கிணற்றில் ஜலம் இழுக்கும்போது பாடுவேன்; மாடு கறக்கும் போதும், தயிர் கடையும்போதும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டு ரசிப்பவர்கள் மேற்கூறியவர்கள்தாம், அத்தான்! நான் பாடுவதைக் கேட்டுப் பசு மெய்ம்மறந்து கன்றை நக்குவதற்குப் பதிலாக என் முகத்தையே பார்த்துக் கொண்டு
நிற்கும். ”
கிண்கிணியின் நாதம்போல் படபட வென்று தங்கம் பேசிக் கொண்டு போனாள்.
"சரி, அப்படியானால் ஸரஸ்வதியிடம் நாளைக்குள் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு ஏதாவது பாட்டு கற்றுக்கொள்'. நாளைக்கு நீதான் பாடவேண்டும்" என்றான் ரகுபதி திடீரென்று.
"ஆ...." என்று வாயை ஆச்சரியத்துடன் திறந்தாள் தங்கம்.
'ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்கு எதிரில் தான் பாடுவதா? ஐயோ! தொண்டை எழும்பவே எழும்பாதே. எனக்கு. பாடத் தெரியும் என்று இவரிடம் சொன்னதே ஆபத்தாக முடிந்துவிட்டதே' என்று பயந்து கொண்டே தயங்கினாள் தங்கம். ஆகவே, சிறிது அச்சத்துடன் ரகுபதியைப் பார்த்து, “முதலிலேயே பெரிய பரீக்ஷை வைத்துவிட்டீர்களே! யாரும் இல்லாத இடத்தில் என்னவோ வாய்க்கு வந்ததைப் பாடுவேன் என்று சொன்னால், விழாவுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடு என்கிறீர்களே அத்தான். நன்றாக இருக்கிறதே!" என்று கன்னத்தில் வலது கையை ஊன்றிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறினாள்.
"மனம் போனபடி பாடுபவர்களுக்குத்தான் தைரியம் உண்டு. விழா மண்டபத்தைக் கிராமத்தின் மாட்டுத் தொழுவமாக நினைத்துக்கொண்டுவிட்டால் ஆயிற்று. எல்லாவற்றிற்கும் மனம் தானே காரணம், தங்கம்? அரண்மனையையும், குடிசையையும் சமமாகப் பாவிக்கும் மகான்கள் பிறந்த சத்தில் கொஞ்ச மாவது நாம் சமதிருஷ்டியோடு இருக்கவேண்டாமா? ஏதோ ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம். பிறகு சொல்கிறேன், உனக்குப் பாட வருமா, வரதா என்று?” என்றான் ரகுபதி. சிறுது பொழுது தங்கம் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில், 'நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்' என்கிற பாட்டை பல பிழைகளுடன் பாட ஆரம்பித்தாள். பிழைகள் மலிந்திருந்தபோதிலும், அவள் பாட்டில் உருக்கம் இருந்தது. அவள் மனத்தில் கண்ணனின் உருவம் நிறைந்திருப்பதும் அவள் அதை அனுபவித்துப் பாடுகிறாள் என்பதும் புரிந்தது. அவளுடைய அகன்ற விழிகளிலிருந்து தானர தாரையாகக் கண்ணீர் பெருகியது. உடனே உதடுகள் படபடவென்று துடித்தன. மெல்ல மெல்ல பாட்டின் ஒலி அடங்கிவிட்டது. விம்மலின் ஒலிதான் அதிகமாயிற்று. தங்கம் இரண்டு கைகளாலும் கண்களைப் பொத்திக்கொண்டு தேம்பினாள்.
ரகுபதி திடுக்கிட்டான். சற்றுமுன் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று என்ன வந்துவிட்டது என்று நினைத்து வாஞ்சையுடன் அவள் தலையை வருடி,