கவிதை - நிஜத்தின் நினைவுகள் - சிந்தியா ரித்தீஷ்
நிறைவேறாக் கனவினை
நனவாக்கும் வெறியில்
தொலைதூரப் பயணம்
அன்பான உறவுகளின்
இனிமையைத் தொலைத்து...
என்றேனும் ஓர் நாள்
ஒன்றாவோம் என்று
எண்ணிக் கழியும் பொழுதுகள்....
கண்ணோரம் கரிக்கும்
கண்ணீர்த் துளிகள்
உதட்டோரம் அவற்றின்
சுவை தெரிவிக்கும்....
வீட்டிற்கு தெரிந்தால்
தாய் யோசிப்பாளோ என்றும்
நண்பரிடம் பகிர்ந்தால்
அவர் மனச்சுமை கூடுமோ என்றும்
அனைத்தும் மறைத்து
சிரிக்கும் என் அதரங்கள்....
எனக்கும் என் தலையணைக்கும்
மட்டுமே தெரியும்
தூங்கா இரவுகளில் என்
விழியோரம் வழியும்
துளிகளின் வன்மை...
ஆரும் இல்லா புது தேசம்
கண்கட்டி காட்டில் விட்டது போல்
கைநீட்டிப் பார்த்தும்
உணரவில்லை இங்கு
ஒரு உறவுதனின் நேசம்...
வாழ்க்கை வெறுமையாய்
உணரப்படுகிறது இன்று
என்னால்...
அனைத்தும் என்னிடம்
இருந்தும்...
அன்பாக அதட்ட அருகில்லாத தந்தை
ஆதரவாய் அணைக்க
அன்னையின் வரிவடிவம்
அடித்துப் பிடிக்க
இல்லாத சகோதரங்கள்...
காலங்கள் கடத்தும்
முட்களின் வேகமும்
முடங்கியதோ என்
மணியின் கூட்டில்....
ஆனாலும் உலகம் உருள்கிறது
உணர்கின்றேன் நானும் அதை
நிச்சயமாய் அது நடக்கும்
தருணத்தின் வழி பார்த்துக்
காத்திருக்கும்...........
நானும் ஓர் பேதை...
{kunena_discuss:779}