தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 01 - சசிரேகா
முன்னுரை
முன்னாள் காதலியையும் விட்டுக் கொடுக்க இயலாமல் இன்னாள் மனைவிக்கும் துரோகம் இழைக்க முடியாமல் தன் காதலை தன் மனைவி புரிந்துக் கொள்வாளா தன் மகிழ்ச்சியை காதலி புரிந்துக் கொள்வாளா என ஏங்கும் ஒரு நாயகனின் கதையிது.
பாகம் 1
சென்னை கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில்
”கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவம்யம் தைவமாஹ்நிகம்”
காலை 6 மணிக்கே ஆனந்தியின் வீட்டில் சுப்ரபாதம் ஒலிக்க அந்த பாடலைக் கேட்டபடி எழுந்தான் வெங்கடேசன். சோம்பல் முறித்தபடியே
”ஆனந்தி ஆனந்தி” என அழைத்துக் கொண்டே வர ஆனந்தியோ அதற்குள் பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு கண்கள் மூடி பிரார்த்தனை செய்தபடி இருந்தாள். அவளின் வேண்டுதலைக் கண்டு வெங்கடேசனின் முகம் வாடியது.
”ஆனந்தி வீணா எதுக்காக நீ இப்படி அலட்டிக்கிற, விட்டுத்தள்ளு அது அது நடக்கறப்பதான் நடக்கும் பார்த்துக்கலாம்” என பூஜையறை வாசலில் நின்றபடி சொல்ல அதைக்கேட்டு கண்கள் திறந்த ஆனந்தியோ கடவுளின் போட்டோவைப் பார்த்து கைகூப்பி விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு குங்கும சிமிழுடன் வெங்கடேசனிடம் வந்து நின்றாள்.