அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.சட்டென அந்த இருவரும் ஸ்ரீராமனாகவும்,லெட்சுமணராகவும் மாறினர்.கபீர் உங்கள் இருவரின் பக்தி கண்டு வியந்தோம்.சாதுக்களாக உங்கள் வீட்டுக்கு உணவருந்த வருவதாகச் சொல்லிச் சென்றவர்கள் யாமே.தன் பதிவிரதாத்தனம் பாழானாலும் சரி சாதுக்களுக்கு உணவளிக்கத் தவறேன் என உன் மனைவி எடுத்த முடிவும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட உன் பக்தியும் நீவிர் இருவரும் செய்யத்துணிந்த இச் செயலும் மிக உயர்வானது எனச் சொல்லி நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து மறைந்தனர்.கபீர் மெய் சிலிர்த்துப்போனார்.ராமா..ராமா என்று கதறினார்.மண்ணில் வீழ்ந்து உருண்டார்.புரண்டார்..அழுதார் தொழுதார்..அவர் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.அவரின் வாயிலிருந்து அனேக பஜனைப் பாடல்கள் அருவியென வெளி வந்தது. அப்பாடல்கள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை.அவரின் புகழ் திக்கெட்டும் பரவ ஆரபித்தது.
அதன் பிறகு அதிக அளவு சாதுக்கள் கபீரின் வீடு தேடி வரத் டங்கினர்.பஜனையும்,விருந்துமாய் கபீரின் வீடு தினம்தோறும் அமர்க்களப்பட்டது.இறைவன் தந்த பொன்னும் பொருளும் கரைந்து போனது.
கபீருக்கும் சுந்தராவுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.மூத்தவன் கமால்.கமால் சிறு குழந்தையாய் இருந்தபோதே தன் தந்தையைப் போலவே இறைவன் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தான்.அவன் வளர வளர அவனின் தெய்வ பக்தியும் மேலும் மேலும் வளரலாயிற்று.கபீருக்கும் சுந்தராவுக்கும் கமாலின் நற்பண்புகளும் இறை நம்பிக்கையும் கண்டு தாங்கமுடியாத மகிழ்ச்சி.வாலிபனானான் கமால்.பஜனைப் பாடல்களைப் பாடியவண்ணம் ஊர் ஊராகச் சென்றான்.கபீரைப்போலவே அவர் மகன் கமாலின் புகழும் ஓங்க ஆரம்பித்தது.எண்ணற்ற பாடல்கள் கபீரால் இயற்றப்பட்டன.இன்னிலையில் மீண்டும் இறைவன் கபீரை சோதிக்க எண்ணினார் போலும்.
ஒரு நாள் இரவு ஆரம்பிக்கும் நேரம்.பெருங்கூட்டமொன்று கபீரின் வீட்டுக் கதவைத் தட்டியது.கதவைத் திறந்த கபீர் அனைவரையும் இன் முகத்தோடு வரவேற்றார்.கூட்டமாய் வந்த அனைவரும் தங்களுக்கு மிகுந்த பசியாய் இருப்பதாகவும் கபீரின் வீட்டில் உணவு கிடைக்குமென்று வந்ததாகவும் சொல்ல பயந்து போனார்கள் கபீரும் அவர் மனைவியும்.காரணம் இறைவன் கொடுத்துச் சென்ற பொன்னும் பொருளும் ஏற்கெனவே தீர்ந்துபோயிருந்தது.வீட்டில் பழையபடி வறுமையே நீடித்திருக்க வந்தவர்களுக்கு அதுவும் பெருங்கூட்டமாய் வந்திருப்பவர்களுக்கு எவ்வாறு உணவளிப்பது?தவித்துப்போனார்கள் இருவரும்.
அப்போது கபீருக்கு ஒரு யோசனை தோன்றியது.மகன் கமாலிடம் அவ்யோசனையைக் கூற கமாலும் சம்மதித்தான்.பக்கத்திலிருக்கும் ஒரு மளிகைகடையில் மளிகைப் பொருட்களைத் திருடி வருவது என்று முடிவு செய்தனர்.உணவு கேட்டு வருபவர்களுக்கு உணவளிக்காமல் இருந்து அதனால் ஏற்படும் பாபத்தைவிட திருடுவதால் கிடைக்கும் பாபத்தைச் சுமப்பதே மேல் என எண்ணினர்.அதன்படி கபீரும் கமாலும் அருகில் இருந்த மளிகைக்கடை ஒன்றிற்குச் சென்றனர்.கடையின் பின்புறச் சுவற்றில் துளையிட்டு அதன் வழியே உள்ளே புகுந்தனர்.சமைக்கத் தேவையான மளிகைப் பொருட்களை மூட்டைகளில் கட்டிக்கொண்டனர்.முதலில் கபீர் துளையின் வழியே வெளியே வந்தார்.ஒவ்வொரு மூட்டையாய் கமால் எடுத்துக்கொடுக்க வெளியே இருந்த கபீர் அவற்றை வாங்கிக்கொண்டார்.
கடைசியாய் கமால் துளையின் வழியே வெளியே வரவேண்டும்.கமால் துளைக்குள் நுழைந்தார்.அவரின் இடுப்பு வரையிலான பாதி உடல் வெளியே வந்துவிட்டது.அப்போது கடைக்கு முன்புறம் காவலுக்குப் படுத்திருந்த கடையின் உரிமையாளருக்கு கடையின் உள்ளே ஏதோ சப்தம் கேட்பதாய்த் தோன்றவே உள்ளே வந்தார்.
வந்தவர் ஒருவன் துளையின் வழியே வெளியேறுவதைக்கண்டு இவன் திருடன் பொருட்களைத் திருடிச் செல்கிறான் என்ற பதைபதைப்புடன் கமாலின் கால்களைப்பிடித்து உட்பக்கமாக இழுத்தார்.அது கமால் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.போராடிப்பார்த்தான் கமால்.முடியவில்லை.
தந்தையே யாரோ என் கால்களை உட்பக்கமாக பிடித்து இழுக்கிறார்கள்.இன்னும் சற்று நேரத்தில் நான் பிடிபட்டு விடுவேன்.அப்படி பிடிபட்டால் நான் யாரென்பது தெரிந்து விடும்.பின்னர் வந்தவர்களுக்கு உணவளிப்பது இயலாது போய்விடும்.எனவே தந்தையே..என் வேண்டுகோளை நிறைவேற்றுவீர்...என்றான்.
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கபீர் மகன் என்ன வேண்டுகோள் வைக்கப்போகிறான் என அறியாமல் சொல் மகனே கமால் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க..மகன் கமால் சொன்ன அந்த வேண்டுகோளைக் கேட்டு அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.
தந்தையே கொஞ்சமும் யோசிக்காதீர்கள்.யோசிக்கும் நேரமல்ல இது.நாம் இருவரும் பிடிபட்டுவிட்டால் பக்தர்களுக்கு உணவளிப்பது பாழ்பட்டுப்போகும்.எனவே தந்தையே என் வேண்டுகோளை ஏற்று நான் சொன்னபடி செய்வீராக என்றான்.