20. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி
"எவ்வளவு வலிகளை சுமந்திருக்கிறாள்?எவ்வளவு வேதனைகளை தாங்கி இருக்கிறாள்?இதுதான் இவளது உண்மையான முகமா?"-மனதில் நிகழ்ந்த நிகழ்வினையே மீண்டும் மீண்டும் அசைப்போட்டு தன்னை வருத்திக் கொண்டிருந்தான் ருத்ரா.
அன்று தன்னிலை மறந்து மயங்கியவள்,நிலை சீராகி எழுந்ததும்,எதைக்குறித்தும் கவலைக் கொள்ளாது,எழுந்து தனியே மகேந்திரகிரியை நோக்கி பயணப்பட்டாள்.
"ருத்ரா!என்னாச்சுப்பா அவளுக்கு?"-காயத்ரியின் கண்ணீர் நிறைந்த குரல் உடைந்துப் போனது!
"ஒண்ணுமில்லைம்மா!நான் இதோ வந்துடுறேன்!"-என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவளை பின் தொடர்ந்தான்.
மகேந்திரகிரியில் அவள் தந்தைக்கு என்றே தனித்துவமாய் உருவாக்கப்பட்ட கல்லறைக்குள் நுழைந்தது மாயாவின் கார்!!சுற்றிலும் விருட்சங்கள் சூழ்ந்த அவ்விடத்தில் அவள் தந்தையின் கல்லறைக்கு நேர் எதிராய் உருவாக்கப்பட்டிருந்த 100 அடி ஈசனின் பைரவ ரூப சிலையும்,ஒரு கரத்தில் உடுக்கை,மறு கரத்தில் கதாயுதம்,ஒரு கரத்தில் வாள்,மற்றொரு கரத்தில் திரிசூலம்,ஒரு கையில் கோடாரி,மற்றொன்றில் ஈட்டி,ஒரு கரத்தில் விஜய தனுசும்,மற்றொன்றில் அக்னியும் ஏந்திய அஷ்டபுஜங்கள் கொண்ட இறைவனின் ஆறடி சிலை ஒய்யாரமாய் நின்றிருந்ததை நாம் இதுநாள் வரை கவனிக்க தவறினோம் எனலாம்!!இம்முறை அவள் தன் தந்தையை நாடி செல்லவில்லை.நீதிக்கேட்டு இறைவனையே நாடிச் சென்றாள்.
விழிகள் இரண்டிலும் எழும் சினத்தை அழித்து,கண்ணீரை தாங்கியவள்,இறைவனின் முன் நிகழ்ந்த நிகழ்வுக்காக நீதிக்கேட்டு நின்றாள்.
"எதுக்காக அப்படி ஒரு குற்றம் நிகழணும்?ஏன் இந்த உண்மையை எனக்கு நீங்க தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கலை?செய்யாத குற்றத்துக்காக ஒரு அப்பாவிக்கு கிடைத்த பழியை துடைக்க தானே நான் என்னை இப்படி உருமாற்றினேன்!ஆனா,நான் கொடுத்த தண்டனை ஒரு பாவமும் அறியாத ஒரு அப்பாவியை பாதித்த உண்மையை ஏன் மறைத்தீங்க?"
"எதுக்காக இந்தத் தவறு நிகழணும்?எந்தக் கையால என் அப்பாக்கு நியாயம் கிடைக்க ஆயுதம் ஏந்தினேனோ,அந்தக்கை இத்தனை வருடமா தண்டித்தது ஒரு பாவமும் அறியாத ஜீவனையா??எந்த ஒரு சூழ்நிலையிலும் உண்மைக்கு நேரான விஷயத்தை செய்ய மாட்டேன்னு வாக்கு கொடுத்தேன்.இன்னிக்கு அதே வாக்கை நானே அழித்துவிட்டேனே!இத்தனை நாளா தோற்றது நான் தான்!ஒருவேளை இந்த உண்மை முன்னாடியே தெரிந்திருந்தா,என்னிக்கோ நிலைமையை சீர் செய்திருப்பேன்!"
