(Reading time: 14 - 28 minutes)

அமேலியா - 27 - சிவாஜிதாசன்

Ameliya

திசய பொருளைக் கண்டது போல் ஏராளமான மனிதர்கள் அங்கே குழுமியிருந்தனர். அனைவரின் முகத்திலும் வியப்பு கலந்த சொல்ல முடியா எண்ண ஓட்டம். கூட்டம் இருந்தால் சலசலப்புகள் தென்படும்  ஆனால், அங்கே ஆழ்ந்த நிசப்தம். மனிதர்கள் அனைவரும் சிலையெனவே மாறிவிட்டார்கள்.

அலுவலக நுழைவாயிலில் என்ன இவ்வளவு கூட்டம் என வியந்த  ஜெஸிகா கூட்டத்தோடு கலந்து என்னவென்று பார்த்தாள். முதலில் அவள் கண்களுக்கு கூட்டத்தின் மத்தியில் இருந்த வசந்த் தென்பட்டான். எதற்கு எல்லோரும் வசந்தை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என குழம்பியவள் அடுத்த நொடியே காரணத்தைப் புரிந்து கொண்டாள். வசந்தின் அருகில் அமேலியா வரைந்த ஓவியம் பளிச்சிட்டது.

ஒரு நிமிடம் தன் மானுடப் பிறவியே மறந்து போகும் அளவிற்கு ஸ்தம்பித்து நின்றாள் ஜெஸிகா. அலுவலகத்திற்குள் நுழையும் வரை இருந்த டென்ஷன் கவலை எல்லாம் அவளை விட்டு விலகியது போல் ஓர் உணர்வு. ஓவியத்தை பார்த்தபடியே வசந்தின் அருகே சென்றாள். எப்படி பேசுவதென்றே அவளுக்கு தோன்றவில்லை. அவள் சிந்தனை முழுவதும் ஓவியத்திலேயே நிலைத்திருந்தது.

எல்லோருமே தங்களை மறந்து ஓவியத்தை தரிசித்துக்கொண்டிருக்க, வசந்த் மட்டும் பரிதாபமான முகத்தோடு காட்சி தந்தான்.

கையில் ஓவியத்தோடு அலுவலகத்திற்கு வந்த வசந்திடமிருந்து பிரியப்பட்டு ஓவியத்தை வாங்கி பிரித்துப் பார்த்த நண்பர் ஒருவர் மலைத்துப் போனார். தன் சக நண்பர்களுக்கும் ஓவியத்தைக் காட்ட ஒன்றன் பின் ஒன்றாக கூட்டம் வந்து சேர்ந்தது.

நீண்ட பெருமூச்சை விட்ட வசந்த்.தன் அருகிலிருக்கும் ஜெஸிகாவை பார்த்து 'இவள் எப்பொழுது வந்தாள்' என லேசாக அதிர்ந்தான்.

"ஜெஸ்ஸி"

அவள் சிலையென நின்றிருந்தாள். வசந்த் அழைத்தது அவள் காதுகளில் விழவில்லை. மீண்டும் ஜெஸ்ஸி என அழைத்தபடி அவள் தோள்களை மெதுவாக குலுக்கினான். அதிர்ச்சியோடு சுய நினைவுக் கூட்டினுள் புகுந்த ஜெஸிகா வசந்தை நோக்கினாள்.

"வசந்த், இந்த ஓவியத்தை யாருடா வரைஞ்சது? அற்புதமா இருக்குடா. எனக்கு என்ன வார்த்தை சொல்லுறதுனே தெரியல"

"அந்த பொண்ணு தான் வரஞ்சி கொடுத்தா"

"யாரு? ஈராக்ல இருந்து வந்திருக்காளே...." என ஜெஸிகா வாக்கியத்தை முடிப்பதற்குள் தன் கைகளால் அவள் வாயை பொத்தினான் வசந்த். சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள் என கண்களால் எச்சரித்தான்.

அவனது எச்சரிக்கையைப் புரிந்துகொண்ட ஜெஸிகா வசந்திற்கு மட்டும் கேட்கும் தொனியில் மெதுவாக பேசினாள். "அமேலியாவா?"

"ஆமா"

"நீ ஒண்ணும் விளையாடலயே? நிஜமாவா சொல்லுற?"

"நான் எதுக்கு பொய் சொல்லணும்?"

"அட்டகாசமா வரைஞ்சிருக்காடா. இந்த ஓவியம் பாக்குறவங்களை வசியம் பண்ணிடுது"

"ம்"

"அந்த பொண்ணுகிட்ட ஓவியம் வரையுறதை எப்படி எடுத்து சொன்ன? அவ நம்ம மொழிய புரிஞ்சிக்குறாளா?"

"நான் எங்கே சொன்னேன். அவளா வரஞ்சி கொடுத்தா. அதுவும் அவ இஷ்டப்படி"

"புரியலையே"

ஓவியமாய் வரைய வேண்டிய புகைப்படத்தை ஜெஸிகாவிடம் நீட்டினான் வசந்த். அதை வாங்கி பிரித்துப் பார்த்த ஜெஸிகா ஓவியத்தையும் புகைப்படத்தையம் மாறி மாறி பார்த்தாள்.

"என்னடா போட்டோவிற்கும் ஓவியத்திற்கும் சம்மந்தமே இல்லை. முகம் மட்டும் தான் ஒற்றுமை, மத்ததெல்லாம் வேறமாதிரி இருக்கு"

"அதான் இப்போ பிரச்சனையே. டைரக்டர் என்ன சொல்ல போறாருனு பயமா இருக்கு"

"போட்டோல இருக்க போல வரஞ்சி கொடுன்னு அமேலியா கிட்ட சொல்ல வேண்டியது தான?"

ஜெஸிகாவை வசந்த் முறைத்தான்.

"புரியுது. நான் என்ன சொல்ல வரேன்னா, சைகையில் கைய கால ஆட்டி பேசுவாங்களே அப்படி சொல்லியிருக்கலாமே?"

"நேத்து வரைக்கும் வரையமாட்டான்னு நினைச்சிட்டு இருந்தேன். திடீர்னு காலைல வரஞ்சி வச்சிருக்கா. நான் என்ன செய்யுறது?"

"இந்த நிலைமையை எப்படி கையாள போற?"

"அதுக்கு வேறொரு திட்டம் வச்சிருக்கேன்"

"என்னது?"

"லூயிஸ்னு ஒரு ஓவியர்கிட்ட ஓவியம் வரைய சொல்லி வாங்கிட்டு வந்திருக்கேன். அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதமா இல்லை. இரண்டு நாள் பெர்மிஷன் கிடைக்கலாம். அதுக்குள்ள புது ஓவியரை பார்த்து வேலையை முடிச்சிடுவேன்"

"பழைய ஓவியர் என்னாச்சு?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.