"நானே துரத்தி அடிச்சாலும் மொத ஆளா போய் அவனை தேடிப் பிடிச்சு இழுத்துட்டு வந்து என்கிட்டேயே சண்டைக்கு நிப்ப...எனக்கு எதுக்கும்மா வம்பு" சுசீலாவும் பதிலுக்கு அவள் காலை வாரினார்.
"ஹாஹா என் அத்தைகிட்ட பேசி ஜெயிக்க முடியுமா....லஞ்ச் மெஸ்லேயே சாப்ட்டுக்குறேன் அத்தை. டாடா"
"சித்து உன்ன ட்ராப் பன்றேன்னு சொன்னானே..சித்து அபி கிளம்பிட்டா பாரு" மகனுக்கு குரல் கொடுத்தார்.
"அத்தை... தடுக்கி விழுந்தா எய்ம்ஸ். இதுக்கு போய் இவன் ட்ராப் செய்றான்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க……….. ‘முடியாது’ என்று சொல்லப் போனவள் மாடிப்படிகளில் ஒரு கையில் சாவியை சுழற்றியபடியே மறு கையில் இரு ஹெல்மட்களைப் பிடித்தபடி வந்தவனை பார்த்ததும் கண்கள் பளிச்சிட அப்படியே சொல்ல நினைத்ததை மாற்றி ," இருக்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கலாம்.வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே...பக்கமா இருந்தாலும் சித்து ட்ராப் பண்ணா பெட்டர்" எனவும் தாய் மகன் இருவரும் அவளது இரு பக்க காதினைப் பிடித்து திருகினார்கள்.
"பைக் பார்த்ததும் அந்தர் பல்டி அடிச்சாச்சு...கள்ளி" என்றவன் "போயிட்டு வரோம்மா" சுசீலாவிடம் விடை பெற," பை அத்தை" அவளும் கை அசைத்து வாசலுக்கு விரைந்தாள்.
அவன் ஷெட்டில் இருந்து பைக்கை எடுத்து வரவும்," ரொம்ப நாள் ஆச்சுல்ல நான் பைக் ஓட்டி...குடேன் நான் ஓட்டுறேனே" என்றாள்.
"நீ மட்டும் பால்கோவா கேட்டேனே குடுத்தியா" அவன் பைக்கில் அமர்ந்து ஹெல்மட் மாட்டிக் கொண்டிருந்தான்.
"ஒரு ஸ்பூன் நிறையாஆஆ குடுத்தேன்ல சித்து" அதுவே பெருசு என்பது போல பேசினாள்.
"சரி வா. யூசுப் சாராய் பக்கமா விடு. ரிங் ரோடு வழியா போன அப்புறம் எப்போவும் தரவே மாட்டேன்" அவள் தில்லாலங்கடி பற்றி தெரிந்திருந்தவனாய் சொல்ல," லூசு எல்லாத்தையும் மைண்ட் ரீட் பண்ணிடறானே" மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
"என்ன மனசுக்குள்ள மந்திரம் ஓதுற"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
"சித்து நல்லவன் வல்லவன் நாளும் தெரிஞ்ச உத்தமன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்"
"சொல்லு சொல்லு சத்தமா சொல்லு" அவளிடம் பைக்கை ஒப்படைத்து அவள் பின்னால் அமர்ந்தான்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும் என்பது தில்லியில் சட்டம். ஆனால் இந்த சட்டம் வரும் முன்னிருந்தே பைக் வாங்கிய நாள் அன்றே தரமான இரு ஹெல்மட் சேர்த்தே வாங்கியிருந்தான் சித்தார்த்.
பின்னாடி உட்கார்ந்து இருப்பவர்களுக்கு ஹெல்மட் எதற்கு என்று ஷோரூமில் அப்போது யாரோ கேட்க," என்னை நம்பி தான் பைக் பின்னாடி உட்காந்திருக்காங்க. அவங்க பாதுகாப்பு என் பொறுப்பு. நான் கவனமா ஓட்டினாலும் மத்தவங்க தவறால் ஏதாச்சும் அசம்பாவிதம் ஆச்சுன்னா..." என்றவன்," எப்படியும் மோஸ்ட்லீ என் கூட எனக்கு பிரியமானவங்க தான் பைக்ல வருவாங்க...அவங்க உயிரை விட வேறு என்ன எனக்கு முக்கியம்" தெளிவாக கூறினான்.
அந்த ஷோரூமில் இருந்த பலர் அன்று சித்துவின் பேச்சினால் கவரப்பட்டு கூடுதல் ஹெல்மட் வாங்கிச் சென்றார்கள்.
அபூர்வாவிற்கு ஒரே பெருமை.. வாய் ஓயாது எல்லோரிடமும் அதை சொல்லிக் கொண்டே இருந்தாள் "உங்கள் பின்னே அமர்ந்திருப்பவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்றால் ஹெல்மட் வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள்" விளம்பர பாணியில் தனது கல்லூரி நட்புக்களிடமும் சித்துவின் புகழ் பரப்பி கொண்டிருந்தாள்.
அவனிடம் இருந்து பைக்கை வாங்கி அது ஏதோ ஒரு சிம்மாசனம் போல கம்பீரமாக அமர்ந்து கொண்டவள் அவன் அமர்ந்ததும் ஒரே கிக்கில் ஸ்டார்ட் செய்து அந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் என்னும் புரவியில் பறந்தாள். இரு கைகளையும் அவள் தோள் மேல் மெல்ல பற்றி இருந்தவன் அவள் சற்று வேகமாக செல்ல முற்படும் போதெல்லாம் ஓர் அழுத்தம் தரவே அவளும் நிதானமாக ஓட்டினாள்.
மொத்தமே அரை கி மீ கூட இருக்காது என்றாலும் அவள் முடிந்தவரை சுற்றி அடித்துக் கொண்டே சென்றாள். கேம்பஸ் சென்றதும்," வாயேன் நெஸ்கபே ல காபூசினோ குடிக்கலாம்" பைக்கை நிறுத்திக் கொண்டே அவள் சொல்ல சரி என்று தலையாட்டினான்.
காபியை அருந்தியபடியே இருவரும் மௌனமாகி விட்டிருந்தனர். இருவர் நினைவுகளும் இந்த பைக்கை முதன் முதலில் வாங்கிய நாளுக்கு விசா பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்து கொண்டிருந்தது.
அப்போது சித்தார்த் ஐ ஐ டியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான். காலேஜ் படிக்க ஆரம்பித்ததில் இருந்தே அருகில் இருந்த குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து சிறிதளவே எனினும் சுயமாக சம்பாதிக்கத் தொடங்கியிருந்தான்.
அபூர்வா எய்ம்ஸில் எம் பி பி எஸ் படித்துக் கொண்டிருந்தாள். அவளும் சித்துவை பின்பற்றி குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவித்தாள். அபூர்வா முறைப்படி பாரதநாட்டியத்தின் தேர்வுகளில் முதன்மையாக தேர்ச்சியும் பெற்றிருந்தாள்.