(Reading time: 18 - 36 minutes)

கல்யாணம் முடிந்து மருமகள் வந்ததும் தன் வீட்டின் மச்சுவீட்டில் தான் மகளுக்கு பார்த்து பார்த்து சீதனத்திற்கு சேர்த்த சாமான்களையும் நகைகளையும் பூட்டிவைத்தாள் அந்த அறையின் சாவியை எப்பொழுதும் இடுப்பிலேயே சொறுகி வைத்திருப்பாள்.

நேற்றிலிருந்து தன் மகள் சாப்பிடாமல் கொள்ளாமல் கல்லூரியில் காம்பஸ் இண்டர்வ்யூ மூலம் தனக்கு கிடைத்திருக்கும் வேலையில் சேருவேன் என்று அடம்பிடித்து வயிற்றை காலிபோட்டுக்கொண்டு இருப்பதை பார்த்த ராசாத்திக்கு கொஞ்சம் மனம் இளகியிருந்தது

இதில் இன்று காலை தன் மகனும் நல்ல வரன் கிடைக்கும் வரை வேலைக்குப் போகட்டுமே.. என்று சொன்னதும் இன்னும் கொஞ்சம் மனம் இறங்கி அழகி வேலைக்கு போக சரி சொல்லிவிடலாமா? என்று யோசனையுடன் இருந்தவள்,. இருட்ட ஆரம்பித்தப் பிறகும்  சாப்பிடாமல் இருந்த தன் மகளுக்கு தட்டில் சாப்பாடை எடுத்து கொண்டுபோய் அழகி ஏட்டி இடும்பி.... எந்திரிச்சு உட்கார்ந்து சாப்புடு என்று எழுப்பினாள்.

அவள் அம்மா சமையல் அறையில் இருக்கும் போது அவளுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த வாழை பழத்தை மொக்கிக்கொண்டு இருந்தவள் தன் அம்மா வரும் அரவம் உணர்ந்து சுவர் புறம் திரும்பி படுத்துக்கொண்டு வாயில் இருந்ததை முழுங்கி கொண்டிருந்தவளிடம் சாப்பிடு என்று அம்மா தட்டுடன் உட்காரவும் தான் உடுத்தியிருந்த தாவணியை கொண்டு தான் உண்ட சுவடு தெரியாதவாறு துடைத்துக்கொண்டே உட்கார்ந்த அழகு, அப்போ நான் வேலைக்கு போகலாமா அம்மா? என்று முகம் முழுவதுவும் புன்னகையுடன் கேட்டாள் .

அது தான் என் மவன் உனக்கு நல்ல இடம் தவயர வரை உன்னை வேலைக்கு அனுப்பலாமுனு சொல்லிப்புட்டான்ல, எப்படியோ நீ நினைச்சத சாதிச்சுப்புட்டேன்னு மெப்பனையா இருக்காதே.

வேலைக்குபோர இடத்தில சூதானமா வேலைக்கு போனமா வந்தமான்னு இருக்கணும். நம்ம ஊருல அங்கங்க நின்னு சோடி பொண்ணுக கிட்ட அரட்டயடிக்கிரமாதிரி சிரிச்சு பேசக்கூடாது .கூட வேலை பார்க்கிற இளந்தாரிகளுடன்  பேசவே கூடாது .

வேலை முடிஞ்சதும் நீ தங்கியிருக்கிற இடத்துக்கு போயிடனும் கடகன்னிக்கு போகறசோளி எல்லாம் உங்க அண்ணன்  உன்னை பார்க்க வரும் போது கூட போகணும். தனியா பொம்பள பிள்ளைக கூட போகக் கூடாது

என்று ஆயிரம் புத்திமதிகளை  அவளுக்கு சொன்னபடி தன் மகளின் தட்டில் இட்டிலிகளையும் கோழிக் குருமாவையும் குறைய  எடுத்து வைத்தாள்.

தம் அம்மா சொல்லியதற்கெல்லாம் ம்...கொட்டிக்கொண்டே சாப்பிட்டவள் என்னம்மா உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகுன்னு சொல்லி நான் சாப்பிடும் போதெல்லாம் சாப்பாடு சட்டியை தள்ளி வைப்ப, இன்னைக்கு மட்டும் என்ன பாசம் பொங்கி வழியது... என்று சொல்லி கொண்டே தட்டில் இருந்ததை வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தாள் அழகி.

