சுதந்திர தின சிறப்பு கீதம் சங்கீதம்....- 13 - தேவி
வணக்கம் நண்பர்களே
மீண்டும் ஒரு பாடலோடு கீதம் சங்கீதத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எழுபத்தி இரண்டாம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம்.
சுதந்திரத்திற்காக பாடு பட்ட அநேகம் தலைவர்களை நாம் தெரிந்து கொண்டு இருக்கிறோம். அவர்களின் பேச்சால், செயலால் , எழுத்துக்களால் என்று அந்த விடுதலை உணர்வை அன்றைய மக்களுக்கு எல்லா வழிகளிலும் முயன்றனர் நம் சுதந்திர போராட்ட தலைவர்கள்.
எத்தனை எத்தனையோ விதமான போராட்டங்கள். ஆண்,பெண், ஜாதி, மத, இன பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராடியதற்கு பிறகு கிடைத்ததே இந்த சுதந்திரம்.
நம் மகாகவியான பாரதியாருக்கு இதில் பெரும் பங்கு உண்டு. அவரின் கவிதைகள் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பாடலாக பாடப்பட்டு , சுதந்திர எழுச்சியை ஊட்டியது.
அதில் ஒன்று பாரத நாட்டைப் பற்றிய பாடல். அவர் இந்த இந்திய திருநாட்டை எத்தனை அழகாக மேன்மைபடுத்தி கூறி இருக்கிறார்.
பாருக்குள்ளே – உலகத்திலே நல்ல நாடு என்று பாரத நாடு என்று - கூறுகிறார். ஞானம், மோனம், அன்னதானம், கானம் கவிதை என்று கலைகளில் சிறந்து விளங்கும் நாடு. வீரத்தில், தீரத்தில், சாத்திரம் கொடுப்பதில் என அனைத்திலும் சிறந்த நாடு. மேலும் தொழில் முனைவதில், யாகத்தில், யோகத்தில், தவத்தில் தனித்து விளங்கும் நாடு. மாதர் தம் கற்பை காப்பதில், உபகாரத்தில், நெஞ்சின் ஈரத்தில், தெய்வ பக்தியில் என அனைத்திலுமே நம் பாரத நாடு நல்ல நாடு என்று கூறுகிறார். இன்னும் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடு என்று புகழ்கிறார்.
இந்த பாடலை அநேகம் பேர் பாடி இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கர்னாடக இசைக் கலைஞர்கள் பாம்பே சகோதரிகளின் பாடலே.
பம்பாயில் பிறந்து வளர்ந்த சி.சரோஜா, சி.லலிதா என்ற சகோதரிகளே பாம்பே சிஸ்டேர்ஸ் என்று அழைக்கப்பட்டனர். 1963 இல். இருந்து மேடை கச்சேரிகள் செய்து வரும் இவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , மராட்டி என்று அனேக மொழிகளில் பாடல்கள் பாடி வருகின்றனர். மேலும் ஆடியோ கம்பெனிகளோடு சேர்ந்து டிவோஷனல் ஆல்பம் செய்து வருகின்றனர்.
அவர்கள் பாரதியார் பாடல்கள் என்ற ஆல்பத்தில் இந்த பாடலும் இடம் பெற்று இருக்கிறது. ஜோன்புரி என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த பாடல் இது.
பாரதியார் வரிகளோடு அவர்கள் இருவரின் குரலினிமையும் சேர, இப்பேற்பட்ட நாட்டில் நாம் பிறந்து இருப்பதை பெருமையாக எண்ண வைக்கிறது.
இந்த நாளில் சுதந்திரம் கிடைப்பதற்காக பாடு பட்ட தலைவர்களை நினைவு கூறுவதோடு , பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும் நாம் உறுதி கொள்வோம்.
இதோ பாடல் வரிகளோடு, பாடல் லிங்க் உங்களுக்காக. மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம்.
பாடல் வரிகள்
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு
சரணங்கள்
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)
நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)
வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)
தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப்
மீண்டும் சந்திப்போம்.
{kunena_discuss:1092}