(Reading time: 5 - 9 minutes)
Irulum oliyum
Irulum oliyum

கோவிலைவிட்டுக் கீழிறங்கி ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைவதற்குள் ஸரஸ்வதியின் மனம் தூய்மை பெற்றுவிட்டது எனலாம். சில நாட்களாகவே அவள் உள்ளம் சந்துருவை அடிக்கடி நினைக்க ஆரம்பித்திருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், இடையில் தன் உறுதி தளர்ந்து போவதை அவள் விரும்பவில்லை. சந்துருவைத் தான் மணந்து தான் ஆக வேண்டும் என்கிற அவசியமும் ஒன்றும் இல்லை. அந்த உறுதி வலுப்பெற ஸ்ரீ சாமுண்டீச்வரி அவளுக்கு அருள் புரிந்தாள். சமீபத்தில் விவாக பந்தத்தில் சிக்கவேண்டாம் என்றும் தீர்மானித்துக் கொண்டாள் ஸரஸ்வதி.

அதற்கு அநுசரணையாகக் கோபாலதாஸர் வழி நெடுக ஸரஸ்வதியைப் பார்த்து, ”திருச்செந்தூர் பார்த்திருக்கிறாயா? பழனிக்குப் போய் இருக்கிறாயா? மதுரையில் மீனாக்ஷியை வணங்கி இருக்கிறாயா? கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தால் புனித மாக்கப்பட்ட பிருந்தாவனம், வட மதுரைக்குப் போய்ப் பாரம்மா. கோகுலத்தில் அவன் திவ்யரூபத்தை நீ வணங்க வேண்டும். பக்தை மீராவின் பாடல்களைக் கேட்க வேண்டும். ’தாஸ மீராலால கிரிதர'னின் புகழைக் கேட்க வேண்டும். உலகம் உன்னுடைய அத்தையையும், அத்தானையும், சாவித் திரியையும் மட்டும் கொண்டதல்ல. உலகம் பரந்தது. அதில் எல்லோரும் உன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற மனப் பான்மையை நீ வளர்க்க வேண்டும். எப்பொழுதாவது இல்லறத்தில் நீ ஈடுபட்டாலும் ஆண்டவனிடம் பக்தி செலுத்து வதை மட்டும் மறக்காதே. இறைவனின் திவ்ய ரூபத்தை உன் மனசில் பிரதிஷ்டை செய்து கொள் அம்மா. உனக்கு ஒரு குறைவும் வராது!" என்று பல விஷயங்களைக் கூறி ஆசீர்வதித்தார்.

ரெயில் நிலையத்துக்கு வழி அனுப்ப வந்திருந்தார் கோபால தாஸர். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே ஸரஸ்வதி அவரை வணங்கினாள். "மாமா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிய வைத்தீர்கள். என் அத்தானையும், சாவித்திரியையும் ஒன்று சேர்த்த பிறகு அத்தையுடன் நான் வட நாட்டுக்குப் புறப்படுகிறேன். ஒன்று சேர்ந்த தம்பதிகளிடமிருந்து சில நாட்கள் நாங்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும். கட்டாயம் பக்தை மீரா வசித்த புனித ஸ்தலத்துக்குப் போகிறேன். அவள் அழகிய பாடல்களைக் கற்றுக்கொள்கிறேன். துளசிதாஸரின் அருமையான ராமாயணக் கவிதைகளைப் படிக்கிறேன், வங்கத்துக்குச் சென்று மகாகவி தாகூரின் உபதேசங்களைக் கேட்கிறேன். ராஜகட்டத்துக்குப் போய் அண்ணல் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள்!" என்று அவரை வேண்டிக்கொண்டாள்.

------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.