திருவாளர் சேதுபதி அவர்கள் வந்ததும் புன்சிரிப்போடு என்னைப் பார்த்துக் கைகூப்புவார். நானும் கார் அருகில் சென்று அவரை வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வேன். மேடையில் போய் அமர்ந்ததும் ஜட்ஜுக்கும் அவருக்கும் ராஜாவைக் கொண்டு மாலை சூட்டுவேன். சமயத்தில் மாலையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. விழா முடிந்ததும் அவர்களிருவடைய மாலைகளையும் ஞாபகமாகக் கொண்டுபோய்க் காரில் வைக்கவேண்டும். இந்த ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்துவிட்டு அவர் ’அரேஞ்ச் மென்ட் ரொம்ப கிராண்ட்' என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
பார்வதியின் சிந்தனையை டெலிபோன் மணி கலைத்த போது யாராயிருக்கும்? ஒருவேளை....' என்று யோசித்தவளாய் ரிஸீவரைக் கையில் எடுத்தாள்.
'நாளை இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் விமானத்தில் அவசரமாகப் பம்பாய் செல்ல வேண்டியிருப்பதால், நாளை விழாவின் இடையிலேயே தங்களிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கலை நிகழ்ச்சியில் கடைசி வரை உட்கார்ந்திருக்க முடியாமலிருப்பதற்காக மன்னிக்க வேண்டும். இப்படிப் பேசியது திருவாளர் சேதுபதி அல்ல; அவருடைய அந்தரங்கக் காரியதரிசி.
பார்வதிக்கு இந்தச் செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவள் என்னென்னவோ கோட்டைகள் கட்டி வைத்திருந்தாள். விழா முடிந்த பிறகு அவரை ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரமாவது அவருடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் குறைந்த அவகாசத்தில் எதைப்பற்றியெல்லாம் பேசுவது என்பது பற்றி முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தானே அதிகமாகப் பேசி விடாமல் அவரைப் பேசத் தூண்டி, அவர் பேசுவதைக் கேட்கவேண்டும்.
முதலாவது, அவருக்கு எந்த சப்ஜெக்டில் நாட்டமிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். பிறகு அந்த சப்ஜெக்டிலேயே பேச்சைத் தொடரவேண்டும். அவரைத் திருப்திப் படுத்துவதற்காக, அதில் நமக்குள்ள எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமாம்' போட்டுவிடக் கூடாது. அரசியலாயிருந்தால் 'பிளாட்டோ' விலிருந்து சில 'கொடேஷன்களையும், பிலாஸபி' யாயிருந்தால் விவேகானந்தரின் சிகாகோ ஸ்பீச்சிலிருந்து சில பகுதிகளையும் எடுத்துச் சொல்லவேண்டும்.
டெலிபோனில் வந்த செய்தி இவ்வளவையும் தகர்த்து விட்டது.
கண்களை மூடிய வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்த பார்வதியை ”அத்தை! அத்தை!'' என்று அழைத்துக் கொண்டு வந்த ராஜாவின் குரல் விழிப்படையச் செய்தது.
”என்ன ராஜா! தோரணங்களைக் கட்டி முடித்து விட்டாயா?”