கவிதை - பட்டாம்பூச்சி - ரம்யா
பட்டாம்பூச்சி ஒன்று சிக்கியது என் அறையில்
பாதை தெரியாமல் வெளியேற முடியாமல்
முட்டி மோதி அமர்ந்தது ஒரு சுவற்றில்
அதன் அழகிய வண்ணங்கள் லயித்த என்னை
சுடராய் சுட்டது அதன் இறக்கையின் படபடப்பு
மூடிய ஜன்னலையும் திறக்காத கதவையும்
மோதி மோதி ஓய்ந்தது அந்த சிறிய ஜீவன்
மூடிய ஜன்னலை சிறிதாய் திறந்து வைத்தேன்
தாழிட்ட கதவையும் தாராளமாய் திறந்து வைத்தேன்
அப்புறமும் ஏனோ அசையாமல் அமர்ந்து கொண்டது அச்சுவரில்
அந்த அறைவிலகா காரணம் தான் புரியவில்லை என் வரையில்
கையால் அதை பிடித்து வெளியேற்ற எத்தனித்தேன்
உயிர் நோகும் என்றெண்ணி பின்னுக்கு சென் றுவிட்டேன்
எப்படியும் தன் பாதை தெரிந்து கொள்ளும் நம்பினேன்
ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் வழிகள் சில திறந்து வைத்தேன்
இயல்பாய் அமைதியாய் என் பணிகள் நான் முடித்தேன்
பட்டாம்பூச்சி அதை சிறிதுசிறிதாய் மறந்துவிட்டேன்
என் பயணம் நான் போக வீடு அதை பூட்டினேன்
வெளியேறும் வழி அனைத்தும் இறுக்கமாய் மூடினேன்
பயணம் ஏனோ பாரமாய் இருந்தது
என் கனவில் கூட அந்த பூச்சி நுழைந்தது
வீடு திரும்பிய முதல் கணம்
என் நெஞ்சம் தேடியது அந்த சிறு இனம்
அறையிலும்சுவற்றிலும் அதன் சுவடுகள் இல்லை
வெளியேறியிருக்கும் என்ற நம்பிக்கை குறையவில்லை
நிம்மதியாய் மூச்சுவிடும் நேரம்
ஓரத்தில் தெரிந்ததது பூச்சியின் தேகம்
எறும்புகள் நடத்தும் இறுதி ஊர்வலத்தில்
மௌனமாய் நின்றேன் கண்ணீர் சிந்தி
பட்டாம்பூச்சியின் இறக்கை அதில் பலபல நிறங்கள்
எனக்கு தெரிந்தது பல நங்கையின் முகங்கள்
பட்டாம்பைச்சியாய் சிறகுகள் இருந்தும்
பாதை அறியாமல் பயணம் புரியாமல்
அடங்கிப்போகும் அதிசய வாழ்வுகள்