மனைவியின் மேல் கொண்ட காதல், பெற்ற இரண்டு கண்மணிகள் காட்டிய பாசம், அனைத்துமே மாறிக்கொண்டிருந்த அவனது சிந்தனையில் பல நேரங்களில் இருப்பதில்லை…
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பெருமையும் புண்ணியமும் விசாலத்தையே சேரும்…
நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் சண்முகத்தின் வீட்டில் தான் வேலைப் பார்த்து வந்தாள்… சண்முகம், சுந்தரியை மனைவியாக்கி வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல், சுந்தரிக்கு பிரியமானவளாகி போனாள் விசாலம்…
திலீப் பிறந்தது முதல், தாயின் அருகாமையிலும், விசாலத்தின் வளர்ப்பிலும் தான் வளர்ந்தான்… அவர்கள் இருவரைத் தவிர அவன் மற்றவர்களோடு பேசுவதும் குறைவு, ஒட்டுவதும் குறைவு…
தாய் சுந்தரியின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே விளையாடி வந்தவன், எந்நேரமும் தாயின் கையணைப்பிலேயே இருந்தான்… மீதி நேரங்கள் அனைத்தும் அவன் விசாலத்திடம் தான் இருந்தான்…
அக்கா, அக்கா என்று வாய் ஓயாமல் அவளை அழைத்திடுவான் திலீப்… விசாலத்திற்கும் திலீப்பின் மேல் தனி பிரியமும் உண்டு… அவனை தானே வளர்த்ததாலா இல்லை சுந்தரி தன் மேல் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடா?... எதுவென்று பிரித்து சொல்லிடமுடியாத போதும், அவள் திலீப்பின் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தது நிதர்சனமான உண்மை…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்
படிக்க தவறாதீர்கள்..
அந்த நேரத்தில் தான் விசாலத்திற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது… விசாலம் ஒரு வகையில் சண்முகத்திற்கு தூரத்து உறவு…
விசாலம் அவ்வப்போது தன் மகளை அங்கே தூக்கி வரும் வேளை, பெண் குழந்தை என்ற பிரியமா?... இல்லை அது தன் தோழி விசாலத்தின் குழந்தை என்ற எண்ணமா?... சுந்தரி விசாலத்தின் மகளை வாஞ்சையுடன் கொஞ்சுவார்…
சுந்தரி காட்டிய பாசம், உன் பொண்ணு தான் இந்த வீட்டு மருமக என்று சொன்ன வார்த்தைகள் அனைத்துமே அவளை திலீப் தன் மருமகன் என்று எண்ண வைத்தது….
திலீப்பிற்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்த வேளை சுதீப் பிறந்தான்… அதுவரை தன்னை அணைத்திருந்த தாயின் கரங்கள் சுதீப்பை அணைத்திட, அது அவனின் மனதில் பெருங்குறையாக விழுந்தது…
சிறு பிள்ளை என்று சுதீப்பை சுந்தரி கவனித்துக்கொள்ள, திலீப்பிற்கோ, அறியா பச்சிளங்குழந்தை சுதீப்பின் மேல் கோபம் பிறந்தது…
எல்லாம் இவனால் தானே… இவன் பிறந்ததால் தானே, தாயின் அரவணைப்பு தனக்கு கிடைத்திடவில்லை என்று சுதீப்பை விட்டு விலக ஆரம்பித்தான் திலீப்…
சுதீப் நடக்க ஆரம்பித்த வேளை, சுகன்யா பிறந்தாள்… தங்கையின் மேல் பாசம் இருந்த போதும் திலீப் அதை அவளிடம் வெளிக்காட்டிக்கொண்டதில்லை எப்பவும்…
கையில் எது வைத்திருந்தாலும், அதை முதலில் தங்கைக்கு கொடுப்பானே தவிர, சுதீப்பிற்கு ஒருநாளும் கொடுத்ததில்லை அவன்…
ஏனோ சிறுவயதிலேயே விழுந்த வெறுப்பு விதை, விருட்சமாக மாறக்கூடும் என்ற எண்ணமே இல்லாதிருந்தான் அவன்…
உன் மருமகன் திலீப் தான் என சுந்தரி சொல்லியதிலிருந்து, திலீப்பினை அவள் மரியாதை கொடுத்தே அழைத்தாள்…
“திலீப் தம்பி… இங்க வாங்க… இதை சாப்பிடுங்க…” என திலீப்பினை கவனிப்பவள், சுதீப்பையும் அதே அளவு உபசரித்து கவனிக்க தவறியதில்லை…
திலீப்பின் மேல் இருக்கும் பாசம் சுதீப்பின் மேலும் சுகன்யா மேலும் கூட அப்படியே தான் இருந்தது…
சுதீப்பை சில சமயங்களில் அவள் வா போ என்றும் அழைத்ததுண்டு… ஆனால் தப்பித்தவறி கூட திலீப்பினை அவள் வா போ என்று அழைத்ததில்லை…
வாய் நிறைய விசாலம் அக்கா என்று திலீப் அழைத்திடும் நேரத்தில், சுதீப்போ அவளை விசாலம்மா என்று தான் அழைப்பான்…
அவனுக்கு அவளை பிடிக்கும்… உரிமையுடன் தங்களிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் மூன்று பேருக்குமே பிடித்து போனதில் ஆச்சரியம் தான் என்ன?...
வீட்டில் வேலை செய்யும் ஒரு பணியாளாக விசாலத்தை அந்த வீட்டில் யாரும் நினைத்ததில்லை… தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே பாவித்தனர் அவளை…
அதிலும் சுந்தரி ஒருபடி மேலே போய், அவளுக்கும் அவள் பெண்ணிற்கும் வேண்டியதை தானே வாங்கி கொடுத்து கவனித்துக்கொண்டாள்… விசாலத்திற்கு பெண் பிறந்த சில வருடங்களிலேயே அவள் கணவன் இறந்துவிட, விசாலத்தின் மேல் இன்னும் பாசமானார் சுந்தரி…