என்னை அவ அம்மா வீட்டுக்கு வந்ததும் முசுட்டு மாமா, அத்தான் கூட கோர்த்து விட்டுட்டு ஜாலியா விளையாடிட்டு இருக்கா என அனிக்கா குறித்து மனதில் முறு முறுத்துக் கொண்டவனை காப்பாற்றுவதற்காகவே சரியான நேரத்தில் ஜீவன் அங்கு வந்துச் சேர்ந்தான்.
ஒருத்தரையும் விடாமல் அவன் கேலி பேசி வைக்க , அவன் மனம் நோக வைக்காமல் சிரிக்க வைக்க தெரிந்தவன் என்றதால் எல்லோரும் அவன் பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தனர். மறக்காமல் அனிக்காவையும் பேச்சோடு பேச்சாய் இழுத்து கிண்டலாய் பேசிக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவன் பேச்சில் அவளுக்கு ரொம்பவே கோபம் வர, இப்போது அடக்க ஒடுக்கமாய் இராமல் சண்டைப் போட்டால் அம்மாவிடம் வாங்கி கட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் ராபின் காதில் ரகசியமாய்
“உன் சித்தப்பாக்கு ஒரு அடி கொடுத்துட்டு வா செல்லம்” எனச் சொல்ல, அவன் சித்தி சொன்னதை தப்பாமல் செய்தவனாய் போய் ரூபனுக்கு ரெண்டு அடி வைத்தான். அத்தோடு விடாமல்
“சித்திதான் உங்களை அடிக்க சொன்னாங்க சித்தப்பா” என்று அவளை போட்டும் கொடுத்தான்.
திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் ரூபனுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய அவளைப் பார்த்துச் சிரித்தான். மகனை மடியில் அமர்த்தியவன்,
‘சித்தி சொன்னது சித்தப்பாவை இல்ல உங்க ஜீவா சித்தாவை” என சொல்லிக் கொடுக்க, கர்ம சிரத்தையாய் அவனும்,
“ஏன் சித்தி சித்தாவையா அடிக்கணும்” என்றுக் கேட்டு வைத்தான்.
இவன் இன்னிக்கு எங்க அம்மாகிட்ட திட்டு வாங்கவைக்காம விட மாட்டான் போலயே என்று ஹி ஹி என அவள் சிரித்து வைக்க ஜீவனை அடிக்க முன்னேறினான் அனிக்காவின் கையாள்.
ஏண்டா நீ ஒரு பொடிப்பையன், என்னையே அடிச்சிருவியா…..என மிரட்டி பார்த்த ஜீவன் அவன் பின் வாங்குவதாக இல்லை எனவும் ஓட ஆரம்பித்தான் பின்னால் ராபினும் ஓட இவர்கள் கலாட்டாவை பார்த்தவர்களுக்கு சிரித்து முடியவில்லை.
மதிய உணவு நேரம் மணக்க மணக்க அசைவ உணவுகள் பறிமாற தொடர்ந்து இனிப்புகள் சாப்பிட்டு கண்கள் சொக்க தாமஸ் மதிய தூக்கம் போட எழுந்தார். ஜீவன் வீட்டுக்கு புறப்பட்டவன் ராபினோடு ஹனியையும் கூட்டிச் சென்றான்.
நீங்க ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என அனிக்காவையும் ரூபனையும் சாரா சொல்ல அவர்கள் அனி ரூம் சென்றனர்.
தன் அறையில் மகிழ்வாய் நின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,
ஏன் அனி உன் ரோஜா செடிக்கு என்னை இன்ட்ரோ செய்ய மாட்டியா? எனச் சொல்ல,
என் செடிக்கு உங்களை நல்லா தெரியுமே, அதுக்கு பேச தெரிஞ்சா அதுவும் உங்களை அத்தான்னு கூப்பிட்டிருக்கும் என கல கலவென சிரித்தாள்.
அப்ப அது உன் தங்கையா?
ஆமாம் என தலை அசைத்தவள். நான் அன்னிக்கு மாதிரி தான் எப்பவும் என் செடி கூட, டெடி கூட ஏன் இந்த பெட் கூடவும் பேசுவேன். என்றவளாய் சிரிக்க, மலர்ந்த அந்த கன்னங்களை பிடிக்க வந்தவனை தட்டி விட்டாள்.
நேத்தே வச்சு என் கன்னத்தை ஒரு வழியாக்கிட்டீங்க…… போங்க அங்க….
என்ன பண்ணேன் கிஸ் தான பண்ணேன்…..என்றவனாய் இன்னும் நெருங்கி வர இரு கரங்களையும் கொண்டு கன்னங்களை பாதுகாத்து மூடிக் கொண்டாள், பாவம் அவள் இதழ்கள் மாட்டிக் கொண்டன.
முத்தம் கொடுத்து, எடுத்து கள்ளுண்டவண்ணம் கண்கள் சொருகி, மயங்கி நின்றவன், கைகளில் அவளை அள்ளிக் கொள்ள குனிந்தான். இரவு விட்ட பாடம் மீண்டும் தொடர்ந்தது.
தூக்கம் கலைந்து எழ தன்னையே பார்த்திருந்தவளுக்கு தன் கைகளை விரிக்க அவளும் சுகமாய் அவன் மார் சேர்ந்தாள்.
அனி
ம்ம்ம்
நீ மட்டும் இல்லின்னா நான் லைஃப்ல என்ன ஆயிருப்பேன்னே தெரில………
ஒரு நாளும் இல்லாமல் மனம் திறந்து பேச எண்ணுகிறவனை இடையூறுச் செய்யாமல் கவனிக்கலானாள்.
இப்ப உன்னை பார்க்கையில தான் மனசுக்கு ஒரு விஷயம் தோணுச்சு. உனக்கு வீட்டுல உன் வயசில பேச, விளையாட ஆளில்லைன்னதும் அதைக் கூட விளையாட்டா எடுத்துட்டு செடி கூட , டெடி கூட பேசுவேன்னு சொன்ன இல்ல, அதுமட்டும் இல்லாம வலிய வந்து ஜீவன் கிட்ட வம்பிழுப்ப, அம்மா கூட கொஞ்சி கிட்டு அவனை வெறுப்பேத்துவ, ஆனா எப்பவும் உன் முகத்துல ஒரு சிரிப்பு, மலர்ச்சி அது இருந்துட்டே இருக்கும், நீ சந்தோஷமா இருக்கிற்தோட மட்டுமில்லாம உன் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களுக்கும் அதே சந்தோஷத்தை தர்றவ நீ.
விளையாட்டுத்தனமானவன்னு சொல்லியும் உன்னை தட்டிக் கழிக்க முடியாது. அத்தனை விளையாட்டிலயும் உன் கிட்ட ஒரு அக்கறை இருக்கும். உன்னைப் பார்த்து பார்த்து தான் நான் வாழ்க்கையை வாழ கத்து கிட்டேனோ என்னவோ தெரில, ஆனா நீ இல்லாம வாழவே முடியாதுன்னு மட்டும் ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சிட்டு.