17. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
என்னை என்னடா செய்தாய்!!!…
கேட்கும் கேள்விகள் யாவும் எளிதாக இருப்பினும்
கிடைக்கும் பதில் மட்டும் ஏனோ
விடை தெரியா மர்மமாகவே இருக்கிறது…
எதற்காக இப்படி?... ஏனிந்த நிலைமை?...
அறிந்து கொள்ள எவ்வளவோ பாடுபட்டும்
என் முயற்சிக்கு யாதொரு பலனும் கிட்டிடவில்லை இன்றுவரை…
என்னதான் நான் முட்டி மோதி புரண்டாலும்
கடைசியில் வந்து நிற்பதென்னவோ உன்னில் தான்…
ஆம்… நான் அழைக்காமலே வந்து ஒட்டிக்கொள்வாய் என்னில்…
நான் நினைக்காமலே வந்து கட்டிக்கொள்வாய் என் நினைவையும்…
மனதையும் என்னையும் பாடாய் படுத்திவிட்டு
யாதும் அறியா குழந்தை போல் நிற்பாய் நீயும் பாவமாய்…
பாவி… என்று திட்டக்கூட முடியாது… ஐயோ… ஹ்ம்ம்…
என்னடா இது என் செல்லக்கண்ணா… என்று கொஞ்சிட தூண்டிடும்
உன் விளையாட்டுக்களை என்னவென்று நான் கூறுவேன்?...
வரையறைக்குட்பட்டதா உன் செய்கைகள்?...
எல்லைகளை கடந்து, நியதிகளை தாண்டி
உனக்கே உனக்கான காதல் உலகத்தில்
என்னையும் சஞ்சரிக்க வைத்து ரசிப்பதில்
உனக்கு நிகர் யாருமே இல்லையடா கண்ணா….
தவிப்பும் துடிப்பும் ஒரு சேர பொங்கி வரும் உணர்வை
அப்படியே உனக்குள் ஊற்றிட விழையும்
எனக்கும் அணைகள் போட்டிடுவாய் நீ
ஒற்றை புருவம் உயர்த்தி, முத்துப்பற்கள் தெரிய சிரித்து...
பிறகெங்கே நான் நானாய் இருந்திட முடியும்?...
அப்படியே உன் கருவிழியில் சிக்கி, மென் நகையில் வீழ்ந்து
சிலையென நானும் ஆகிப்போக
உன் சிரிப்பொலி மட்டும் ரீங்காரமிடும் என் காதோரம்
இசையாக இடைவெளியே இல்லாமல்…
வரும் போலி கோபத்தையும் அடக்கிக்கொண்டு
போடா… என்று விலகி செல்லவும் முடியாமல்
நான் பரிதவிக்கும்போது மெல்ல கண் சிமிட்டிடுவாய்…
இனம் புரியா இன்பமது நெஞ்சில் பரவிய வேளையே
இனம் புரியா துன்பமும் என்னை ஆட்கொள்ள பார்க்கும்…
சொர்க்கமும் என் கை சேர்ந்திடும் என்னருகில் நீ இருக்கும்போது…
நரகமும் என் வசமாகிடும் என் பார்வையிலிருந்து நீ மறையும்போது…
விலகிச்சென்று துன்பமும் தருகிறாய்…
நெருங்கி வராமல் இன்பமும் தருகிறாய்…
எனில் இதில் யாரடா நீ?...
என் இன்பமா?... துன்பமா?... சொர்க்கமா?.. நரகமா?...
ஹ்ம்ம்…
யாவுமே நீயாகி இருக்கையில் இந்த நான்கினை மட்டும்
விளக்கிடுவாயா என்ன?... போடா…
கோபம் வருவதற்கு பதில் கொஞ்சத்தான் தோன்றுகிறது…
ஐயோ… என்னை என்னடா செய்தாய்?.... என் ராஜா!!!...
பூ மலரும்……….
{kunena_discuss:779}