Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 03 - சாவி
மாடிப் படிகளின் மீது வேகமாக வந்து விழும் காலைப் பத்திரிகையின் சலசலப்பு, பக்கத்து வீட்டுப் பசுமாட்டின் கனிந்த குரல், பால் டிப்போ சைக்கிள் மணி ஓசை, பார்வதி வீட்டுக் கடிகாரம் மணி ஆறடிக்கும் சுநாதம் - இவை யாவும் ஒரே சமயத்தில், சற்று முன்பின்னாக நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள்.
அந்தப் பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தின் ஒலி பார்வதிக்குப் புதிதல்ல. ஆனால் இன்று மட்டும் அதன் ஒலி அவள் செவிகளுக்கு இனிமையாகவும், இதயத்துக்கு இதமாகவும் இருப்பானேன்?
அந்தக் கடிகாரத்தைக் காணும் போதெல்லாம் பார்வதிக்குத் தன் கல்லூரியில் நீண்ட காலமாகப் பிரெஞ்சு மொழி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் மிஸஸ் அகாதாவின் உருவம் நினைவில் தோன்றும். உடனே, அவள் குடையைப் பிரித்துக் கொண்டு இடது காலை விந்தி விந்தி நடக்கும் காட்சிதான் கண்ணெதிரில் நிற்கும்.
இந்தக் கடிகாரத்தைப் போலவே தன் கடமையைத் தவறாமல் செய்து வரும் அகாதாவினிடத்தில் பார்வதிக்குத் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு.
பார்வதி ஏதோ ஓர் உணர்ச்சிக்கு வசமாகி, அமைதி இழந்த நிலையில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்.
.... முதல் நாள் இரவு விமானக் கூடத்துக்கு விரைந்து சென்று மூக்குக் கண்ணாடியைச் சேதுபதியிடம் கொடுத்த போது ’அடாடா, மிக்க நன்றி' என்று மலர்ந்த முகத்துடன் அவர் வாங்கிக் கொண்டதும், ’தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது' என்று அவள் கூறியதும், அவர் தங்கள் ஏற்பாடு மிக மிகச் சிறப்பாயிருந்தது' என்று அவளைப் புகழ்ந்ததும்... பார்வதியின் உள்ளத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி இருந்தது.
உள்ளத்தில் புகுந்துவிட்ட அந்தப் புதுமையான உணர்வை, நெஞ்சத்தை அலைக்கும் சஞ்சலத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிட முயன்றாள். ஆனால் முடியவில்லை, சோடா புட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு - அவளை யறியாமல் அவள் இதயத்தில் புகுந்து அழைத்துக் கொண்டிருந்தது. அதை அவஅ விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பி விடவோ முடியாமல் தவித்தாள்.
கண்ணாடியின் முன் சென்று அதில் பிரதிபலித்த தன் உருவத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் பிம்பத்தை அதில் கண்டபோது பார்வதியின் வேதனை அதிகரித்தது, உண்மையாகவே தனக்கு வயதாகி விட்டதா? அதோ இடது காதின் ஓரமாக இரண்டொரு நரைகூடத் தெரிகின்றனவே! மெதுவாகத் தன் இடது காதுப் பக்கமாகத் தடவிப் பார்த்துக்கொண்டாள். 'ஓ! கண்ணாடியில் இடது புறம் என்றால், தனக்கு அது வலது புறம் அல்லவா?’ - மெத்தப் படித்த பார்வதிக்கு, டாக்டர் குமாரி பார்வதிக்கு B.A., B.Ed. PhD (Lonodon) Dip