(Reading time: 20 - 39 minutes)

ஏதேனும் பிரச்சனை என்றால் அதில் தானும் சிக்காமல் தன் குடும்பமும் சிக்காமல் சுற்றிக்கொண்டு போகும் மிக பாதுக்காப்பு உணர்வு கொண்டது தான் நடுத்தர குடும்பத்தில் மனோபாவம், அப்படிப்பட்ட அருணா அருள் குடும்பத்திற்கு இந்த அடி பெரும் சூறாவளி போலதான் இருந்தது.

இது வாழ்க்கையில் ஒரு சம்பவம், கொடுரமான சம்பவம் தான் ஆனால் கடந்து வர கூடும் என்ற உணர்வு பெற்றோர்க்கே இல்லாததை போக போக கீர்த்தி உணர்ந்தாள். அவர்கள் தன்னை பரிதாபத்தோடு பார்ப்பதும், பரிதாபத்தோடு ஒவ்வொரு சூழலிலும் பழகுவதும் கொஞ்சம் மூச்சை அடைக்க துவங்கியது அவளுக்கு. முன்பாவது இதெல்லாம் தெரியாத காரணத்தினால் திட்டியாவது அவளை வேலை வாங்குவது சாப்பிட சொல்லுவது என்று இருந்தது. ஆனால் வீடே தலைகீழாக மாறி இருந்தது.

அனைவரும் சிரித்து பேசும் நுழைவு அறை வெறுச்சோடி இருக்க துவங்கியது, சத்தமும் இனிய சண்டையுமாக இருக்கும் தங்கையின் உறவு இப்போது மாறி இருந்தது, தினமும் வாங்கும் அம்மாவின் திட்டுகள் ஏனோ காணமல் போனது, கண்டிப்பான அப்பாவின் பார்வையும் தான்... இப்படியே சில நாட்களை கடத்தினாள்.

அவர்களுக்காகவேனும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒரு சில நாட்கள் தோன்றும் அவளுக்கு, அன்றும் அப்படித்தான் எங்காவது வெளியே சென்று வரலாம் என்று அருள் சொல்ல அருணாவும் மித்ராவும் கீர்த்தியின் கண்ணசைவுக்காக காத்திருந்தனர்.

“வா கீர்த்தி வெளியே போயிட்டு வரலாம் உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும் தானே...” என்று மனதை மாற்றினாள் மித்ரா.. முன்பை போல வெறித்த பார்வை மாறி இருந்தாலும் வெளியே வெளுச்சத்தை பார்க்கும் தைரியம் இல்லை அவளுக்கு... இருப்பினும் தன்னால் இவர்களும் எங்கும் செல்லாமல் இருப்பதை உணர்ந்து லேசாக தலை அசைத்தாள். கொஞ்சம் மனம் மலர்ந்துவிட அனைவரும் கிளம்ப துவங்கினர்.

ஆனால் உள்ளே நெஞ்சம் பலமாக அடிக்க தான் செய்தது, நிமிடங்களில் தயாராகிவிட்டு வந்து தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள், நொடிக்கு ஒன்று மாற்றிக்கொண்டு இருந்தவள், ஒரு புகைப்படத்தை பார்த்து நிறுத்தினாள். சிறப்பு ஒளிபரப்பாக சிகப்பு விளக்கு இடங்களில் இருக்கும் பெண்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் ஒரு சூடான நிகழ்ச்சியாக கருதி... முகங்கள் மறைக்கப்பட்டு இருக்க, சில பெண்களிடம் பேட்டி எடுத்திருந்தனர். எப்படி பட்ட சூழலில் வந்து சிக்கிக்கொண்டார்கள் என்பது போலவும், பண்ணுவது தவறு என்று தெரிந்தும் ஏன் இதை தொடர்கின்றனர் என்றும். பலர் முகங்களை மறைத்துக்கொண்டு நகர்ந்து செல்வது, பேச மறுப்பது என்று பல காட்சிகள் காட்டப்பட்டது... அதில் ஒன்று தான் ஒரு இடத்தில் போலீஸ் ரைடு செல்வதும் தூரத்தில் ஒரு பெண் தப்பித்து செல்வதும்.

