"அத்தை! வாசலில் யாரோ இரண்டு மாணவிகள் உங்களைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்' என்று ராஜா கூறிய வார்த்தைகள் அவள் சிந்தனையைக் கலைத்தன.
பார்வதி எழுந்து வாசலுக்குச் சென்றபோது அங்கு உட்கார்ந்திருந்த மாணவிகள் இருவரும் மரியாதையோடு எழுந்து நின்று வணக்கம் செய்தனர்.
"ஓ, நீங்களா!.... ஒரு வாரமாக நீங்கள் வகுப்புக்கு வருவதில்லை என்று கேள்விப்பட்டேன்...ஏன்?... சம்பளம் கட்ட முடியவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லி யிருக்கலாமே.... நான் கூட ஒரு காலத்தில் உங்களைப்போல் சம்பளம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவள்தான். வறுமை, உங்கள் படிப்புக்குத் தடையாயிருக்கக் கூடாது. உங்கள் தாய் தந்தையரை எனக்குத் தெரியாது. அதனால் பரவாயில்லை.... உங்களிருவருடைய சம்பளத்தையும் நான் கட்டி விடுகிறேன். நாளையிலிருந்து வகுப்புக்கு வந்து விடுங்கள். சரி... நீங்கள் போகலாம். இதைச் சொல்லுவதற்குத்தான் உங்களிருவரையும் வரச் சொல்லியிருந்தேன்'' என்றாள் பார்வதி.
நன்றிப் பெருக்கின் உணர்ச்சியில் அந்தச் சகோதரிகள் இருவரும் கண்களில் கண்ணீர் மல்கப் பேசமுடியாமல் மௌனிகளாக நின்றனர். அந்தப் பெண்களின் மௌனத்தில் கள்ளன்களைப்போல் மறைந்து கிடந்த ஆயிரம் நன்றிகளைப் பார்வதி கண்டு கொண்டாள்.
'நீங்கள் போகலாம்' என்று இதமான மிதமான தனது மொழிகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய பார்வதி உள்ளே போகும்போது, ''பாவம் நன்றாகப் படிக்கிற குழந்தைகளின் குடும்பம் வறுமையால் வாடுகின்றன. வசதியுள்ள குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளோ நன்றாகப் படிப்பதில்லை'' என்று தனக்குத்தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு போனாள்.
பார்வதியால் எதையும் பொறுத்துக்கொள்ள முடியும். சம்பளம் கட்ட முடியாமல் எந்த மாணவியும் படிப்பை நிறுத்தி விடுவதை மட்டும் அவளால் சகிக்க முடிவதில்லை.
சாப்பிட்டு முடிந்ததும் திட்டப்படி மாடி அறைக்குச் சென்று பீரோவைத் திறந்து அதிலிருந்த பழைய குப்பை களை எடுத்து வைத்துக்கொண்டாள் பார்வதி.
ஒவ்வொரு காகிதமாக எடுத்துப் படித்துக்கொண்டே வந்தபோது, அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவில் தோன்றி அவள் கண்களைப் பனிக்கச் செய்தன. அந்தக் குப்பைகளுக் கிடையே பளிச்சிட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன் அவளுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவள் தோழி சரஸ்வதியின் திருமணப் பத்திரிகை அது. பார்வதி ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தாள்.
சௌபாக்கியவதி சரஸ்வதிக்கும், சிரஞ்சீவி சேதுபதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட மேற்படி திருமண சுபமுகூர்த்தம் இனிது நடந்தேறி இன்று முப்பது ஆண்டுகளுக்கு மேல்