அந்த மருத்துவமனையில் இருக்கும் எல்லா டாக்டர்களின் அறைக்கும் வந்தன இனிப்புகள்.
‘ஸ்வீட் எடுத்துக்கோங்க டாக்டர்..’ சுஹாசினியிடம் இனிப்பை நீட்டினாள் அந்த நர்ஸ்.
‘என்ன விசேஷம்??? உங்களுக்கு கல்யாணமா??? ஹாசினி கண் சிமிட்ட
‘அது இல்லை டாக்டர். நம்ம ஸ்ரீனிவாசன் டாக்டர் திரும்ப வந்திட்டார்..’
‘வா...ட்.???’ திகைப்பில் அவள் விழிகள் பெரிதாய் விரிய, புன்னகைத்தாள் அந்த நர்ஸ்.
‘நீங்க இப்போதானே வந்திருக்கீங்க. உங்களுக்கு எங்க பெரிய டாக்டர் பத்தி தெரியுமா???
‘அவர் எங்க டாக்டர்’ என்றாள் ஹாசினி உரிமையும் அன்பும் தொனிக்கும் குரலில். ‘சொல்லுங்க என்ன விஷயம்’
ரெண்டு நாள் முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் கேஸ். அதிலே அட்மிட் ஆன ஒரு பேஷன்ட். அவர் அப்படியே நம்ம ஸ்ரீனிவாசன் டாக்டர் மாதிரியே இருக்கார்’ அவள் சொல்ல ஒரு நொடி சுஹாசினியின் இதயம் துடிக்க மறந்தது.
‘எ..ன்..னது???’ இருக்கையிலிருந்து எழுந்தே விட்டாள் அவள்.
‘எஸ் டாக்டர்.. அவரை பார்த்ததும் நம்ம விவேக் சார்க்கு ரொம்ப, ரொம்ப சந்தோஷம். எனக்கு அப்பா திரும்ப கிடைச்சிட்டார்ன்னு சொல்லி எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் கொடுக்க சொல்லி இருக்கார்’ சொல்லிவிட்டு நர்ஸ் நகர்ந்து விட அசைவின்றி நின்றிருந்தாள் மகள்.
‘என் அப்பாவா அது??? ஆம் அப்பாவேதான் வேறே யாராக இருக்க முடியும் அது??? படபடத்தது சுஹாசினியின் மனம்.
‘ஹரிணி அவரை காணவில்லை என்றாளே??? இங்கேதான் இருக்கிறாரா??? என் அருகிலேயேதான் இருக்கிறாரா??? அவள் கால்கள் தன்னாலே அப்பாவை தேடி நகர்ந்தன.
தந்தை இருக்கும் அறைக்குள் தவிப்புடன் நுழைந்தாள் மகள். அங்கே கட்டிலில் துவண்டு போன இலையாய் சுருண்டு கிடந்தார் அப்பா. கால்கள் நடுங்குவது போன்ற உணர்வுடன் கட்டிலுக்கு அருகில் சென்றாள் ஹாசினி.
‘அப்பாவா??? அப்பாவா இது??? பதினான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்த அப்பாவாக இல்லையே இவர். ஏன் இப்படி துவண்டு கிடக்கிறார்.’ அவரை விட்டு விழி விலக்க தோன்றாமல் பார்த்திருந்தாள் சில நொடிகள்.
‘டாக்டர் ஹாசினி...’ கலைத்தான் அவர் அருகில் அமர்ந்திருந்த விவேக்.. ‘இவரை பார்த்தீங்களா??? அப்படியே எங்க அப்பா மாதிரியே இருக்கார்...’ கண்கள் மின்ன சொன்னான் அவன்.
பதிலேதும் பேசாமல் அவன் முகம் படித்தாள் சுஹாசினி.
‘எனக்கு எங்க அப்பா திரும்ப கிடைச்சிட்டார் ஹாசினி. ஐ யாம் ஸோ எக்சைடெட். எங்க அப்பா கனவிலே எனக்கு சொன்னார் ‘நீ தாமோதரனை பார்க்கணும்னு. அவர் யாரா இருக்கும்னு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். இதோ பதில் கிடைச்சிடுச்சு...’
அவன் சொல்ல வியப்பில் உயர்ந்தன ஹாசினியின் புருவங்கள்.
இப்போ இவர் அப்படியே அச்சு அசலா எங்கப்பா மாதிரியே... எனக்கு நிஜமாவே என்ன செய்யறதுன்னே தெரியலை. இனி நான் இவரை விட மாட்டேன். அப்படியே என் கூடவே வெச்சுக்குவேன்.’ படபடபடவென நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தான் விவேக்.
மெலிதாய் ஒரு புன்னகை ஓடியது சுஹாசினியின் இதழ்களில். இப்படி இவன் மகிழ வேண்டும் என்றுதானே அவள் எதிர்ப்பார்த்தாள். அவனது தவிப்புக்கு,மகிழ்ச்சிக்கு முன்னால் தனது உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள தோன்றவில்லை அவளுக்கு. இவர்தான் என் தந்தை என சொல்லிக்கொள்ளவில்லை அவள்.
‘ஏன் மிஸ்டர் விவேக் என்றாள் நிதானமான குரலில். ‘உங்ககூடவே இவரை எப்படி நீங்க வெச்சுக்க முடியும். அவருக்கும் பசங்க குடும்பம் எல்லாம் இருப்பாங்க இல்லையா.???’
‘ஆங்???” கொஞ்சம் யோசனை கோடுகள் அவன் முகத்தில் ‘
அடுத்த நொடி அதனாலே என்ன??? என்றான் அவன். யாரா இருந்தாலும் நான் அவங்ககிட்டே பேசிடுவேன். ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்குவேன். நீங்க வேணும்னா பாருங்க கண்டிப்பா ஒத்துக்குவாங்க இவரை நான் அருமையா பார்த்துக்குவேன் ஹாசினி. இனிமே இவரை தரையிலே கூட நடக்க விட மாட்டேன் ஹாசினி’
தவிப்பும், சந்தோஷமுமாக அவன் பேசிக்கொண்டே போக வியந்து போனாள் ஹாசினி.
‘விமானி உடையில் மிக கம்பீரமாக இருக்கும் ஒரு ஆண் மகனுக்குள் இப்படி ஒரு குழந்தை மனமா??? தனது தந்தை மீது இப்படி ஒரு பாசமா??? ‘.
இவன் பாசத்துக்கு முன்னால் நான் என் தந்தை மீது கொண்ட அன்பெல்லாம் ஒன்றுமே இல்லை. ஹரிணி சொல்வதைப்போல் என் சுயநலத்திற்காக எனது தந்தையை வேண்டாமென தூக்கி எறிந்து போனவள்தானே நான். ஒரு தீர்க்கமான சுவாசத்துடன் தந்தையை பார்த்தாள் மகள்.
விவேக்கை பார்த்தாலே எரிச்சல் படும் ஹரிணி வந்து போனாள் சுஹாசினியின் மனதில்!! அதே நேரத்தில் டாக்டர் ஸ்ரீனிவாசனும் அவர் அவளுக்கு செய்த அந்த இணையில்லா உதவியும் மனதில் வந்து போயின!!!
‘யாரா இருந்தாலும் நான் அவங்ககிட்டே பேசிடுவேன். ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்குவேன்.’ சொன்னானே விவேக். இவன் சென்று கேட்டால் ஒப்புக்கொள்வாளா ஹரிணி??? அவனை கெஞ்ச விட மாட்டாளா??? அவமான படுத்த மாட்டாளா??? சந்தேகமே இல்லாமல் அதைதான் செய்வாள் அவள்.