சந்திக்க வேண்டும். சந்தித்து என் உள்ளத்தை அவரிடம் சொல்ல வேண்டும். ஆம்; நாளை காலையே அவரைச் சந்தித்து என் அந்தரங்கத்தை அவரிடம் கூறி விடுகிறேன். மனம் விட்டுப் பேசி விடுகிறேன். நீண்ட நாட்களாக என் மனத்தில் சுமந்து கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி விடுகிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி பிறக்கும். நெஞ்சுக்குள் புகுந்து அனைத்துக் கொண்டிருக்கும் வேதனை நீங்கும். இந்த முடிவு அவளுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது.
மறுநாள் விடியற்காலையிலேயே எழுந்துவிட்ட பார்வதி குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு தேவியின் படத்துக்கு முன்னால் போய் நின்று வணங்கினாள். "தாயே! எனக்கு மனச் சாந்தியைக் கொடு. அவரிடம் என் உள்ளத்தை எடுத்துச் சொல்லும் துணிவைக் கொடு” என்று வேண்டிக் கொண்டாள். பின்னர், மாடி அறைக்குப் போய்க் கண்ணாடி முன் நின்று, அலங்காரத்தில் ஈடுபட்டாள். தலையைச் சீவிப் பலவிதமான கொண்டைகள் போட்டுப் பார்த்துக் கடைசி யில் எதுவுமே திருப்தியளிக்காததால் வழக்கமாகப் போடும் கொண்டையையே போட்டுக் கொண்டாள். புடவைகளை மாற்றி மாற்றி உடுத்திப் பார்த்தாள். நகைகளை அணிந்து கொண்டு பார்த்தபோது 'சே! இவ்வளவு படாடோபம் கூடாது. அடக்கமாக, அழகாக, எளிய முறையில் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும்’ என்று தீர்மானித்தாள். கண்ணாடியில் கடைசி முறையாகப் பார்த்துக் கொண்டபோது, மூக்குக்கண்ணாடி அவள் வயதைச் சற்று அதிகமாக எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றியது.
'சே! அப்படி எனக்கு என்ன வயதாகி விட்டது?' என்று எண்ணியவள், அந்தச் சந்திப்பு எப்படி இருக்கும் என்பதைத் தனக்குள்ளாகவே கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள். வெட்கத்துடன் தலை கவிழ்ந்த வண்ணம் தான் அவர் எதிரில் நிற்பது போலவும், தான் கூறுவதைக் கேட்டு அவர் முகம் மலர்வது போலவும் அவள் மனக்கண் முன் தோன்றியது. அவள் மெய்சிலிர்த்துப் போனாள்.
அந்த இன்ப நினைவோடு, துணிவான தீர்மானத்தோடு சேதுபதியைச் சந்திக்கும் நோக்கத்தோடு மாடியிலிருந்து அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி வந்தாள் பார்வதி.
அச்சமயம் நடு ஹாலில் படித்துக் கொண்டிருந்த ராஜா ''அத்தை !'' என்று அழைக்கவே, பார்வதி திரும்பி அவன் அருகே சென்று, ''என்ன ராஜா?'' என்று விசாரித்தாள்.
''ஒன்றும் இல்லை அத்தை! இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டான் ராஜா.
"என்ன புத்தகம்?'' என்று கேட்டபடியே அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்த பார்வதி, ’பிக்விக் பேப்பர்ஸா?' என்று லேசாகச் சிரித்துக் கொண்டாள்.
''ஏன் சிரிக்கிறீர்கள் அத்தை ?''