இப்படியே காலமும்... சூழலும் என்னைப் பக்குவப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா நித்தியோட மரணத்தை மறக்க வைச்சது. ஆனா, அது கொடுத்த வலியை மட்டும் மறக்கவே முடியலை!
ஒரு காலத்தில் ஆறுதலா இருந்த நித்தியோட லெட்டர்ஸ்.. அதற்கு பின்னாலே வேதனை கொடுத்தது...
அதிலும்.. அவளோட கடைசி லெட்டர்ல எழுதினது..
“ஆரி நீ மட்டும் அன்பு இல்லத்தில் இருந்திருந்தா.... நான் போகணும்ன்னு நினைச்சிருக்க மாட்டேன் தெரியுமா?”
மனசுலே ஆழமா பதிஞ்சிடுச்சுடா.... அது தான் என்னை அறியாம இப்படி கனவா வருதோ என்னவோ... அதற்கான விடிவு தான் எப்பவோ...”
சிறு வயதிலே... விளையாடும் பொழுது பெரிதாக அடி பட்டால் கூட... தன் வலியை காட்டிக் கொள்ளாமலே இருந்து விடும் தன் நண்பன்... அந்த இரவு கண்கள் பனிக்க வேதனையுடன் சொன்னது வாசுவின் நினைவில் இருந்து என்றும் அகலாது தான்!
“மச்சி உன்கிட்ட பேசின பிறகு மனசு ஏனோ லேசானது போல இருக்குடா...”, என்று சொன்னதோடு அதன் பின் அதைப் பற்றி அவனிடம் பேசியது இல்லை...
ஆர்யமனை பற்றி கவலையில் ஆழ்ந்திருந்த வாசுவின் சிந்தையை கலைக்கும் விதமாக முகநூல் மெசென்சர் செய்தி வந்ததை அறிவிக்க... தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்...
“மச்சி சேக்ஸ்பியர் நாவல் எடுத்துட்டு வா... கிளாஸ் எடுக்கிறேன்”, என்றது அந்த தகவல்..
‘உன் சோகத்தை ஆஃப் செய்றதுக்கு இங்கிலீஷ் படிக்க சொல்லி ப்ளாக் மெயில் பண்ணுறே!!! நிம்மதியா கவலைப்படக் கூட விட மாட்டேங்கிறே மாப்ளே!!! நீ இருந்தாலும் இருக்க முடியலை... இல்லாமலும் இருக்க முடியலை!’,
என்று ஆதங்கப் பட்டவனாக..
“மாப்ளே! மார்க் ‘சீன்’(seen) னுன்னு போடுறதை நம்பாதே! கனவுலே பிஸியா இருக்கிறேன்... குட் நைட்”, என்று பதில் அனுப்ப...
அவன் பதிலைக் கண்ட ஆர்யமனுக்கு ஒரு நிம்மதி! ‘இனி என்னை பத்தி நினைக்க மாட்டான்’, என்ற எண்ணத்தோடு ஓவிய தீட்டும் ப்ரஷ்ஷை கையில் எடுத்தான்...
மெல்ல புத்தம் புது நாளை... அன்றைய ஓட்டத்தை ஆரம்பிக்க... ஆதவன் ஆயத்தமாகிக் கொண்டிருக்க...
இரவு எப்படியோ நித்திரை தேவதையைப் பற்றிக் கொண்டு உறங்கிய வாசுவின் செவிகளில்... எங்கோ ஒலித்த பாடலின் சத்தம் தீண்ட...
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி
இவன் மனம் ஆர்யமனுக்காக பதற... திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவன் பொழுது புலர ஆரம்பித்து இருந்ததை கண்டதும்...
‘நைட் முழுக்க தூங்காம இருக்கிறானோ... பாட்டை கேட்ட படி....’, மேலும் பதறி மாடிக்கு ஓடினான்...
மொட்டை மாடி இணைப்போடு இருந்த அந்த சிறிய அறைக்குள் வேகமாக வாசு நுழைய...
அவன் எண்ணத்திற்கு மாறாக... அங்கே ஆர்யமன் தூங்கிக் கொண்டிருந்தான்..
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
இன்னும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க.. அது இவர்கள் வீட்டில் இல்லை.. பக்கத்து வீட்டில் என்பதை அவன் கிரகித்த நேரம்...
அருகில் பப்பியின் புதிரை சுமந்த கடிதத்தை வைத்த படி..
ஆர்யமனின் ஒரு கை பெயின்ட் ப்ரஷ்ஷயும்...
மறு கை... அவன் பக்கமாய் ஒருக்களித்து படித்திருந்த வாக்கில் வரையப்பட்டிருந்த அந்த பெண் ஓவியம். - தீ வடிவம் போல வரையப்பட்ட அந்த பெண் ஓவியம் இருந்த கான்வாசை அணைத்த படியும்....
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் அவன்..
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….
பின்னணியில் ஒலித்த சோகப் பாடலையும்... அவன் இருந்த கோலத்தையும் பார்த்தவனுக்கு...
‘கடவுளே இவனை இப்படியே விட்டுறாதே! அவனுக்கு தற்காலிக நிம்மதியைத் கொடுக்கிறவளை நிரந்தரமா இவன் கூட சேர்த்து வைச்சிடேன்’, எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே..... ஆர்யமனின் அலைபேசியில் இருந்து அழைப்பு மணி ஒலித்தது!!!!