வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திருவாளர். சேதுபதி அவர்களே! என்று பேசத் தொடங்கியபோது மாணவிகள் மீண்டும் கை தட்டி மகிழ்ந்தனர்.
முதலில் தலைவரைப்பற்றி நாலே வார்த்தைகளில் சுருக்கமாகப் பேசி அறிமுகப்படுத்தி முடிந்ததும், சேதுபதியைப்பற்றி ஆரம்பித்தாள். அவருடைய பெயரை உச்சரிக்கும்போதே பார்வதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
”திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் அதிகம் கூறத் தேவையில்லை. இந்த அழகான ஹாஸ்டலைக் கட்டிக் கொடுத்த பெருமை அவரையே சேரும். முதன்முதலில் நான் கொடை விஷயமாக நான் அவரைக் காணச் சென்றபோது அவர், இப்போது எனக்கு நேரமில்லை. பின்னால் அவகாசம் கிடைக்கும்போது கூப்பிட்டு அனுப்புகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். பெரிய மனிதர்கள் வழக்கமாகக் கூறும் பதில் இது தான் என்பது என்னைப்போல் நன்கொடை வசூலிக்கச் செல்பவர்களுக்கு நன்கு தெரியுமாகையால், அவர் கூறிய பதிலில் நம்பிக்கை இழந்த வளாய்த் திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பவே இல்லை. அதைப்பற்றி நான் ஆச்சரியப்படவும் இல்லை. நாளை என்பதும் அப்புறம் என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் என்று எண்ணிக்கொண்டேன். உண்மையாகச் சொல்கிறேன்; இவரும் அந்தப் பழமொழிக்கு விலக்கல்ல என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால், நான் சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்த வாரமே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு செக்கும் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது, எனக்கு வியப்புத் தாங்கவில்லை.
'தங்கள் கல்லூரியில் கட்டப்போகும் ஹாஸ்டலுக்காக இத்துடன் ஒரு சிறு தொகைக்குச் செக் அனுப்பியுள்ளேன். இதைக் கொண்டு ஹாஸ்டல் கட்டட வேலையைத் தொடங்க வும். மேற்கொண்டு ஹாஸ்டலை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு ஆகும் செலவு எதுவானாலும், அது என்னுடைய தாகவே இருக்கட்டும்' என்று அதில் எழுதியிருந்தது. "அன்று அவர் அனுப்பியிருந்த அந்தச் சிறுதொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய்தான்!''
எவ்வளவோ கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்ட பார்வதி, இந்த இடத்தில் மாணவிகள் பலமான கரகோஷம் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்து, தன் பேச்சைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே கைதட்டல் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள்.
"திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம், ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால், அவர் கொடுத்த நன்கொடைக்காகப்