(Reading time: 14 - 28 minutes)

"என்ன சொல்ல போற? ஜான்கிட்ட போய் அசிங்கபடுன்னு சொல்லபோறியா?"

"உனக்காக தானே உதவி கேக்க போறேன். நீ வரலைனா எப்படி? அதுவும் இல்லாம நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு. நீ இப்படி முரண்டு பிடிக்குறதுல அர்த்தமில்லை"

உட்கார்ந்தபடியே காரின் கதவை படாரென வேகமாய் சாத்தினாள் ஜெஸிகா. அந்த செயலே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை காட்டியது.

"போய் தொலை"

கார் மீண்டும் புறப்பட்டது.

வசந்தின் கண்கள் சாலையின் இரு பக்கங்களிலும் நிரம்பியிருந்த இயற்கை பசுமையை ரசித்தபடி இருந்தன. மிதமான பனி மூட்டம் பசுமையை லேசாக மறைந்திருந்தாலும் அதன் அழகை பன்மடங்கு அதிகப்படுத்தி காட்டியது.

"ரொம்ப அழகான இடத்தை தான் ஜான் தேர்ந்தெடுத்திருக்கான்"

"அது என்னவோ உண்மை தான் ஜெஸ்ஸி" சாலையை பார்த்தபடியே கூறினான். "ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி எல்லாம் அழகை ரசிக்குறேன்னு தோணுது ஜெஸ்ஸி"

வசந்தை கேள்விக்குறியோடு நோக்கினாள் ஜெஸிகா.

"ஏதோ ஒரு பெரிய ஆபத்துல இருந்து விடுபட்டது போல உணர்வு"

"நீ நிம்மதியா இருக்க நான் தான்..." ஜெஸிகா தான் கூற வந்த வாக்கியத்தை முடிக்காமல் விட்டாள்.

"நிச்சயமா அவளுக்குள்ளே அற்புதமான திறமை ஒளிஞ்சிருக்கு"

"யாரு?"

"அமேலியா தான்"

"ம்"

"அந்த ஓவியத்தை பார்த்தியா. பல விஷயங்கள் அதுல ஒளிஞ்சிருக்கு"

"ம்"

"அவ வரைஞ்சு கொடுக்கமாட்டான்னு தான் நினைச்சேன். என்னை அவளுக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா கடைசி நிமிசத்தில வரைஞ்சு கொடுத்துட்டா. அவளுக்கு எவ்வளவு நல்ல மனசு"

"ம்"

"என்ன நீ, நான் சொல்லுற எல்லாத்துக்கும் ம்ம் போட்டுட்டு இருக்க"

"யோசிக்கிறேன்"

"என்ன யோசனை?"

"நீ அமேலியா பத்தியே பேசிட்டு வரியே. அந்த விஷயம் தான்"

வசந்த் அமைதியானான். ஜெஸிகா சொல்வது உண்மை தான் என எண்ணினான். நான் ஏன் அமேலியா பற்றி சிந்திக்கிறேன் என தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டாலும் அவளைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

மேற்கொண்டு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பயணம் மட்டும் தொடர்ந்தது. இருவருக்கும் வெவ்வேறான எண்ண ஓட்டங்கள். அதில் ஆயிரமாயிரம் கேள்விகள். எதற்குமே அவர்களுக்குள் விடையில்லை.

வசந்த் அமேலியாவின் மீதிருந்த எண்ண ஓட்டத்தில் இருந்து விடுபட்டு தன் கவனத்தை இயற்கையின் மீது திருப்பினான். 

ஒருவழியாக ஜானின் வீட்டை இருவரும் அடைந்தார்கள். காரின் கதவைத் திறந்து கீழே இறங்கிய வசந்த், குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தன் கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டான்.

"ஜெஸ்ஸி இன்னும் நீ கார்ல எண்ண பண்ணிட்டு இருக்க?"

படபடப்போடு இருந்த ஜெஸிகா வசந்த்தை நோக்கினாள். "நான் கார்லயே இருக்கேன் வசந்த். நீ ஜான்கிட்ட பேசிட்டு வா"

"ஜெஸ்ஸி"

"இறங்கி தொலைக்கிறேன், எல்லாம் என் நேரம்"

"இன்னைக்கு ரொம்ப குளிரா இருக்கு"

"சரி வா, அவன்கிட்ட பேச வேண்டியதை பேசிட்டு சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடலாம்"

"ஏன் அவசரப்படுற ஜெஸ்ஸி, கொஞ்சம் பொறுமையா இரு. இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு. கொஞ்ச நேரம் ரசிக்கலாம்" என சுற்றும் முற்றும் பார்த்தபடி வசந்த் கூறினான்.

"அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை வசந்த். என் பொறுமையை சோதிக்காத"

அவள் கூறியதை எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாத வசந்த், தன் பேண்ட் பையில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.

"இதுவரைக்கும் ஜானுக்கு ரசனையே இல்லைனு தப்பா நெனச்சிட்டேன். ஆனா இந்த மாதிரி ஒரு இடத்தை செலக்ட் பண்ணிருக்கிறத பார்த்தா அவனுக்குள்ள பயங்கரமான கலா ரசிகன் ஒருத்தன் ஒளிஞ்சிட்டு இருக்கானோனு தோணுது"

"விட்டுட்டேன்னு சொன்ன"

"எது?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.