21. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி
அந்த மருத்துவமனை முழுவதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது!!தான் உடுத்தி இருந்த ஆடை முழுதிலும் செங்குருதி படர,மனம் திக்கற்ற நிலையில் தவித்துக் கொண்டிருந்தான் ருத்ரா!!
"அர்ஜூன் சார்!நாங்க முன்னாடியே எச்சரித்தோம்!இது எவ்வளவு பெரிய விபத்து தெரியுமா?அவங்க பிழைக்கிறது கிட்டத்தட்ட முடியாத காரியம்!தலையில பயங்கரமான காயம் ஏற்பட்டிருக்கு!கொஞ்சம் கூட பாதுகாப்பா பார்த்துக்க மாட்டீங்களா?"-வசைப்பாடியப்படி அர்ஜூனுடன் வந்தார் அம்மருத்துவர்.
ருத்ராவின் முகத்தினை கண்டவர் திடீரென அமைதியானார்.
"நாங்க முடிந்த அளவு முயற்சி பண்றோம்!மனசை தளரவிடாதீங்க!"-ஆறுதல் கூறிவிட்டு உள்ளே நுழைந்தார்.
"பிரபல தொழிலதிபர் மாயா மகேந்திரன் கொலை முயற்சி!மகேந்திரகிரி மலையிலிருந்து விபத்து ஏற்படித்தியதாக அவரது தாயார் புகார்!"-என்றது அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி!!
"விரிவான செய்திகள்!பிரபல தொழிலதிபரான மாயா மகேந்திரனை கொல்ல அவரது தொழில் எதிரியான ரகுராம் முயற்சித்து,அவர் சென்ற காரை விபத்துக்குள்ளாகியதாகவும்,பின்னர்,அவரது கூட்டாளியுடன் ஏற்பட்ட சலசலப்பால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்ததாகவும்,மாயாவின் தாயார் திருமதி.காயத்ரி மகேந்திரன் கூறியுள்ளார்!தற்சமயம்,மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்!"
"இதுக்குறித்து அவரது உதவியாளர் கூறுகையில்,மாயாவிற்கு பல்வேறு விதமான கொலை மிரட்டலை ரகுராம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.இறுதியாக அவர் தன்னை சந்தித்த வேளை தனது உயிருக்கு இன்னல் நேர்ந்தால் தனது ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் வழிநடத்தும் பொறுப்பினை தனது நண்பனான அர்ஜூனிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும்,அனைத்து ஆஸ்திகளையும் காப்பங்களுக்கு சமமாய் பிரித்தளிக்க வேண்டும் என்று வேண்டியதாக கூறியுள்ளார்.இப்போது மாயாவின் நிலை என்ன?மீண்டும் தனது சேவையை புரிய உயிர்பெற்று வருவாரா?"என்று முடிந்தது அவ்வறிக்கை!!அவ்வளவு நேரமும் பொறுமையாய் மௌனம் சாதித்த தோழர்கள் இருவரும் கலங்கிவிட்டனர்!!
நேரம் நகர்ந்துக் கொண்டே இருந்தது...
முழுதாக 8 மணி நேரம் கடந்தப்பின்னர்..!
"ருத்ரா சார்!"என்று வெளி வந்தார் மருத்துவர்.
"டாக்டர் என் மாயா?"
"அவங்க உயிர் பிழைத்துட்டாங்க சார்!"நற்செய்தி கூறினார் அவர்.
"ஆனா..."
"என்ன?என்னாச்சு?"
"தலையில பயங்கரமா அடிப்பட்டதால்,அவங்களுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துப் போச்சு!"பெரிய இடியை இறக்கினார்.
"இப்போ நீங்க என்ன சொல்றீங்களோ அது தான்!!"-இது இறுதிக்கட்ட வாய்ப்பா?இறைவனானவன் போடும் முடிச்சுகளை ஆராய இவ்வகிலத்தில் எவராலும் முடியாது!!மண்ணில் மனிதன் ஒருவனை ஜெனிக்க வைக்கிறான்!அவனது பிறப்பால் சூழ்ந்திருப்போருக்கு இன்பமளிக்கிறான்!அவனை இமை விழியைக் காப்பது போல காத்து வளர்க்கின்றான்.பெரும் சோதனைகளில் அவனை ஆட்படுத்தி,வெற்றிப் பெற்றால்,மாபெரும் பணியை அவன் சிரத்தில் கட்டிவிடுகிறான்!வாழ்வியலில் நுழைக்கிறான்.மரண தருவாயில் உறவாடிய உறவுகளை நிலைக்குலைய வைக்க அவ்வுயிரை தன்னிடம் எடுத்துக் கொள்கிறான்.கேட்டால் யாவும் எனது பொருள் என்று கதை விடுகிறான்!!எனில்,நிலையற்ற உலகத்தில் தான் இவ்வளவு ஆட்டமா?வந்தக் காரியம் ஈடேறியதும் விலகி சென்றாக வேண்டும் என்பது ஆணை என்றால்,பின்,எதன் அடிப்படையில் மனிதன் தன்னை தானே எஜமானன் என்று புகழ்ந்துக் கொள்கிறான்??இது மனிதனின் தவறா?அவனை நம்பி ஞானம் அளித்த இறைவனின் தவறா???
பலத்த போராட்டத்தின் பின் விழி திறந்தவளின் எதிரில் நின்ற முகங்கள் எதுவும் நினைவில் இல்லை.தனது இரு புருவங்களையும் சுருக்கி குழம்பி போய் அனைவரையும் பார்த்தாள் மாயா.
"மாயா!"-அவளது இரு கன்னங்களையும் ஏந்தி,அவளது நெற்றியில் முத்தமிட்டார் காயத்ரி.அவள் கேள்வியாக பார்த்தாள்.
"அம்மாம்மா!"-என்றார் கண்ணீருடன்!!அவளிடம் கனத்த மௌனம்!!சில நொடிகள் கழிந்தப்பின்,மெல்ல இதழ் பிரித்தாள்.
"மா!"என்று!!20 வருட கடும் தவத்திற்கு பலன் இன்று கரம் சேர்ந்தது!அவள் வாழ்க்கையை வாழ,இழந்த அனைத்து நிம்மதியையும் அவள் அடைய,அவள் நினைவினை அழித்து,புது வாழ்வளித்தாரா இறைவன்??இங்கு உண்மையில் வென்றது யார்??ருத்ராவின் காதலா?காயத்ரியின் தாய்மை?மகேந்திரனின் விருப்பமா??கங்காவின் இறுதி ஆசையா?ஏதுமில்லை...மேற்கண்ட சக்ரவியூகங்கள் யாவற்றையும் உடைத்து,அதிலிருந்து வெளிவர இயலாமல் மாண்ட,மாயாவின் பிடிவாதம் தான்!அவள் மெய் உரைத்தாள்!அவள் பிடிவாதம் உயிருடன் இருந்தவரை எவராலும் அவளை அடக்கி ஆள இயலவில்லையே...!அன்பு யாவற்றையும் வெல்லும் என்ற கோட்பாட்டினை மாற்றி எழுதி காண்பித்தாளே!!