'பாவம்! திடீரென்று இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கும்போது அவருக்கு மிகவும் ஏமாற்றமாயிருக்கும்! என் மீது நிஜமாகவே அவருக்கு அன்பு இருந்தால், இனி என்னைச் சந்திக்க முடியாதே என்பதை எண்ணி வருத்தப் படுவார். என்னைக் காண்பதிலும் என்னுடன் உரையாடிக் கொண்டிருப்பதிலும் விருப்பம் இருந்தால், அதற்கு இனி சந்தர்ப்பம் இல்லாமற் போய்விடுமே என்பதை நினைத்து ஏங்கிப் போவார். சாக்குப் போக்குச் சொல்லி டியூஷனைத் தம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும்படி பாரதியிடம் சொல்லி அனுப்புவார். அல்லது தம் கையாலேயே கடிதம் எழுதி அனுப்புவார். அப்போது, அந்தக் கடிதத்தைப் படித் துப் பார்க்கும்போது என் உள்ளம் பரவசப்படும். சேதுபதி தன்னிடம் கொண்டுள்ள அந்தரங்கமான ஆசையை அறிந்து பெருமகிழ்ச்சி அடைவேன்.'
'ஆறுமுகம்!' என்று மணியடித்து அழைத்த பார்வதியின் குரலில் ஏதோ ஒரு புதுமை தொனித்தது. ஆறுமுகம் உடனே எதிரில் வந்து நின்றான்.
''இந்தா, இந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் சேதுபதி யின் வீட்டில் கொடுத்துவிட்டு வா'' என்று உறையிட்டு முடிய அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தனுப்பினாள்.
ஆறுமுகம் திரும்பி வந்தபோது, மணி பன்னிரண்டு. ''என்ன ஆறுமுகம் கடிதத்தைக் கொடுத்துவிட்டாயா?... சேதுபதி படித்துப் பார்த்தாரா?''... என்று ஆவல் தூண்டும் பரபரப்போடு விசாரித்தாள் பார்வதி.
"அவர் வீட்டிலே இல்லீங்க. பத்து மணிக்கே ஆபீசுக்குப் போய்விட்டாராம். அந்த வீட்டிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்ககிட்டே கொடுத்துட்டு வந்துட்டேன்'' என்றான் அவன்.
பார்வதியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடியா மல் தவித்துக் கொண்டிருந்த சேதுபதிக்கு அலுவலகத்தில் எந்த வேலையும் ஓடவில்லை. பார்வதியைச் சந்திக்கும் நேரங்களில் நேரில் கேட்டுவிடுவது என்று எத்தனையோ முறை முடிவு செய்தும் முடியாமற் போய்விட்டது. நேரில் காணும்போது என்ன காரணத்தாலோ பேச முடிவதில்லை. எப்படிப் பேசுவது? என்னவென்று பேசுவது?
தன்மீது பார்வதிக்கு உண்மையிலேயே ஆசையிருக்கு மானால், அதை அறிந்துகொள்வதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. இன்று முதல், மாலை நேரங்களில் தன்னால் வீட்டுக்கு வரமுடியாதென்றும் புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் சில மாதங்களுக்குத் தனக்கு ஓய்வே இருக்காதென்றும் பார்வதியிடம் கூறவேண்டும். அப்போது அவள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாவாள். தன்னுடன் இனி பேசமுடியாது. தன்னைச் சந்திக்க முடியாது. என்று அறிய நேரும்போது மிகவும் வருத்தப்படுவாள். டெலிபோனில் இதை நான் கூறும்போது அவள் ஏதேனும் பதில் கூறுவாள்.