விவேக் ஸ்ரீநிவாசன் - 11 - வத்ஸலா
‘நான் எங்கே போனாலும் வந்து நிக்கறானே இவன்??? எரிச்சலா இருக்கு எனக்கு ’ சுஹாசினியிடம் சொன்னாள் ஹரிணி.
‘இது அவங்க அப்பா கட்டின ஹாஸ்பிடல். இங்கே அவன் வராம வேறே யார் வருவாங்க??? இது ஹாசினி. அவனது தந்தை கட்டிய மருத்துவமனை இது என தெரிந்துதானே இங்கே சேர்ந்திருந்தாள் சுஹாசினி.
‘அவன் ஹாஸ்பிடல்லா.. ச்சே.. தெரியாம வந்திட்டேன்..’ என்ற ஹரிணி ‘இது அப்பா போன் நம்பர். சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கு. நீயும் ட்ரை பண்ணி பாரு’ என்றாள் ஹரிணி.
‘நான் ஃப்ர்ஸ்ட் அவருக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் கேட்கறேன். அன்னைக்கு எந்த கல்யாணத்துக்கு சமையல் பண்ண வந்தார்னு தெரியலை. தெரிஞ்சா அங்கே கூட கேட்டு பார்க்கலாம்...’ ஹரிணியின் வாய் தவறி வெளியே வந்து விட்டிருந்தன வார்த்தைகள்.
அதிர்ச்சியில் குலுங்கினாள் சுஹாசினி ‘அப்பா கல்யாண வீட்டிலே சமையல் பண்றாரா??? ஏன்???’
இப்போதுதான் துணுக்கென்றது ஹரிணிக்கு. என்ன பேசிவிட்டோம் என இப்போதுதான் புரிந்தது அவளுக்கு.
‘இல்ல அது வந்து சும்மா பொழுது போக்கா...’
‘என்னது??? பொழுது போக்கா??? எது அடுப்பிலே வேகறதா??? அவருக்கு என்ன வயசுன்னு தெரியுமா??? அப்போ அப்பாவை இந்த நிலையிலேதான் வெச்சிருந்தியா நீ??? குரலில் நிறைந்து நின்ற கோபத்துடன் ஹாசினி கேட்க
‘நீ வாயை மூடு’ என்றாள் ஹரிணி. நாங்க யாரும் வேண்டாம்னுதானே தூக்கி எறிஞ்சிட்டு போனே??? இப்போ நாங்க எப்படி இருந்தா உனக்கு என்ன??? என்னை கேள்வி கேட்க உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எங்க அப்பாவை எப்படி தேடறதுன்னு, எப்படி கண்டு பிடிக்கறதுன்னு எனக்கு தெரியும்...’ பளாரென முகத்தில் அடிக்காத குறையாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விடுவிடுவென நடந்தாள் ஹரிணி.
எனக்கு எல்லாம் தெரியும் என்ற நமது அகந்தையே பல நேரங்களில் நம் கண்ணை மறைத்து விடுகிறதோ???
‘எனக்கு தெரியும்!!! எனக்கு எல்லாம் தெரியும்!!!’ சொல்லிக்கொண்டே தனது அப்பா அங்கேதான் இருக்கிறார் என்பதே தெரியாமலே அவர் இருந்த அறையை தாண்டி நடந்தாள் ஹரிணி.
பற்றி எரிந்தது சுஹாசினியின் உள்ளம்.
அப்பாவின் நிலை கண்டு ஹரிணி மீது அப்படி ஒரு கோபம் அவளுக்கு. அதே நேரத்தில் அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை அவளை உறுத்தத்தான் செய்தது.
‘ஆம் அவளை கேட்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லைதான்!!!’
‘சரி...அப்பா எங்கே??? நிஜமாகவே காணாமல் போய்விட்டாரா???’ கேள்வி துளைத்தது அவளை. அவள் கேள்விக்கான விடை அவள் அருகில் இருக்கும் கதவின் பின்னால் இருப்பதை அறியாமல் ‘ராகுலை கேட்க வேண்டும். அவரை கண்டுபிடிக்க ஏதாவது வழி சொல்வான் அவன்.’ என யோசித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் அவளும்.
அதே நேரத்தில்
விமானி சீருடையுடனே மனம் நிறைய சந்தோஷத்துடன் அந்த அறைக்குள் நுழைந்திருந்தான் விவேக்.. அந்த அறையில் அவனையும், அவரையும் தவிர வேறு யாரும் இல்லை. அங்கே இருந்த நர்ஸ் அப்போதுதான் வெளியே சென்றிருந்தாள்.
அவரை பார்த்தான்தான் விவேக் பார்த்தவுடனும் எதுவும் தோன்றிவிடவில்லை அவனுக்கு. அவர் இடது கையில் வலது காலில் நெற்றியில் என சில கட்டுக்கள்.
‘பாவம் நிறையவே காயங்கள் போலும். எப்படி வலித்திருக்குமோ??? அவருக்கும் அப்பாவின் வயது இருக்குமோ??? என அவன் யோசித்துக்கொண்டிருக்க....
மெதுமெதுவாய் கண் திறந்தார் தாமோதரன். கண்கள் மறுபடி சொருகி சொருகி திறக்க சிரமத்துடன் அவன் முகம் பார்த்து
‘கொ.. கொஞ்ச...ம் த...ண்ணி’ என்றார் தட்டு தடுமாறி.
‘இதோ.. இதோ தரேன்..’ என்றபடி அங்கே இருந்த தண்ணீரை ஒரு டம்ப்ளரில் ஊற்றிக்கொண்டு அவர் அருகில் அமர்ந்துக்கொண்டு அவரை கொஞ்சம் நிமிர்த்தி தனது கையில் தாங்கிக்கொண்டு டம்ப்ளரில் இருந்த தண்ணீரை மெதுமெதுவாக அவர் வாயில் விட்டபோது....
அவனது கண்களுக்கு அருகில் தாமோதரனின் முகம்!!! அவனது அப்பாவின் முகம்!!!
எந்த விழிகளின் அசைவில் அவன் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்டானோ அதே விழிகள்.!!!
எந்த இதழ்களின் புன்னகையின் நிழலில் எப்போதும் இளைப்பாறினானோ அதே உதடுகள்!!!
எந்த முகத்தை மறுபடியும் பார்த்துவிட முடியாதா என ஏங்கிக்கொண்டிருந்தானோ, அதே முகம்!!!
அவனது உடல் முழுவதும் கிடுகிடுத்து போக, உயிர் வரை ஒரு சந்தோஷ நடுக்கம் பரவ வாய்விட்டு சத்தமாக சொன்னான் விவேக்.
அ,..........ப்................பா!!!