தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 06 - ஸ்ரீலக்ஷ்மி
உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே..!!
"சம்மூ, சம்முகுட்டி", என்று அழைத்தவாறே வந்தாள் தமயந்தி.
அவசரமாக எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சண்முகசுந்தரி தாயாரின் இந்தச் 'சம்மூ' என்ற அழைப்பினால் இன்னமும் அதிகமாய் எரிச்சல் பட்டாள்..
ஏற்கனவே முதல் நாள் காலேஜில் ரேக்கிங் கொஞ்சம் ஓவராய்ப் போனதில் அவள் எரிச்சலிலே இருந்தாள்..
இதில் இந்தம்மா வேறு போதாததற்கு நொய் நொய்யென்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தது அவளுக்குத் தலைவேதனையாய் இருந்தது..
என்ன செய்வது பருவ வயதில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களைத் தவிரப் பிறரை எண்ணிப்பார்ப்பதே பெரும் பிசகு என்று ஆகிவிட்ட காலத்தில் இருக்கிறவள் தானே இவளும்..
சாதாரணப் பேச்சுக்கள் கூட அவள் கருத்திலே பதியவில்லை..
பின்னிருந்து வந்து முதுகிலே தட்டிய தாயை முறைத்தவள்..
"அடியேய் சுந்தரி.. எத்தனை முறைத்தான் உன்னைக் கூப்பிடுவது.. என்னடிச் செய்துகிட்டு இருக்கிறே.. கொஞ்சம் பதில் சொல்லலாமில்லை.. என்னவோ செவிடன் காதில் ஊதியச் சங்கு மாதிரி ஒரு ரியாக்ஷன் நான் எதிர்பார்க்கலைம்மா..", என்று தானும் முறைத்தாள் தமயந்தி..
"ஸ்ஸ்.. காட்.. என்னம்மா காலையிலேயே வந்துட்டிங்க அக்கப்போருக்கு.. என்னாச்சு.." அப்பா கிடைக்கலியா இன்னிக்கு.. எப்பவும் ஜால்ரா பலமா பின்னாடிக் கேக்குமே..", என்று சொல்லிவிட்டுத் தாயின் பின்னே பார்த்தாள் கிண்டலாய்.
பெண்ணின் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தவள்.. "இதுக்கொன்ன்னும் குறைச்சலில்லை.. சரி விடு.. நம்ம வேலன் சார் இருக்கரில்லை.. அவர்.." என்று ஆரம்பித்தவரை,
"நம்மவா?.. இது எப்போதிலிருந்து?.. சரி முறைக்காதே.. இருக்காறா இல்லையான்னு பார்த்துட்டு வரணுமா?..போ போ அதெல்லாம் முடியாது தமயந்தி.. நான் போயி அங்கெல்லாம் பார்த்துட்டு வர முடியாது..", என்று முந்திரிக்கொட்டையாய் சுந்தரி முறுக்கிக் கொண்டாள்..
மனதில்.. "அய்யோ போன்னு சொல்லும்மா.. ஒரு சான்ஸ்.. அவனை உண்டு இல்லன்னு செஞ்சிடணும்.. வேலனைப் பார்க்கறதுக்கு.. சான்ஸ்.. மவனே ஏற்கனவே நான் காண்டுலே இருக்கேன்.. தீயா வேலைச் செஞ்சி உன்னை எப்படி உன்னை அலற விடறேன் பாரு..", என்று நினைத்தக் கொண்டு..
"சரி சரி உனக்காகப் போறேன்.. சொல்லு அவர் கிட்ட என்ன பேசணும்னு சொன்னே?.." என்று மீண்டும் தாயை முடுக்கினாள்.
