இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 05 - புவனேஸ்வரி கலைச்செல்வி
ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இனத்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
இனிய குரலில் அந்த கோவிலில் ஒலித்த பிள்ளையார் துதியை மனதிற்குள் பாடி கொண்டே பிள்ளையாரை வணங்கினாள் முகில்மதி.
அரக்கு மற்றும் சந்தன நிறம் கலந்த பாவாடை தாவணி அணிந்து, அழகாய் பின்னலிட்டு இன்று பூத்த மலர்போல பொலிவுடன் இருந்தாள் அவள் . நெற்றியின் வைத்திருந்த திருநீறு அவளுக்கு இன்னும் பாந்தமான தோற்றத்தைத் தந்தது . ஆனால் அவள் அழகை ரசிக்க முடியாமல் மனதை சங்கடப்படுத்தி கொண்டிருந்தது அவளின் விழிகள் .. ஆம், இறைவன் முன்னிலையில் மூடியிருந்த இருவிழிகளும் இடைவிடாது கண்ணீர் சொறிந்துகொண்டு இருந்தன. அர்ச்சகர் அருகில் வந்தும் கண் திறவாது இறைவனிடம் தன் மனக்குறையை சொல்லிக்கொண்டு இருந்தாள்.
" இதோ பாரும்மா " என்று அவர் அழைக்க, அவள் விழி திறப்பதற்குள்
" பிரசாதத்தை என்கிட்ட கொடுங்க சாமி நான் எடுத்துக்குறேன் " என்றபடி அவளருகில் நின்றான் அன்பெழிலன் . இருவரிடத்திலும் ஒரு பார்வையை வீசிய அர்ச்சகர்
" மனம்போல ரெண்டு பெரும் சந்தோஷமா வாழுங்க " என்று வாழ்த்திவிட்டு சென்றார் . இருவரின் பேச்சு குரலிலும் கண் விழித்தவள் அவசரமாய் விழிநீரை துடைக்க தாவணியை எடுக்க, அதற்கு முன்னே அவனின் கைகுட்டை அந்த வேலையை செவ்வன்னே செய்து முடித்திருந்தது .. அவனின் செய்கையில் பதறிய முகில்மதி இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.... அவள் கையில் பிரசாதம் தந்தவன் அங்கிருந்த செல்ல முயல
" எழில் " என்று அழைத்தாள் முகில்மதி . அவளின் அந்த அழைப்பினிலேயே மொத்த கோபமும் போய்விட, அதை காட்டிக் கொள்ளாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளை திரும்பி பார்த்தான் ..
" கூப்பிட்டியா ? "
" ம்ம்ம்ம் "
" என்ன ??"
" கோவமா ? "
"...."
" இது கோவில் எழில் .. யாரும் பார்த்தா நம்மளைத்தான் தப்பாக நினைப்பாங்க "
" தப்பாகனா? "
" ... "
" சொல்லு முகிலா"
" நீங்களும் நானும் .. "
" சொல்லு நீயும் நானும் "
" .... "
" இது பாரு முகிலா .. எல்லாம் நம்ம மனசை பொறுத்தது .. இந்த உலகம் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருக்கு ...நாம்தான் அதை ஒவ்வொரு கோணத்தில் பார்க்குறோம் .. துரியோதனன் கண்ணுக்கு கெட்டவங்களா தெரிஞ்ச மக்கள் தர்மனின் கண்ணுக்கு நல்லவங்களா தெரிஞ்சாங்கன்னு ஒரு கதை இருக்கு தெரியுமா? "
"..."