அழகிக்கு அசைவச் சாப்பாடு என்றாள் வஞ்சனையில்லாமல் வயிற்றில் இடம் இருக்கும். அதே நேரம் சைவச் சாப்பாடு என்றாள் இம்புட்டு ஏம்மா தட்டுல வைக்கிற என் வயிறு என்ன பானையா? என்று கேட்டபடி தன் அம்மாவிற்குத் தெரியாமல் தன் அண்ணன் தட்டில் காய்கறிகளையும் சாப்பாட்டையும் அள்ளி வைத்துவிட்டுவாள்.

மகளின் குணம் அறிந்த ராசாத்தி காய் கடிக்க உன் ருசிகண்ட நாக்கு தடிச்சுப்புடும் அதே நேரம் கறிசாப்பாடுன்னா ஏ..மவன் சோத்தையும் கறியையும் ஒத்த ஆளா நீ முழுங்கிப்புடுவே... எனக்குத் தெரியாதாடி உன்வவுசி. நீ சாப்பிடாம வயித்த நேற்றிலிருந்து காயப்போட்டு கிடக்கேயேனு கூட இரண்டு இட்டிலி வைத்தால் என்னையவா நீ உரசிப் பாக்குற என்று கோபம போல சலித்துக்கொண்டாள்.

றுநாள் காலை, அண்ணி வாணி அழகியிடம் வந்தவள்  உன் அண்ணன் வெளிய வண்டில காத்துக்கிட்டு இருக்காரு அழகி, பேசிட்டு இருக்காம வெரசா வரச்சொல்றாரு உன்னை, என்று கூறினாள்.

தோளில் ஒரு பேக்குடன் தரையில் இருந்த இரண்டு பேக்குகளை கைக்கு ஒன்றாக தூக்குவதற்கு குனிந்தவளை, ராசாத்தி  “நீ எத்தனையைத்தான் தூக்குவ” என்றவள்,  வாணியிடம் நீ ஒன்ன கையில தூக்கிட்டுப்போய் அழகி அவன் அண்ணன் பின்னாடி வண்டில ஏறியதும்  கொடு என்றாள் .

அவள் அத்தை சொன்னதும் அந்த இரண்டையும் தன் கைகளில் தூக்கியவள், மனதிற்குள் சும்மாவே இந்த ராங்கிக்காரி அழகு ரொம்ப ஆட்டம் போடுவாள், இனி கைநிறைய சம்பளம் வாங்கினால் என்னை மதிக்கவே மாட்டாள். இப்பவே இவ ஆத்தாகாரி இவளுக்கு என்ன பொட்டித் தூக்க வச்சுட்டா....  என்று மனதிற்குள் அவளை அர்ச்சனை பண்ணிக்கொண்டே நடந்தாள்.

அழகியின் அம்மாவிற்குத்தான் அவளை அனுப்புவதற்கு மனசே இல்லாமல் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு தன் மகள் மகனின் பின் பைக்கில் உட்கார்ந்ததும் முன்னால் இருந்த பெட்ரோல் டேங்கின் மேல் ஒரு பேக்கையும் இருவருக்கும் நடுவில் ஒரு பேக்கையும் வைத்தவள்  மகளை நல்லா உட்கார்ந்துக்கோ புள்ள என்று கூறினாள்

ஆனால் அழகியின் மனது பட்டணத்து வாழ்க்கையை ருசி பார்க்கும் ஆசையோடு சந்தோசமாக தன் அம்மாவையும் அண்ணியையும் பார்த்து போய்ட்டுவர்றேன் என்று கூறினாள். வீட்டை விட்டு போகும் மனச்சினுக்கத்தை துளி முகத்தில் பிரதிபலித்தாலும், ராசாத்தி அவளை அனுப்ப மறுத்துவிடுவாள் என்பதால் முகத்தில் மலர்ச்சியை மட்டுமே காண்பித்தாள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.