தொடர் - நானும்... என் கதையும்... - 03 - எனக்கு பிடித்த டாப் 10 பெண் கதாபாத்திரங்கள் - பிந்து வினோத்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!
இன்று ஒரு நாள் ஜோடி என்று இல்லாமல், என் கதைகளில் என்னை கவர்ந்த 10 பெண்களை பற்றி பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
1. புயலுக்கு பின் - சாந்தி
என் பார்வைக்கு ரொம்ப ஸ்ட்ராங்கானவங்களாக தெரியும் ஒரு பெண் இவங்க.
‘ஃபெமினிஸ்ட்’ என்றாலே காதல், குடும்பம் என்ற மென்மையான உணர்வு இல்லாதவர்கள் என்று ஒரு பொதுவான கருத்து இருக்கு.
பெண்ணியம் என்பது தனியான ஒரு விஷயம் அல்ல! அது பெண்களுக்குள்ளே இயல்பாக இருக்கும் ஒரு உணர்வுன்னு எனக்கு நானே தெரிந்துக் கொள்ள உதவிய ஒரு பாத்திரம் இந்த சாந்தி கதாபாத்திரம்.
தன் கணவன் மேல அதிக அன்பு உண்டு, குடும்பம் மீது அக்கறை உண்டு, ஆனால் தன் பெண்மையை சீண்டும் போது சீறி எழுந்திருக்கும் விதத்தில் எனக்கு தனித்தன்மையுடன் தெரியுறாங்க.
இவங்க என்னுடைய முதல் கதாநாயகி என்று சொல்லி கொள்வதில் எப்போதுமே எனக்கு மிக பெருமை உண்டு.
2. கம்பன் ஏமாந்தான் – பாரதி
இவங்க கிட்ட எனக்கு பிடித்தது நம்பிக்கை!
அன்பு, பாசம், பரிவு, காதல் எல்லாமே நம்பிக்கை இல்லாத போது கானல் நீராக வீணாகி போகுது.
நம்பிக்கை தான் எல்லா உறவுகளுக்கும் ஆணிவேர். அதை எனக்கு கற்றுக் கொடுத்த ஒரு பாத்திரம் இவங்க.
அடுத்தது, பிரச்சனை என்றால் உட்கார்ந்து அழாமல் அடுத்து என்ன என்று யோசிக்கும் தன்மை.
வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் போகாது. அதற்காக ஃபீல் செய்துட்டே இருந்தால் அதெல்லாம் காணாமல் போகுமா என்ன? மேலே என்ன செய்வது என்று யோசித்து நடப்பது தான் சரி!
இதை எனக்கு பல சமயங்களில் எடுத்து சொன்ன ஒரு பாத்திரம் இவங்க.
3. காதல் நதியென வந்தாய் – ப்ரியா
ஒரு ஆண் தன் உடல் வலிமையை பயன்படுத்தி, ஒரு பெண்ணிடம் ஈனத்தனமாக நடந்துக் கொண்டால், அந்த பெண் மற்றவர்களை போல காதல், கல்யாணம், குடும்பம் என்ற வாழ்க்கையை யோசிக்க கூடாதா, வாழக் கூடாதா?
அவள் அழுதுக் கொண்டோ, இல்லை வாழ்க்கை வீணாகி விட்டது என்று இறுகி போயோ தான் இருக்க வேண்டுமா???
இந்த கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'இல்லை' என்பது தான்!
அதனால் தான் இந்த கதையில் ப்ரியாவிற்கு யாருடைய தூண்டுதலும் இல்லாமல் விக்கிராந்த மீது காதல் வருவதாகவும், அவர்களுடைய திருமண வாழ்க்கை இயல்பாகவே இருப்பதாகவும் எழுதி இருந்தேன்.
என்னை பொறுத்த வரை பல விஷயங்களில் மாற வேண்டியது நம் மனமும், பார்வையும் தான்!
4. காதல் நதியென வந்தாய் – ராஜம்
ஒரு அம்மா நினைத்தால் தன் குழந்தைகளை எவ்வளவு நல்லவர்களாக வளர்க்க முடியும் என்பதை எனக்கு கற்று தந்த ஒரு பாத்திரம் இவங்க.
விக்கிராந்த ப்ரியாவை காதலிக்கிறேன், கல்யாணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லும் இடத்தில், ப்ரியாவிற்காக பேசும் போது என் மனதில் எங்கேயோ போய் விட்டார்கள்!!!!
மிகவும் பிடித்த ஒரு பாத்திரம் இவங்க.
5. வேறென்ன வேண்டும் உலகத்திலே - சாதனா – சஹானா
Jane Austen கதைகளில் அவங்க, அவங்க சகோதரியுடன் வைத்திருந்த அழகான பாசம் & நட்புணர்வு தெரியும் என்று பொதுவாக சொல்வாங்க.
இங்கே வரும் சாதனா – சஹானா எனக்கும் அப்படி தான்!
இரண்டு பேரும் extraordinary பாத்திரங்கள் எல்லாம் இல்லை. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம் & நட்பு, என் மனசில அவங்களுக்கு ஸ்பெஷல் இடம் கொடுத்திருக்கு.
இவர்களின் உரையாடலை படிக்கும் போதெல்லாம் என் சகோதரிகளுடன் செலவிட்ட நாட்கள் நினைவுக்கு வரும்!