பார்த்துக்கொண்டாள்.
அடுத்த கணமே அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, கல கலவென்ற குழந்தைச் சிரிப்பு எல்லாம் நினைவில் தோன்றி நெஞ்சத்தை நிறைத்தன.
கீழேயிருந்து வந்த சாம்பிராணிப் புகையின் தெய்விக் மணம், மணி ஒன்பதரை ஆகி விட்டது என்பதை உணர்த்தியது.
பார்வதி கீழே இறங்கிச் சென்று அவசரம் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பகவான் பரம ஹம்சரையும் தேவியையும் வணங்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கலாசாலைக்குப் புறப்பட்டாள். கார் கேட்டைத் தாண்டும் போது அங்கு உட்கார்ந்திருந்த செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். அவளுடைய கார் கலாசாலையின் காம்பவுண்ட் கேட்டை நெருங்குவதற்கும் பிரெஞ்சு மொழி ஆசிரியை மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை 'விந்தி விந்தி' நடந்து கேட்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை யாரேனும் காண நேரிட்டால் தங்கள் கைக் கடியாரத்தில் மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷமா என்று பார்ப்பார்கள். இல்லையேல் திருத்திக் கொள்வார்கள்.
பார்வதியைக் கண்டதும் சற்று உடலைச் சாய்த்து "ஹல்லோ குட்மார்னிங்'' என்று கையை ஆட்டியபடியே கூறினாள் மிஸஸ் அகாதா. பார்வதியும் பழக்கப்படி ”வெரி குட்மார்னிங்'' என்று பதில் வணக்கம் தெரிவித்து விட்டுக் காரைக் கொண்டுபோய்த் தன் அறைக்கு நேராக நிறுத்தினாள். அப்போது அங்கே தயாராக நின்று கொண்டிருந்த அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம் போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான். கடந்த பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி இது.
கல்லூரி எங்கிலும் நிரம்பியிருந்த மாணவிகளின் பேரிரைச்சல், காரின் குழல் ஒலி கேட்டதும், மந்திர சக்திபோல் அப்படியே அடங்கியது.
ஆபீஸ் அறையில் பார்வதியின் வரவை எதிர்பார்த்துப் பல வேலைகள் காத்துக் கிடந்தன. அவ்வளவையும் செய்து முடிக்க அவளுக்கு ஒரு நாள் போதவில்லை. அடுத்த நான்கு நாட்கள் வரை அவள் ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்தாள். தான் செய்ய வேண்டிய பணிகளை அவள் எப்போதுமே தள்ளிப் போட்டதில்லை. கடமையினின்று வழுவுவதைப் பெரும் குற்றமாகக் கருதுபவள் ஆயிற்றே அவள்.
இடையில் ஒரு மாத காலமாக விழா சம்பந்தமான வேலைகள் குறுக்கிட்டு விட்டதால், அவளால் வழக்கமான கல்லூரி அலுவல்களைச் சரிவரக் கவனிக்க முடியாமற் போய் விட்டது. இதற்கு ஓரளவு அவளுடைய மன நிலையும் காரணமாயிருந்திருக்குமோ என்னவோ?
தன்னைப் போலவே தன் கல்லூரி மாணவிகளும் நல்லொழுக்கங்களையும் நற்பண்புகளையும்