இவர்களின் உரையாடலை அந்த பக்கம் வந்த சந்திரசேகர் கேட்டிருந்தார். அவருக்கும் யாரிந்த நந்தி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அங்கேயே நின்றுவிட்டார்.
“நான் சொன்னா நீ ஒத்துப்பியோ? மாட்டியோ? வேணாம் விடு மைதி”
“நான் கண்டிப்பா ஒத்துக்குறேன்” என்று அவளின் ஆவல் அவன் சொல்லியதின் பொருளைக்கூட யோசிக்க விடாமல் பேச வைத்தது.
“அது…அது…மைத்ரீ!”
“என்னடா! இப்படி இழுத்துட்டிருக்க? சொல்லுடா”
“அதான் சொல்லிட்டேனே மைத்ரீன்னு” என்றான் ஒரு குறும்பு புன்னகையுடன்.
ஜெய்யின் பதிலில் உரக்க சிரித்துவிட்டிருந்தார் சந்திரசேகர். ஆனால் மைத்ரீக்கு அவன் பேச்சு இன்னமும் புரியாமலிருந்தது. அவரின் சிரிப்பு சத்தத்தில் வடிவு அங்கு வந்தார்.
“என்ன ஒரே சிரிப்பாயிருக்கு!” என்று கணவனிடம் கேட்டவர் ஜெய் அங்கிருப்பதைப் பார்த்தவர், “கண்ணா! ஆதர்ஷ்க்கு கல்யாணத்துக்குப் பெண் பார்த்திருக்கோம். சாயங்காலம் நீயும் மைதியும் ஆதர்ஷோட அந்தப் பெண்ணை பார்த்திட்டு வந்துருங்க”
“கண்டிப்பா! ஆதர்ஷோட நாங்க போயிட்டு வரோம்மா. இதை பற்றி தான் மைத்ரீயும் நானும் பேசிட்டிருந்தோம்.”
“நீங்க ஏன் இவ்வளவு உரக்க சிரிச்சீங்க?” என்றபடி கணவரிடம் திரும்பினார் வடிவு.
“ஜெய் ஒருத்தவங்களை பற்றி சொன்னான். அது தான் சிரிச்சுட்டேன்” என்றபடி மைத்ரீயின் குழம்பிய முகத்தை பார்த்தவர் மறுபடியும் சிரித்தார்.
“அப்படி யாரை பற்றி ஜெய் சொன்னான்?”
“மைத்ரீட்ட தான் ஜெய் சொல்லிட்டிருந்தான். நீ அவளிட்டயே கேளு”
“யாரது மைத்ரீ?” என்றபடி மகளிடம் திரும்பினார் வடிவு.
“அதை தான் நானும் கேட்டிட்டிருக்கேன் அம்மா! ஆனால் இவன் சொல்லிட்டேன்னு என்னை ஏமாத்துறான்” என்று ஜெய்யின் மேல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தாள்.
“முதல்ல என்ன நடந்ததுன்னு அம்மாட்ட சொல்லு” என்றார் சந்திரசேகர்.
ஜெய் சொன்னவற்றை அச்சு பிசகாமல் அம்மாவிடம் சொன்னாள் மகள். கேட்டு கொண்டிருந்த வடிவும் சிரிக்க மைத்ரீக்கு குழப்பம் குறைந்து கோபம் எட்டிப் பார்த்தது.
“என்னம்மா? நீங்களும் சிரிக்கிறீங்க. உங்க பையன் எது சொன்னாலும் உங்களுக்கு பெருமையாதான் இருக்கும். அப்பா! நீங்களாவது என்னன்னு சொல்லுங்க” என்று கோபத்தில் தொடங்கி தந்தையிடம் செல்லம் கொஞ்சியபடி முடித்தாள்.
“நந்தி யாருன்னு நானே என் பொண்ணுக்கு சொல்றேன்” என்று அவளை தன்னுடன் அழைத்து கொண்டு போய் சோஃபாவில் உட்கார்ந்தார்.
அவர்களை பின்தொடர்ந்து வடிவு மற்றும் ஜெய் சென்று உட்கார்ந்தனர்.
“சிவன் கோயிலில் என்னென்ன இருக்கும்?”
“என்னப்பா! இப்போ இதுவா முக்கியம்?” என்று சலித்து கொண்டாள் மைத்ரீ
“பதில் சொன்னைன்னா உனக்கும் பதில் கிடைக்கும்”
ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் சொல்ல தொடங்கினாள், “சிவன், நந்தி, சண்டிகேஸ்வரர்….” என்று அவள் முழுதும் சொல்லுவதற்குள் சந்திரசேகர் கேட்டார்,
“சிவனை தூரத்திலிருந்து பார்க்கும்போது எப்படி தெரியும்?”
“நந்திதான் சிவனுக்கு முன்னாலிருக்குமே! சிவனே தெரியமாட்டார்”
“நீ ரொம்ப புத்திசாலி மைத்ரீ” என்றான் இவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்த ஜெய்.
ஜெய்யின் வஞ்சபுகழிச்சியை அறியாமல் பெருமிதத்துடன்
“எனக்கு நல்லாவே தெரியும் நான் புத்திசாலின்னு”
அவளைப் பார்த்த மற்ற மூவரும் சிரித்தனர்.
“இன்னைக்கு ஆதர்ஷும் அவனுக்கு பார்த்திருக்கும் பெண்ணுக்கும் நடுவிலே யாராவது வந்தா உனக்கு என்ன தோனும்?”
“என்ன கேள்விப்பா இது? அவங்களும் சிவன் கோயில் நந்தி மாதிரிதானே”
“இன்னைக்கு உன்னோட ஈவ்னிங்க் பேளன் என்ன?”
“தெரியாத மாதிரி கேக்குறீங்களே? ஆதர்ஷோடதான் போறேன்….” என்று அவள் முடிக்கும்முன்னரே அங்கிருந்த எல்லோரும் சிரித்தனர்.
“அப்போ நான் தான் ஜெய் சொன்ன நந்தியா?” என்று வாய்விட்டு சொன்னவள் அடுத்த கணமே ரௌத்திராகாரமாய் அவன் மேல் பாய்ந்தாள்.
அவள் பாய்ந்த கணம் சட்டென்று அங்கிருந்து இட புறம் நகர்ந்தான் ஜெய். அவன் இவளிடமிருந்து தப்பித்த ஏமாற்றத்தை அப்பட்டமாக அவளின் முகம் வெளியிட்டது. மைத்ரீயின் முகவாட்டத்தை பார்த்த ஜெய் உடனடியாக அவளின் பக்கத்தில் அமர்ந்து,
“இவ்வளவுதானா உன் கோபம்?” என்று அவளை சீண்டி அதற்கான பலனாக தன் முதுகில் பல அடிகளையும் பரிசாகப் பெற்றான்.
“என்னை குறைச்சு எடை போடாத குரங்கே! இன்னும் நாலு வேணும்னாலும் கேளுக் கொடுக்கிறேன். நேரத்துக்கு போகனும். மறக்காதே ஜெய்!” என்றுவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள்.