(Reading time: 20 - 39 minutes)

என்னவென்று அருகில் சென்று பார்த்தாளோ உடனே கண்ணில் இருந்து வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள். எத்தனை முறை கேட்டாலும் பதில் இருப்பதில்லை. முன்பை போல கீர்த்தியை பார்க்க முடியாமல் சிறியவள் வருந்தினாள். அவளுக்காக வந்து அருகில் படுத்தாலும் கண்கள் மூடுவது போல தெரியவில்லை. காலை எப்போதும் விரைவாக எழுவது சிறியவள் தான் ஆனால் இப்போதெல்லாம் பெரியவள் எழுந்து அமர்ந்திருக்கிறாள். சொன்னாலும் எந்த வேலையும் செய்யாதவள் இப்போதெல்லாம் அன்னைக்கு உதவ துவங்கினாள் அனைத்து வேலைகளையும் செய்தாள், கிண்டலாக கேட்டாலோ ஒரு மாறுதல் என்கிறாள். இப்படியே தான் சில நாட்களாக சென்றது.

சிரியவளுக்கு தேர்வு செய்திருந்த நிறுவனத்தில் இருந்து சேரும்படி கடிதமும் வந்து அவள் வேலைக்கும் செல்ல துவங்கிவிட்டாள். பெரியவள் கூட மித்ராவை போல அவர்கள் கேட்டிருந்த கோப்புகள் அனுப்பி இருந்தால் இந்நேரம் அவளும் வேலைக்கு சென்றிருக்கலாம் ஒருவேளை அவள் காணமல் கூட போயிருக்க மாட்டாள் என்று யோசித்து அன்னையின் மனம்.. ஆனால் இப்போது யாரும் அதை பற்றி கேட்கும் எண்ணத்தில் கூட இல்லை. ஒரே எண்ணமெல்லாம் அவளை மாற்றுவது தான், கீர்த்தியும் ஏதோ அவர்கள் முன் பழையபடி இருப்பது போலதான் காட்ட நினைக்கிறாள், தாய் பறவைக்கு தெரியாதா தன் குஞ்சினை பற்றி. ஒவ்வொரு முக மாற்றமும் கண்ணில் பட்டுக்கொண்டு தான் இருந்தது... ஆனால் மென்மையாக அவளை வருத்தப்பட விடாமல் கேட்பது பற்றி தான் இப்போது பேச்சே.

“மித்ரா நீ பேசிப்பார்க்குரியா?! ஒரு வேலை உன்கிட்ட சொல்லலாம்மில்ல...” என்றார் அருள்.

“அப்படி சொல்லுற எண்ணம் இருந்தால் இந்த 3 நாளா அவளோட தானேப்பா இருக்கேன் சொல்லிருக்கலாமே...”

“அது சரி தான்.. இருந்தாலும் நீ கொஞ்சம் பக்கத்தில உட்காந்து கேட்டு பாரு.. எங்ககிட்ட சொல்ல சங்கட படுறாளோ என்னவோ... எனக்கு அந்த மிருகங்கள் என்ன பண்ணுச்சோன்னு பயமா இருக்கு...” என்று சேர்த்து கூறினார் அருணா.

“அப்படில்லாம் நினைக்கதீங்கம்மா... நம்ம யாருக்கும் கெட்டது பண்ணவே இல்லையே..”

“ஹ்ம்ம் அப்படியெல்லாம் பார்த்தா சோதனைகள் வருது... எல்லாம் நேரம் தான் மித்ரா” என்று கண்கள் கலங்கினார் அருணா..

மித்ராவிற்கு இந்த சில மாதங்களில் கொஞ்சம் பக்குவம் ஏற்பட்டு இருந்தது... ஒரு பெண் வெளியே செல்வதும் அவள் சிறிது நேரம் தாமதம் ஆனாலும் இந்த பெற்றோர்களுக்கு தான் எவ்வளவு வருத்தம் என்று எண்ணிக்கொண்டு.. “அம்மா... நம்புங்கம்மா...” என்று நம்பிக்கை தந்தாள்.

ன்றும் போல், அன்றும் ஏதோ நினைவில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க தந்தை அவ்வளவு நேரம் பேச்சு கொடுத்து நினைவை மாற்ற முயற்சித்தும் தோல்வி அடைந்த பின்பு தங்கை வந்தாள். “கீர்த்தி..” என்று அருகில் வந்து கையை தொட்டு அழைத்தாள்.

கண்ணில் ரொம்ப மெல்லிய திரை போட்டிருந்தது.. அதை இருமுறை கண்கள் சிமுட்டி அடக்கிவிட்டு உதட்டில் சட்டென ஒரு சாயலை ஒட்டிக்கொண்டாள். “ஏய் நீ இன்னைக்கு ஆபீஸ் போகலையா...”

“நான் போறேனா வரேனான்னு கூட உனக்கு தெரியுறது இல்லையே கீர்த்தி..”

“....”

“நீ பழையபடி உடனே மாருன்னு சொல்ல வரல.. உனக்கு அப்படி என்னதான் சொல்ல முடியாத துக்கம் என்கிட்ட சொல்லு...”

அவள் பேச பேச அவளை பார்த்துக்கொண்டு இருந்தவள்.. “ஏன் மித்ரா நான் இப்படி இருக்குறது சுமையா இருக்கா?”

“என்ன பேசுற கீர்த்தி.. உனக்கு எப்போ இருந்து இப்படி தோண ஆரம்பிச்சுது... நம்ம அப்படியா இருந்தோம்... என்ன சம்பந்த பட்ட விஷயம் எது உனக்கு தெரியாது... இல்ல உன்னை பற்றிய விஷயம் எது உனக்கு தெரியாது.. என்கிட்ட சொல்லலாமே..”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க இவர்களை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தனர் பெற்றோர்.

அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் இப்போது கண்ணில் இருந்து நீர் வழிய துவங்கியது கீர்த்திக்கு.. சொல்ல தெரியாமல் சொல்ல முடியாமல் இருந்த துயரம் கண்ணீராய் வெளிவர. கொஞ்சம் அதிர்ச்சியோடு அவளது பதிலை நோக்கி காத்திருந்தாள்.

“கீர்த்தி.. என்ன நடந்துதுன்னு சொல்லு..”

ஆனால் இன்னமும் அவள் வாயை திறந்த பாடில்லை.. “வேண்டா மித்ரா.. நீங்களும் கஷ்டப்பட வேண்டாம்... இங்க வந்தாள் துயரம் குறையும்னு நினைச்சேன்... ஆனால் இப்போ எங்கயாவது போயிடலாம் போல இருக்கு... எனக்கு அதை நினைக்க நினைக்க செத்துறலாம் போல இருக்கு ஆனால் எனக்கு அதுக்கு கூட தைரியம் வரல.. ச்சே..” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

இவள் அழுவதை பார்த்து இப்போது மித்ராவிற்கு கண்ணீரை காட்டிலும் அதிர்ச்சி அதிகமானது. “ஏய் கீர்த்தி என்ன பேச்சு இது? ஒரு பிரச்சனை வந்தால் உடனே சாகனுமா...”

அவள் பேசுவதை ஒரு நிமிடம் விழி உயர்த்தி பார்த்தவள், “ஹ்ம்ம்... அதெல்லாம் பிரச்சனையின் அளவை பொருத்தது...” என்று கண்களை துடைத்துக்கொண்டாள். “இப்போ பரவாயில்லை...” என்று விரக்தி முறுவலோடு...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.