வளையல்கள். தேர்ந்த ஓவியனின் சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த பாவையாகத் தோன்றினாள் அவள். 'அதிக அழகு அதிருஷ்டத்தைக் குறைத்துவிடும்' என்று யாரோ சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்தான் ரகுபதி. 'அதான் இந்தப் பெண் இப்படி ஏழ்மையில் வாடிப்போகிறாளோ' என்றும் எண்ண மிட்டான்!
"ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்" என்று ஸ்வர்ணம் கூறியதும் ஸரஸ்வதி, "என்ன அத்தான்! நீ 'ரெடி' தானே?" என்று கேட்டாள்.
இதுவரையில் தங்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி திடுக்கிட்டுத் திரும்பி, "ஓ!" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
"போகிறபோது நடந்து போய் விடலாம். வரும்போது இருட்டிவிடும். பஸ் பிடித்துதான் ஆகவேண்டும். என்ன சொல்கிறாய் தங்கம்?" என்று கேட்டான் ரகுபதி.
"ஐய்ய! உன் யோசனை பலமாக இருக்கிறதே! வியர்க்க விறுவிறுக்க வேர்வை சொட்டி வழிய வெயிலில் நடந்து போய்த் தான் சங்கீதத்தை அனுபவிப்பார்களோ? வருகிறபோது நடந்து வரலாம் அத்தான். 'ஜிலு ஜிலு' வென்று குளுமையாக இருக்கும், சிரமமும் தெரியாது" என்று அவன் கூறியதை ஆட்சேபித்தாள் ஸரஸ்வதி.
"உன் யோசனை அதைவிட அருமையாக இருக்கிறது. இரவு வேளையில் தனியாகச் சிறிசுகளை அழைத்துக்கொண்டு நடந்து வருகிறதாவது? அதுவும் உன் கால் இருக்கிற வலுவுக்கு நீ நடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயே, ஸரஸு?" என்று ஸ்வர்ணம் கோபித்துக்கொண்டாள். ஆகவே, மூவரும் பஸ்ஸில் போய் வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டார்கள்.
அன்று கச்சேரிக்குச் சென்றிருந்த மூவரின் உள்ளங்களும் வெவ்வேறு கற்பனையில் மூழ்கி இருந்தன. ரகுபதியின் மனம் ஓர் இடத்திலும் நிலைக்காது அலை பாய்ந்து கொண்டிருந்தது.'அங்கு வந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். அவன் மட்டும் எத்தனை காலம் தனிமையை அனுபவிப்பது? இந்தக் கேள்வி அவன் மண்டையைக் குடைந்து எடுத்து அவன் தலையை வலிக்கச் செய்தது. சங்கீதம், நாத ரூபமாக இறைவனை வழிபடும் சாதனம் என்பதை அவன் அந்த நிமிஷம் மறந்து விட்டான். பாடகி பாடும் ஒவ்வொரு பாட்டும் அவனுக்குப் போதையை உண்டு பண்ணியது. 'ஆறுமோ ஆவல், ஆறுமுகனை நேரில் காணாது' என்று பாடகி பாடும்போது அவன் மது அருந்தியவனின் நிலையை அடைந்துவிட்டான். மேடையில் அமர்ந்து பாடும் பாடகி தங்கமாக மாறினாள். கச்சேரிக் கூடம் அவன் வீடாக மாறியது. அந்த வீட்டில் தங்கம் ஒருத்தி உட் கார்ந்து பாடுவதாகவும், அதை அவன் மட்டும் ரஸிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டான் ரகுபதி!
தங்கம் சிறிது நேரம் பாட்டை ரஸித்தாள். பிறகு அங்கே கூடியிருக்கும் பெண்மணிகளின் நடை,