Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 21 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 21. குமுறும் ஹிருதயம்
தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித்திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த வீட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்னோடு ஒட்டிக் கொண்டு, தான் கோபம் அடைந்தாலும் பாராட்டாத சீதா இப்பொழுது வேற்று மனுஷியாகக் காட்சி அளித்தாள். அவளுக்கு மட்டற்ற வேலைகள் கிடந்தன. ஹிந்தி வகுப்புக்குப் போக வேண்டும். பிறகு சங்கீதம் பயிலவேண்டும்; கலாசாலைக்குப் போக வேண்டும்; வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது செய்து முடித்தாக வேண்டும். சகோதரியிடம் மனம்விட்டுப் பேச என்ன இருக்கிறது? சாவித்திரியைவிட நான்கைந்து வயது சிறியவளான சீதா ஏன் அப்படி ஒதுங்கிச் செல்கிறாள்? சந்துரு, சாவித்திரியுடன் அதிகம் பேசுவதேயில்லை. ஆதியிலிருந்தே இருவருக்கும் ஒத்துக்கொள்கிறதில்லை. இருவரும் எதையாவது குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்களானால் மணிக்கணக்கில் ஓயமாட்டார்கள்.
இதனிடையில் பாட்டி, தினம் தினம் ஏதாவது ஒரு புதுச் செய்தியைக் கொணர்ந்து தெரிவிப்பாள்.
"ஏண்டி! என்னவோ விழா நடத்தினானாமே உன் ஆம்படையான்? அமர்க்களப் பட்டதாம். அவள் இருக்கிறாளே ஒருத்தி, ஸரஸ்வதியோ, லக்ஷ்மியோ? பாட்டுக் கச்சேரி செய்தாளாம்! திறந்த வாய் மூடாமல் உன் கணவன் அவள் எதிரில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தானாம். போதாக்குறைக்கு ஊரிலே யிருந்து ஒரு பெண் வந்திருந்ததாம். நேற்று அங்கிருந்து வந்த கோபு வீட்டு ராமு என்னிடம் சொன்னான். உன் அம்மா காதில் விழுந்தால் சண்டைக்கு வருவாள். என்னாலேயே நீ கெட்டுப் போய் விட்டாயாம். அவள் தான் அதை வாய்க்கு வாய் சொல்லுகிறாளே” என்று பாட்டி யாரும் அருகில் இராத சமயம் பார்த்துச் சாவித்திரியிடம் தெரிவித்தாள்.
அன்று காலைப் பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியும் அதுவேதான். விழாவில் ஸரஸ்வதி கச்சேரி செய்யும் புகைப் படம், பிரமாதமாக வெளியாகி இருந்தது. ஒலிபெருக்கியின் முன்பு புதுப் பெண் ஒருத்தி நின்று தன் பவளவாய் திறந்து பாடிக்கொண்டிருந்தாள். ரகுபதி தலைவரைக் கைகூப்பி வணங்கி அழைத்துவரும் காட்சி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. சாவித்திரி, படங்களையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் பாட்டி வந்து மேற்கூறிய விதம் தெரிவித்தாள். பத்திரிகையில், நடந்தது நடந்தபடி வெளியாகி இருந்தது. அத்துடன் கூட்டியோ குறைத்தோ செய்திகளை வெளியிடும் சாமர்த்தியம் அதைக் கவனித்த நிருபருக்கு இல்லை! ஆனால்,