பொது - நவராத்திரி சிறப்பு கட்டுரை: கடவுளின் பொம்மை - சுபஸ்ரீ
அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்
முதல் மூன்று நாட்கள் வீரத்தை குறிக்கும் துர்கை வழிபாடு
அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை குறிக்கும் லெட்சுமி வழிபாடு
இறுதி மூன்று நாட்கள் கல்வியை குறிக்கும் வாக்தேவி என்னும் சரஸ்வதி வழிபாடு.
என நாம நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவது அனைவரும் அறிந்ததே
பசு பட்சி முதல் பரமாத்மா வரையிலான பொம்மைகளை கொலு படிகளில் அலங்கரித்து நாம் பூஜிக்கிறோம்.
பல பேரின் வீட்டில் மரப்பாச்சி பொம்மைகள் பிரதானமாக இடம் பிடித்திருக்கும்.
ஆண் பெண் என்றும் ராஜா ராணி என மரப்பாச்சி பொம்மைகள் இருக்கும். கொலுவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
பலரின் கொலுவில் முதல் பொம்மை மரப்பாச்சி பொம்மை பிரதானமமாக இடம் பெற்றிருக்கும்.
இத்தனை முக்கியத்துவம் ஏன்?
கடவுளின் பொம்மை ஆயிற்றே முதல் இடம் வகிக்காத என்ன?
ஆம் . . இறைவன் ஆண் பெண்ணை படைப்பதற்கு முன் மரப்பாச்சி பொம்மைகளை வடிவமைத்துப் பார்த்தார் என ஒரு கூற்று உள்ளது.
இன்று பல வகை வகையான பொம்மைகள் கண்ணை கவரும் நிறங்களில் பொம்மைகள் வந்தாலும் நவராத்திரி கொலுவில் முதலிடம் என்னவோ மரப்பாச்சி பொம்மைக்குதான். முதல் படியில் கம்பீரமாக தன் துணையுடன் அமர்ந்திருக்கும்.
தாய் வீட்டு சீதனமாக இதை பெண்கள் பெறுவது சிலர் வீட்டு பாரம்பரிய பழக்கம். அக்காலத்தில் திருமணத்தில் புகைப்படம் வீடியோ போன்ற சாதனங்கள் இல்லை. அதனால் இதை தங்கள் திருமணத்தை நினைவுகூறும் பொக்கிஷமாக கருதுவார்கள்.
மரப்பாச்சி பொம்மை செஞ்சந்தன மரம், முள்ளிலவு மரம், ஊசியிலை மரம் போன்றவற்றால் செய்யப்படும். இவை சிறப்பாக செதுக்கப்படும் இடங்களில் திருப்பதியும் ஒன்றாகும். ஆதலால் அது ஏழுமலையானையும் தாயாரையும் குறிப்பதாக சிலர் கருதுவர்.
பெரும்பாலும் மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தினால்தான் செய்வார்கள். சந்தனத்தை ஒத்த வாசனை வரும். மரப்பாச்சி பொம்மையை வாங்கியதும் அதை நல்ல தண்ணீரில் கழுவி நகத்தால் சுரண்டினால் மாவு போல வந்தால் அது உண்மையானது . . கருப்பு நிற பெயிண்ட் வந்தால் . . சொல்ல தேவையில்லை.
முற்காலத்தில் குழந்தைகளுக்கு விளையாட மரப்பாச்சி பொம்மைகளைதான் கொடுப்பார்கள். தவழும் குழந்தை வாயில் வைத்துக் கொள்ளும். இது குழந்தைக்கு எந்த தீங்கையும் செய்யாது. இதுவும் ஒரு மருந்தே.
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளரும். சளி இருமல் தொந்தரவு குறையும். குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் கெமிகல் போன்ற நச்சு பொருட்களான பொம்மைகளை விடுத்து நம் முன்னோர்கள் வகுத்த பாரம்பரிய முறையை பின்பற்றுவோம்.