15. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே”
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் கூற்றிற்கேற்ப அந்த பாடலிலே உருகியவள் கண்திறந்தபோது அந்த ஈசன் அற்புத கோலத்தில் அவளுக்காகவே காட்சியளிப்பதாய் தோன்றியது..பிரகாரத்தை சுற்றி வந்தவள் கண்ணில் படுவர்களெல்லாம் அளிக்கும் புன்னகைக்கு பதில் புன்னகையளித்தவாறு வீடு வந்து சேர்ந்தாள்..
சாமி நீ பக்கத்து ஊருக்கு போனும்னு சொன்னியே போலயா என்றவாறே உள்ளே நுழைய எத்தனிக்க பக்கத்து வீட்டு பாட்டி அவளிடம்,ஏ கழுத எத்தனைதடவ சொல்றேன் அப்பன பேரு சொல்லி கூப்டாதநு கேக்குறியா நீ நாளைக்கே கல்யாணம் ஆகிப் போனா உன் புருஷனயும் இப்படிதான் கூப்டுவியா??
ஏ கிழவி எங்கப்பன நா கூப்டுறேன் உனக்கு ஏன் வலிக்குது..போய் வேலையப் பாரு என்றவாறு உள்ளே நுழைந்தாள்..சாமி வழக்கம்போல் விளக்கின்முன் நின்று சிவ பெருமாளை வேண்டிநிற்க அவரின் அந்த திருநாமமும் உடலில் இருந்த விபூதியும் தெய்வகடாச்சமான முகமும் 15 வருடத்திற்கு முன் அவள் எப்படி பார்த்தாளோ அப்படியே இருப்பதாய் தோன்றியது..அவளுக்கு ஐந்து வயதாய் இருக்கும் போது பஞ்சத்தின் காரணமாக அவளின் பெற்றோர்கள் இறந்துவிட தெரிந்தவர்களோடு இந்த ஊருக்கு வந்துவிட்டாள்..யார் யாரிடமோ உதவி கேட்டும் பெண் பிள்ளை என்பதால் யாரும் வேலைக்குகூட ஏற்றுக் கொள்ளாமல் போக கோவிலுக்கு வந்தவள் அந்த சிவனை பார்த்தவாறே பசி மறந்து உறங்கியும்விட்டாள்..
அப்போது சாமி அவளை பார்த்து அர்ச்சகரிடம் விசாரிக்க அவர் விவரம்கூற அவளருகில் சென்றவர் அவளை எழுப்பி தன்னோடு வருகிறாயா என்று கேட்க அந்த பிஞ்சு மனதில் என்ன தோன்றியதோ ம்ம் என்று தலையசைத்தவாறு அவரோடு சென்றாள்..அன்றிலிருந்து அவளை தன் மகளாகவே வளர்த்தார்..தன் வாழ்க்கையே தேவிகா தான் என்றவர் இருக்க தேவிகாவிற்கு உலகமே சாமி தான்..அடிப்படையில் பயந்த சுபாவமுடையவள் ஆதலால் யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகிவிட மாட்டாள்.அவரோடு அனைத்து ஊர் கோவிலுக்கும் திருவிழா சமயங்களில் சென்று அவருக்கு உதவியாய் இருப்பாள்.. இப்படியாய் நாட்கள் நகர அன்று காலையே அவள் தோழிகள் அவளை அழைத்துச் செல்ல வந்தனர்..
ஏ புள்ள தேவிகா நம்ம பண்ணையார் தோட்டத்துல மாங்காய் சரசரமா தொங்குது வா போய் பறிச்சுட்டு வரலாம்..
அய்யய்யோ திருடியா நா வரமாட்டேன்ப்பா மாட்டினா அவ்ளோதான்..
ஏய் பண்ணையார் ஊர்ல இல்ல அதனாலதான் உன்னையும் கூப்டுறோம் இல்ல நீயே எங்கள மாட்டிவிட்டுருவநு எங்களுக்கு தெரியாதா பேசமா வா விரசா போய்ட்டு வந்துரலாம்..
அரைமனதாய் அவர்களோடு சென்றவள் எவ்வளவு கேட்டும் உள்ளே செல்ல மறுத்துவிட்டாள்..சரி இங்கேயே இருந்து யாராவது வந்தா சத்தம் குடு நாங்க வேகமா வந்துரோம்..இந்தா இதெல்லாம் கைல வச்சுக்கோ என அங்கு விழுந்திருந்த பழங்களை அவளிடம் குடுக்க தாவணி தலப்பில் அவற்றை வாங்கியபடி நின்றாள்..சற்று நேரத்தில்தோளில் ஏதோ உரச பூச்சியோ என பதறி துள்ளியவளள் கையிலிருந்த பழங்கள் கீழ விழ பின் திரும்பிபார்க்க கையில் கம்போடு ஆறடி உயரத்தில் நின்றவனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்..
இப்படியா கூப்டுவீக நா பாம்போ என்னவோநு பயந்தே போய்ட்டேன் ஆமா நீங்க யாரு என்ன ஏன் கூப்டீக??என்றவாறே கீழிருந்த பழங்களை ஒவ்வொன்றாய் எடுத்து மறுபடியும் தாவணிக்குள் வைக்க..அவனோ ஒன்றும் கூறாமல் அவளையே பார்த்திருந்தான்..
என்ன நா கேட்டுட்டே இருக்கேன் வாயே தொறக்காம நிக்கீக ஓஓ நீங்களும் மாங்கா திருடதான் வந்தீகளா???
அடியே தேவிகா அவருதான் பண்ணையாரு ஓடிவாடி சீக்கரம் வா என்று கத்திக் கொண்டே அவள் தோழிகள் ஓட நடப்பதை உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு..பயத்தில் கைகள் நடுங்க அவனிடம் பழங்களை நீட்ட கடைசியாய் வந்த தோழி ஒருத்தி அவள் கைப்பற்றி இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்க அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறே செல்பவளை கண்களுக்குள் நிரப்பினான் நம் கார்த்திகேயன்..
பண்ணையாரின் ஒரே மகன்..நான்கு வருடங்களுக்கு முன் பண்ணையார் தன் மனைவியோடு வெளியூரில் படித்துக் கொண்டிருந்த தன்மகனான கார்த்திகேயனை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்தில் இறந்துவிட்டார்..