கீர்த்திக்கு நொடியில் புரிந்து உடல் நடுங்க துவங்கிவிட பதட்டத்தில் கத்தி அளவும் துவங்கினாள். அவளே சொன்னால் மட்டும் தான் அது யார் என்று கண்டுபிடிக்க கூடிய  அளவில் தான் அந்த காட்சி இருந்தது... ஆனால் அதே நேரத்தில் வந்த வீட்டாரால் கண்டு பிடிக்க முடிந்தது, அவளது உடையும் கையில் இருந்த காப்பும் காட்டிக்குடுத்தது. அவளின் குரல் கேட்டு பெற்றோரும் மித்ராவும் சூழ்ந்துக்கொள்ள, கத்தி அழுது தொலைக்காட்சி ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தனது அறைக்கே ஓடிவிட்டாள். என்னதான் அனைவரும் தடுக்க முயன்றும் பின்தொடர்ந்தும் அவர்களால் முடியவில்லை. அனைவரும் அதை பார்த்துவிட்டனர் என்ற உணர்வு ஒரு அருவருப்பான உணர்வை தர பழைய நினைவுகள் அனைத்தும் அணிவகுக்க துவங்கிவிட்டது... உடலின் ஒவ்வொரு பகுதியும் ஏறிய துவங்க, அருவருப்பாக உணர்ந்தாள், வேகமாக உள்ளே சென்றவள் குளியல் அறையில் சென்று ஷவரை திறந்துவிட்டு எறியும் உடலை தனிக்க முயற்சி செய்தாள். ஆனால் உள்ளத்தின் நெருப்பு ஏனோ உடலில் ஒட்டி இருப்பதாக அவள் நினைக்கும் அசுத்தத்தை நீக்கவே இல்லை.

வெகு நேரம் அப்படியே அழுதவள், கண்ணீர் வற்றியதும் வெளியே வந்தாள். வீட்டாருக்கு புரியாமல் இல்லை, சொல்லி தணிக்க கூடிய வலி இல்லையே.. சில நேரங்களில் கூடவே இருக்கும் வீட்டரையும் வெறுக்க செய்கிறது அவளது உள்ளம். அவள் அப்படியே வந்து அமர்ந்துகொள்ள, மூலைக்கு ஒரு புறம் கண்ணீர் வரியோடு அமர்ந்து இருந்தவர்கள் சட்டென பக்கம் வந்தனர். அருணா இம்முறை கொஞ்சம் பொறுமையாக சிரியவளையும் கணவனையும் தடுத்துவிட்டு கீர்த்தியின் அருகில் சென்று தலையை துவட்டிவிட துவங்கினாள். முதல் இரு முறை ஒதுங்கி போனவள் அன்னை விடாமல் போகும் இடமெல்லாம் வரவும் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

இதையெல்லாம் அசைபோட்டபடியே அமர்ந்திருந்த தந்தை நிம்மதியே இல்லாமல் இருந்தார். அந்த வீட்டின் நிம்மதி சென்று பல மாதங்கள் ஆகி இருந்தது இருப்பினும் பெண்ணை மாற்றிவிடலாம் அதில் இருந்து வெளியே கொண்டு வந்துவிடலாம் என்று முயற்சித்தாலும் அது பொய்த்துவிடுமோ என்ற பயம் புதிதாக தொத்திக்கொண்டது அவருக்கு. எத்தனை நாட்கள் அவள் இப்படியே இருக்க முடியும் அவளே முன்னே வந்தாலும் பின்னே தள்ளும் உலகம் இருந்தால் எப்படி முடியும் என்று மனம் அசைப்போட்டுக்கொண்டிருந்தது.

சந்தோஷத்தில் இருக்கும் மனிதனுக்கு சுற்றி நடப்பவை எல்லாம் இனிமையாய் சுகமாய் நல்லனவாக தோன்றும், அதே போல துக்கத்தில் இருப்பவனுக்கு அப்படியே எதிர்மாறாக தோன்றும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.