"நான் எப்ப சொன்னேன் அவர் கிட்ட எதாவது கேக்கனும்னு?.. அதெல்லாமில்லை.. அவர் ஏதோ பசுமை புரட்சித் திட்டத்தோடு ஒரு அமைப்பின் செயலாளரா இருக்கிறாராம்.. இந்த வாரம் ஏதோ ஒரு மலையடிவாரம் பக்கமாக ஆயிரம் மரக்கன்றுகளை வைத்து ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிறாராம்.. எங்கேன்னு தெரியலை.. உனக்கு ஏதாவது தெரியுமா?.. ஏதோ ஆனந்தவனமாம் அதன் பேரு.. காடுகளை மக்கள் அழிப்பதால் இவர்கள் ஒரு வனத்தைப் பதிலுக்கு உண்டாக்கி இருக்காங்களாம்.."
பற்களை நறனறவென்று கடித்த சுந்தரி.., ‘அதான் அன்னிக்கே சனி எனக்குச் சடுதியா தன் மூஞ்சை காமிச்சிதே.. இம்சை அரசன்’ என்று நினைத்தவள், "அம்மா.. இப்போ இது ரொம்ப முக்கியம் பாரு.. ஒன்ரையனா விவகாரம் இதுக்கு இத்தனை பிலட்ப்பா?.. அப்படியே கோவம் கோவமா வருது.. இந்தாளை நினைச்சா..”
"சுந்து குட்டி உனக்கெதுக்குடா கோபம்.. அதுவும் அந்தச் சார் மேலே.. எவ்வளவு நல்ல விஷயம் செய்யுறார்.. இந்த மாதிரி நம்மாலே முடியலையேன்னு இருக்கு எனக்கு.. அப்பாகிட்டே சொல்லி இவங்களுக்கு உதவலாம்னு இருக்கேன்.. நீ என்னடா சொல்லறே?..", என்று கேட்டார் தமயந்தி.
"மாம்.. உன்னை என்ன சொல்லறதுன்னே தெரியலை.. போம்மா.. எனக்கு டைம் ஆச்சு.. இப்படி வேஸ்ட் பண்ணாதே நேரத்தை.. இன்னிக்கு மார்னிங்க் ஷோக்கு புக் பண்ணி இருக்கோம்.. வரேன் பைமா.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றவளை வருத்தத்தோடு பார்த்தார் தமயந்தி.
அவரும் தான் என்ன செய்ய முடியும் இந்தப் பெண்ணை.. தலைப் பாடாக அடித்துக் கொண்டாள் கூடச் சரியான நேரத்தில் ஒழுங்காய் சாப்பிடுவதில்லை.. இதில் அவ்வப்போது டையடிங்க் என்று கண்டதையும் சாப்பிட வேண்டியது.. அதுவே இவள் உடம்பு குண்டாகக் காரணம்.. இந்தழகில் இவளுக்குக் கொஞ்சம் லோ பி.பி வேறு ஆகிவிடுகிறது.. சரியான முறையில்லாத உணவுப்பழக்கம் எவ்வளவு பேராபத்து என்பது கூடத் தெரியாமல் நல்லா குதிர் மாதிரி வளந்திருக்கிறாள்.." என்று நினைத்தபடிப் பெருமூச்சை வெளியேற்றியவள் தோட்டத்துக்கு விரைந்தாள்.
காலேஜுக்கு போகும் வழியிலெல்லாம் சுந்தரியின் மனதிலே சிங்காரவேலனைப் பற்றிய நினைவே ஓடிக் கொண்டிருந்தது.. ‘எப்படி அவமானப்படுத்திவிட்டான்.. போதாதற்கு ஃபைன்வேறு போட்டிருக்கிறான்.. அதை ஒத்துக் கொள்ள வேறு இன்று கடைசித் தினம்.. இன்றைலிருந்து பத்து நாளைக்கு அவர்கள் கல்லூரியின் எல்லையில் புதிதாக அமையப்பெற்றிருக்கும் வசந்த வனத்திற்குச் சென்று அங்கே குப்பைப் பொறுக்க வேண்டும்.. போதாதற்கு அங்கே நடப்பட்டிருக்கும் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் விடவேண்டும்..