கவிதை - வலி - ரம்யா
தாலேலோ தங்கமே தாலேலோ
தாயாய் எனை மாற்றிய வரமே தாலேலோ
ஐயிரு திங்கள் உனை மடி சுமந்து
ஐவரில் அர்ச்சுனனாய் உனை வளர்த்து
சீராட்டி பாலூட்டி பாராட்டி உச்சிகுளிர்ந்து
என் வாழ்வின்விளிம்பு வரை சுமக்க நினைத்தேன்
இப்படி ஐந்து மாதத்தில் கருவிலிருந்து உன்னை அள்ளி
காலனுக்கு காவு கொடுக்க கனவிலும் நினைக்கவில்லை
என் சிறுபையில் முத்தாய் நீ விழ
நான் கொண்ட தவங்கள் ஆயிரம்
நீ உருவான சுவடாக என் தேகம் என்னை நோகடிக்க
பல் கடித்து பொருத்துக் கொண்டேன்
என் பவளமே உனை ஏந்த
முதன்முறையாய் உன் இதயம் துடித்த போது
உணர்ச்சியின் உச்சம் தொட்டேன்
ஒவ்வொரு நாளும் நீ வளர
என் தாய்மை வளர்வதாய் மகிழ்ந்திருந்தேன்
இன்று இப்படி இடி வந்து இறங்கியது என் கனவில்
என் செல்வமே
இரவு பகல் காத்திருந்தேன்
இதயம் துடிக்க ஏன் மறந்தாய்
உறக்கத்தில் உன் அசைவில் மகிழ்ந்து கிடந்தேன்
ஏன் என் உயிர் உருவி உறங்கும் உயிரானாய்
என் விடிவெள்ளி நீ என விழித்து களித்திருந்தேன்
இன்று ஏன் என் வலியாய் வழிந்து வடிந்தது போனாய்
அலருது என் நெஞ்சம் என் பிஞ்சு பூவே
பதறுது என் ஆயுள் என் உயிரே நீ எங்கே