" அப்படித்தான் லைப் உம்... அந்த பூசாரி நம்மளை பார்த்ததும் சந்தோஷமா வாழுங்கன்னு சொன்னாரு .,. உன் கழுத்துல என்ன தாலியா இருந்தது ? அவர் நெனச்சிருந்தா என்னை வேற விதமா எண்ணி திட்டி இருக்கலாம் இல்லையா ? நல்லதும் கேட்டதும் நாம பார்க்குறதுலதான் இருக்கு .. உன்னை பொருத்தவரை நாம பேசிக்கிறதே உனக்கொரு தப்பான விஷயமா தோணுது .. அதான் நீ இப்படி எல்லாம் யோசிக்கிற "
" ஐயோ அப்படியெல்லாம் எதுவுமில்லை ... நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன் எழில்.... நீங்களும் தப்பாக புரிஞ்சுகிட்டு பேசாதிங்க ப்ளீஸ் " என்றவளின் குரலில் இருந்த இறைஞ்சல் அவனை முழுசாய் கரைத்தது... அருகில் இருந்த மண்டபத்தில் சென்று அமர்ந்தான் அவன்... " வா " என்று அழைத்தால் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தவன் அல்லவா? அதனால் எதுவும் சொல்லாமல் அவன் நடந்து சென்றான் .. சில நொடிகள் அவன் போகும்திசையையே புரியாமல் பார்த்தவள் அவனை பின்தொடர்ந்தாள். அவளின் கொலுசின் ஓசையே அதை பறைசாற்ற, அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது ..
" ஹ்ம்ம் இப்போ சொல்லு முகிலா .. ஏன் அழுத நீ ? "
அவனின் கனிவான கேள்வியில் அவளின் கண்ணீர் சுரபிகள் மீண்டும் விழித்தெழ
" நீ அழ ஆரம்பிச்சா நான் கெளம்பிடுவேன் " என்று மிரட்டினான் அன்பெழிலன் ..சட்டென கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..
" என்ன ? "
" இல்ல, ரொம்பத்தான் என்னை மிரட்டுறிங்க "
"ஏன் எனக்கந்த உரிமை இல்லையா ? " என்று மனதிற்குள் கேட்டுகொண்டான் ..
" சரி சொல்லு ஏன் இந்த அழுமூஞ்சி அம்புஜம் கோலத்தில் இருக்க நீ ? "
" மித்ரா அண்ணி ..."
" ஆமா நானே கேட்கனும்னு நெனச்சேன் அவளுக்கு உடம்பு எப்படி இருக்கு ? "
" பீவர் கொஞ்சம் குறைஞ்சிருக்கு எழில்.. ஆனா தூக்கத்துல அடிக்கடி உலருறாங்க .. யாருகிட்டயும் பேசறதில்ல . கேட்டா மயக்கமா இருக்குன்னு சொல்றாங்க ... ரெண்டு நாளாச்சு அண்ணி எங்க கூடலாம் நல்ல பேசி .. வீடு வீடாகவே இல்ல .. அப்பா கூட அண்ணியை நெனைச்சு கவலைபடுறார்.. எப்பவும் என்னை தனியாக கோவிலுக்கு அனுப்ப மாட்டார் .. ஆனா இப்போ நானே கூப்பிட்டும் வரலன்னு சொல்லிட்டாரு ... ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு "
" வைஷு அக்க அவளுக்கு காய்ச்சல்னு சொல்லவும் எப்போதும்போலன்னு தான் நான் விட்டுடேன் .. பிளஸ் கொஞ்சம் வேலை இருந்துச்சு... ஆனா இவ்வளோ நடந்தது எனக்கு தெரியாது .. நீயாச்சும் என் கிட்ட சொல்லிருக்கலாமே "
" அது வந்து .."
" என்ன ?"
" உங்க நம்பர் என்கிட்ட இல்ல எழில் "
".."
" ப்ளீஸ் கோபப்படாதிங்க "
" டெல்லி போனதும் நான் இமெயில் பண்ணேனே "
" பார்த்தேன் .. ஆனா நோட் பண்ணல"
" அந்த அளவுக்கு நான் வேண்டதவனா போயிட்டேனா ? "
" எழில் "
" பேசாதேடி ... எனக்கு என்ன ஊரு உலகத்துல வேற பொண்ணே கிடைக்காதுன்னு நெனைச்சியா ? இல்ல உன்னை ஏமாற்றத்தான் பழகினேன்னு நெனைச்சியா ? "
".."
" ஒரு தடவை ஒருத்தர் கிட்ட ஏமாந்து இருக்கலாம் .. ஆனா அதை வெச்சுகிட்டு உன்கிட்ட உண்மையா இருக்குறவங்களை நீ இப்படி தண்டிக்க கூடாது முகில்மதி " இடியாய் இறக்கினான் வார்த்தைகளை ...!