"இது என்னுடைய ஆசை மட்டுந்தான். ஸரஸ்வதியின் மனசைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது."
"ஏதேது அண்ணா. அஸ்திவாரம் பலமாகப் போட்டு விட்டாயே!" என்று சீதா மறுபடியும் சிரித்தாள்.
"அஸ்திவாரம் போட்டுவிட்டால் கட்டிடம் எழும்பின மாதிரியா சீதா? ஸரஸ்வதியின் மனதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எவ்வளவு சரளமான சுபாவமுடையவளாக இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவள் மனம் ஆழமானது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை லேசில் வெளியிடவே மாட்டாள்!"
"உனக்குச் சம்மதமிருந்து. அவளுக்கும் இஷ்டமிருந்தால் நடக்கட்டுமே. இந்தப் புது சம்பந்தத்தால் நம்முடைய பழைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்" என்றாள் மங்களம்.
கொல்லைப் பக்கத்திலிருந்து வேகமாக வந்த சாவித்திரி கடைசியாகத் தாயார் கூறியதைக் கேட்டாள். 'நம்முடைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்' என்று கூறியது அவள் செவிகளில் மணி ஓசைபோல் கேட்டுக்கொண்டே இருந்தது.
'நம்முடைய குற்றம்! நம்முடைய குற்றம்!' என்று அவள் மனம் உருப் போட்டது. ”நம்முடையது' அல்ல. சாவித்திரியின் குற்றம். என்னுடைய குற்றம்” என்று சொல்லிக் கொண்டாள் சாவித்திரி, தன் மனத்துக்குள்.
அவரவர்களுடைய குற்றத்தை உணர்வதே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த குணம். அதை உணர்ந்து மனம் வருந்தினாலே போதும். 'குற்றங்களையெல்லாம் குணமாகக் கொள்ளும் குணக் குன்றாகிய இறைவன்' நம்மை மன்னித்து நாம் வாழ வழி செய்வான்.
---------
தொடரும்