மணி ஒன்பதரைக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வாசல் ஹாலுக்கு வந்து நின்றாள் பார்வதி. அங்கே பகவான் பரமஹம்சரும், தேவியாரும் சாந்தமாக, அமைதியாகக் காட்சி அளித்தனர்.
’தேவி! என் மனத்துக்கு அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொண்டவளாய், அந்த இரு உருவங்களுக்கும் தலை குனிந்து வணங்கிவிட்டு காரில் போய் ஏறிக் கொண்டாள்.
கார் வாசல் காம்பவுண்டைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கார் கல்லூரிக் காம்பவுண்ட் சுவரை நெருங்கித் திரும்பிய நேரத்தில் மிஸஸ் அகாதா குடையைப் பிடித்தவண்ணம் காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
'குட்மார்னிங் மேடம்' என்று அவள் சற்று உடலைத் தாழ்த்திக் கூறியபோது, பார்வதியும் பதில் வணக்கம் தெரியவித்தாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்
போர்ட்டிகோவில் போய் கார் நின்றது. அட்டெண்டர் ஆறுமுகம் வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான்.
பிரின்ஸிபால் பார்வதி காரைவிட்டு இறங்கித் தன்னுடைய அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழலத் தொடங்கியது.
மேஜையின் மீது ஏதேதோ பைல்கள் அவள் கையெழுத் துக்காகக் காத்துக் கிடந்தன. அவள் அவற்றைப் படித் தாள். சிலவற்றைப் புரிந்து கொண்டும், சிலவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கையெழுத்துகளை ஏனோதானோ வென்று போட்டுத் தீர்த்தாள்.
இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விட வேண்டும் என்ற துடிப்பில் உள்ளம் ஊசலாடிக் கொண்டிருந்தது.
அவள் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே வழி அந்தச் சோதனைதான். அவருக்கு உண்மையில் தன்னிடம் அன்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்கு அது ஒன்றுதான் வழி.
"இனி மாலை வேலைகளில் தங்கள் பங்களாவுக்கு என்னால் வரமுடியாது. அந்த நேரத்தில் எனக்குக் கல்லூரியில் நிறையப் பணிகள் இருப்பதால் பாரதியை இன்று முதல் என் வீட்டுக்கே அழைத்துச் சென்று டியூஷன் சொல்லித்தரப் போகிறேன்” என்று ஒரு கடிதம் எழுதி ஆறுமுகத்திடம் சேதுபதியின் வீட்டிற்கு அதைக் கொடுத்தனுப்புவது என்பதே அதன் முடிவு.
காகிதத்தை எடுத்து மிகச் சுருக்கமாகக் கடிதத்தை எழுதி முடித்தவள், ஒரு முறை அதைத் திரும்பப் படித்தும் பார்த்தாள்.
அந்தக் கணம், அந்தக் கடிதத்தை அவன் படித்துக் கொண்டிருந்த சமயம் அவள் தன்னையே சேதுபதியாகவே எண்ணிப் படிக்கும்போது, அவர் என்ன நினைப்பார் என் பதைக் கற்பனையில் ஊகித்துப் பார்த்தாள்.