“எப்பா சரியான எட்டப்பன்” என்று தமிழை செல்லமாய் சபித்தவள் உடனே அவனது பெயரை எட்டப்பன் என சேவ் செய்தாள். இப்படித்தான் அடிக்கடி அவனது பெயரை செல்லமாய் மாற்றும் பழக்கமே அவளிடம் தொடங்கியது. அவனது பெயரை மாற்றிய அடுத்த நிமிடமே ஃபோன் செய்திருந்தான் தமிழ்.
“ஹ.. ஹலோ”
“என்ன சோடாபுட்டி ஃபோன் காலை எதிர்பார்த்த மாதிரி இருக்கே?”
“ஆங்.. இல்லையே”
“அப்போ எப்படி முதல் ரிங்லயே எடுத்துட்ட?”
“அது… கெம் விளையாடிட்டு இருந்தேன்..”
“அப்படியா நம்பிட்டேன்..” என்றான் தமிழ். அடுத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் யாழினி. அவளது மௌனம் ஏனோ அவனுக்கு உவப்பாக இருந்தது. கொஞ்சமாய் அவளை சீண்டிவிட நினைத்தான்.
“அப்பறம் மாமா என்ன சொல்லுறார்?” என்றான்.
“மவனே..என் அப்பாவை மாமான்னு கூப்பிட்டு எனக்கா ஹார்ட் அட்டேக் தர்ர.. இதுக்கெல்லாம் நீ அவதிபடுவ”என்று கருவியவள்,
“என் மாமா என்ன சொல்லுறார்னு அத்தைக்கிட்ட தானே தமிழ் கேட்கனும்? உங்க அம்மாகிட்ட ஃபோனை கொடுங்க.. நானே கேட்டு சொல்றேன்..”என்றாள்.
“அதானே.. நீயாவது வாயடங்கி இருக்குறதாவது” என நினைத்து சிரித்துக் கொண்டான் தமிழ்.
“சரி அப்பறம் என்ன விஷேஷம் யாழினி?” ரகசியமான குரலில் கேட்டான் தமிழ்.
“ம்ம்..வேற ஒன்னுமில்லை..”
“ஏன் திடீர்னு குரல் டல்லடிக்கிது!”
“ஒன்னுமில்ல..”
“ஒன்னும்மில்லையா?”
“ம்ம்ம்..ஆமா..”
“ அப்போ ஃபோனை வெச்சிடவா?”
“ம்ம் வைங்க”என்று கட் செய்துவிட்டாள் யாழினி. மூச்சு முட்டியது அவளுக்கு அவனிடம் பேச. எந்த உரிமையில் இப்படி உரையாடுகிறான்? காதலை சொல்லவில்லை! ஏற்கவும் இல்லை! பிறகு எதற்கு இந்த பேச்சு? அப்படியே அவனுக்குமே தன் மீது காதல் இருந்தாலும் அதை வார்த்தையால் சொல்லும்வரை அவனிடம் பேசுவதாக இல்லை! என முடிவெடுத்தவளுடன் நித்திரை கண்ணாமூச்சி ஆடியது.
“என் வானம் விடிவது உன்னாலே” தமிழின் குரலில் ஒலித்த அந்த பாடல் யாழினியை கடந்த காலத்தில் இருந்த தரையிறக்கியது. மணி மதியம் மூன்றென காட்டிட, அவசரமாக போனை எடுத்தாள்.
“ஹ.. ஹலோ”
“ஏனுங்க அம்மணி .. உடம்புக்கு முடியலைங்கலாம்.. நான் வரட்டுமாங்கம்மணி?” கோயம்பத்தூர் தமிழில் அவளைக் கொஞ்சியவன் சாட்சாத் நம்ம தமிழேதான்.
“ஏன்..சாருக்கு வேலை இல்லையோ?”
“மேடம் வேலையிலிருந்து பாதியில் வந்தா நானும்தான் என்ன பண்ணுறதாம்?” என்றவனிடம் தான் நலமாக இருப்பதாக கூறினாள் யாழினி.
“உன்னை ரொம்ப டென்ஷன் படுத்துறேனாடீ? புகழை நான் கூட்டிட்டு வந்த்தில் உனக்கு இஷ்டம் இல்லையா”என்றான் தமிழ் தீவிரமான குரலில்.
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் தமிழ்? நேத்தில் இருந்து ஆயிரம் தடவை இதை கேட்டுட்டீங்க.. இவ்வளவு அக்கறை இருந்தால் இதையெல்லாம் பண்ணாம இருந்துருக்கனும்.. எதுக்கு இந்த வீண் வேலை..?”
“ நீ நினைக்கிற மாதிரி புகழ் மேல மொத்த தப்பும் இல்ல யாழினி.. அவனுக்கும் உனக்கும் என்ன சண்டைன்னு எனக்கு தெரியாது. ஆனா அவன் இங்க இருந்து போனதுக்கு இன்னொரு காரணம் இருக்குனு நான் உணருறேன்.. அதை சரி பண்ணலன்னா என்னால நிம்மதியா இருக்கவே முடியாது!”என்றான் அவன்.
“தமிழ் என்னாச்சு?”
“புகழை முழுசா வெறுக்காத.. இப்போதைக்கு அதைத்தான் சொல்லுவேன்..சரி அவன் எங்க?”என்றுகேட்டான் தமிழ்.
“அவன்..அவன்..தெரியல..நான் ரூமில் இருக்கேன்..”
“என்னடா நீ?நீயும் சாப்பிடாமல் அவனையும் கவனிக்காமல்?சரி நான் வீட்டுக்கு கிளம்பி வரேன்”என்றான் தமிழ்.
“இல்ல..நான் பார்த்துக்குறேன் “
“நீ கிழிச்ச.. அதான் வரேன்னு சொன்னேன்ல? ஃபோனை வைடீ சோடாபுட்டி”என்றதமிழ் யாழினியின் வீட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
அதேநேரம், குமரனின் வீட்டில் இருந்த புகழ், ஆயிஷா குமரன் இருவரிடமும் எதை சொல்வது.. எதை மறைப்பது என அறியாமல் மௌனமாக கடந்த காலத்தில் உறைந்தே போயிருந்தான்.