லை. அதனால் தானோ என்னவோ இன்றைக்கு அவரது மகள் வாழ்க்கை காப்பாற்றப் பட்டிருக்கின்றது தான் விக்ரமை கொலை செய்தால் தன்னுடைய இரத்தக் கறை படிந்த கரங்கள் பிள்ளைகளுக்கு சாபம் கொண்டு வந்து விடக் கூடாதே என அஞ்சினார்.
அதே நேரம் அவனை அப்படியே விட்டு விடவும் அவரால் முடியாது. பாடம் கற்பித்தாக வேண்டும், தன் மகளை இன்னொரு முறை எட்டிப் பார்க்கும் படி கூட அவன் துணியக் கூடாது என்ற உறுதி அவர் மனதில் எழ அவர் சொன்ன படியே விக்ரமிற்கு உயிர் பயம் காட்டும் அந்நிகழ்வு அரங்கேற்றப் பட்டது.
நிச்சயத்திற்க்கு முன் தினம் தான் அவன் தன் தந்தையின் பிசினஸ் இருக்கும் நாடொன்றிற்க்கு சென்று விட்டதாய் தகவல் கிடைத்தது. பெரிய கருப்பன் என்கின்ற முகமறியாத, நிஜத்தில் இல்லவே இல்லாத கற்பனை கதா பாத்திரமான அந்த எதிரியை எண்ணி அவன் ஒரு போதும் அனிக்காவை நெருங்க போவதில்லை. பழி வாங்குவதை விட தன் உயிரைக் காப்பதே சிறந்தது என்கின்ற பாடத்தை அவன் கற்றுக் கொண்டான் இதுவே எனக்குப் போதும் என்று அவருக்கு தெளிவு பிறந்தது.
ரூபனை எந்த அளவிற்கு படுத்தி இருந்தால் அவன் கோபம் கொண்டு அடித்திருப்பான், அவனை தவறாக எண்ணினோமே என்று பல நாளாய் மனதில் அவன் குறித்து இருந்த தவறான எண்ணமும் அகன்றது.
மன மகிழ்ச்சியோடே மகளை சந்திக்க நிச்சயதார்த்தம் அன்று சென்றிருக்க, மகள் மன்னிப்பு கேட்டு அழுது கரைய, நீ அல்ல தவறு செய்தது நான் தான் என மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.
ஹாலிற்கு சென்றால் அங்கு ரூபனை பல்வேறு ஏற்பாடுகளில் உழன்றவனாக கண்டார். அவனுக்கு இன்னும் விக்ரம் விஷயம் தெரியாது, தெரிவித்தால் நிம்மதியாக இருப்பானே எனத் தோன்ற தனியே அழைத்து ஓரளவு விளக்கமாக கூறினார்.
தான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை எனக் கூறவும், தானும் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, ஜீவனுக்கு கூட விக்ரம் விஷயம் தெரியாது. அனிக்கா பயந்து விடுவாளென்று இது குறித்த எந்த தகவலும் தான் தெரிவிக்கவில்லை என்றதும் மருமகன் மேல் மிகவும் மதிப்பு கூடியது அவருக்கு, வாய்விட்டு சொல்லாவிட்டாலும் தன்னைப் போலவே அழுத்தக் காரனாய் இருக்கும் மருமகனை மிகவும் பிடித்துக் போனது.