"யாரை என் வாழ்க்கையோட உயிர்நாடின்னு நினைத்து வணங்கினேனோ,யாரை உங்களுக்கு அடுத்து தெய்வமா வணங்குறேனோ,அவரை என்கிட்ட கை கூப்பி வேண்ட வைத்துட்டீங்களே!நான் என்ன தப்பு பண்ணேன்?எதுக்காக இந்தச் சூழ்நிலை எனக்கு?நடந்த எல்லா நிகழ்வுகளுக்கும் தண்டனை கொடுத்தது நான்!அதுக்கான ஒட்டுமொத்த வலியையும் அனுபவித்ததும் நான் தான்!எனக்குள்ளே இருந்த எல்லா உணர்வுகளையும் சிதைத்தேன்!எதுக்காக,தவறு செய்யாதவங்களுக்கு தண்டனை கொடுக்கவா?"
"எதுக்காக என்னை இந்தப் பாவத்தை செய்ய வைத்தீங்க?காலமுள்ளவரை இந்தக் குற்றவுணர்ச்சியை என்னால நிச்சயம் கடக்க முடியாது!இனி நான் என்ன செய்யப் போறேன்?"-மண்டியிட்டு கதறி அழுதாள் அவள்.வேதனைகள் சூழ்ந்ததால் உருவான பழிவுணர்வு,பகை அனைத்தும் அக்கண்ணீர் துளிகளோடு கரைந்தே போனது!!
நடவற்றை நினைவுக் கூர்ந்தவனின் மனம் ஒடுங்கிப்போனது!!மனவேதனையை போக்க,அவனது முதல் காதலின் புகைப்படத்தை கையில் எடுத்தான் ருத்ரா.
அவளது புன்னகை ததும்பிய முகத்தை வருடியவன்,
"நீ உயிரோட இருந்திருக்கலாம் கங்கா!நீ உயிரோட இருந்திருந்தா,மாயா என் வாழ்க்கையில வந்திருக்க மாட்டா!அவளுடைய வேதனைகள் எனக்கு தெரியாம போயிருக்கும்!நானும் நிம்மதியா இருந்திருப்பேன்.இப்போ அவ அனுபவிக்கிற வேதனையை என்னால சகிக்க முடியலை கங்கா!நான் செய்யுறது சரியா,தப்பான்னு எதுவுமே புரியலைடி!எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!ஏன் கங்கா என்னைவிட்டு போன?இவ்வளவு தண்டனையை நான் அனுபவிக்கிறதை பார்த்துக் கூட என் மேலே உனக்கு இரக்கம் வரலையா?நானும் உன் கூட வந்துடுறேன் கங்கா!என்னையும் கூட்டிட்டு போயிடு!"-கண்ணீர் மல்க வேண்டினான் ருத்ரா.
நாட்கள் உருண்டோட தொடங்கின...காலம் எதையும் மாற்றும் வல்லமை கொண்டது!மனித உணர்வுகளும் அதற்கு விதிவிலக்கல்ல!தனியொரு மனிதனின் வாழ்வு சுலபமான ஒன்றல்ல!எண்ணற்ற இன்னல்கள்,வேதனைகளை அவன் தாங்க தான் வேண்டும் என்பது இயற்கையின் நியதி?சோதனைகளை அனைத்துச் சூழ்நிலையிலும் தனியொருவனால் எதிர்க்க இயலாது.தாங்க இயலாத வேதனையை ஒருவன் சந்திக்கும் சமயத்தில் மனம் செயல்பட மறுக்கிறது!உலகமே துரோகம் இழைப்பதாக ஒரு எண்ணம் உருவாகும்!உயிரை கொல்லும்!அதுபோன்ற சமயங்களில் சிந்திக்காமல் முடிவை காலத்தின் பிடியில் கொடுங்கள்!வேறு உபாயமில்லை என்ற நிலையில்,மௌனம் மற்றும் பொறுமையே உன்னதமான ஆயுதமாக உருமாறும் வல்லமை பெற்றதாகும்!!
"மாயா!மாயா!மாயா!எவ்வளவு தைரியம் இருந்தா அவளைப் பற்றி என்கிட்ட பேசுவ நீ?"-காயத்ரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ரகுராம்.