”மில்க்கும், ப்ரூட் ஜூஸம் நிறையச் சாப்பிடனும்..” என்றாள் டாக்டர்.
"என்ன ப்ரூட்ஸ் கொடுக்கலாம் டாக்டர்? மாதுளம் பழம் கொடுக்கலாமா? அத்தைக்கு மாதுளம்பழம் ரொம்பப் பிடிக்கும்...”
"பிடிச்சால் ஜூஸாகவே பிழிந்து கொடேன்.... ரெஸ்ட் ரொம்ப முக்கியம்'' என்று கூறிக்கொண்டே காரில் போய் ஏறிக்கொண்டாள் டாக்டர்.
அறைக்கு வெளியே வராந்தாவிலேயே நின்று கொண் டிருந்த சேதுபதி, ராஜா வந்ததும், ''டாக்டர் என்ன சொல்கிறார் ராஜா!'' என்று விசாரித்தார்.
"அத்தைக்கு ரெஸ்ட்தான் ரொம்ப முக்கியம் என்கிறார்.''
”டாக்டர் அப்படிச் சொல்லி யிருக்கும்போது அத்தையை நீ நேற்றுக் கல்லூரிக்குப் போக விட்டிருக்கக் கூடாது!'' சேதுபதியின் குரலில் குற்றச்சாட்டு தொனித்தது.
"நான் காலை ஒன்பது மணிக்கே காலேஜுக்குப் போய் விட்டேன். அத்தை யார் பேச்சையும் கேட்க மாட்டாள். வழக்கம்போல் அவள் காலேஜுக்குப் போய் மூணு மணி வரை ஓய்வின்றி உழைத்திருக்கிறாள். மாலையில் ஜாக்ரபி வகுப்பு நடத்தச் சென்றபோது தான் மயக்கமாகக் கீழே விழுந்திருக்கிறாள். நல்ல வேளையாக அங்கிருந்த மாணவிகள் ஓடிச்சென்று தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செய்தி தெரிந்தது தான் தாமதம், அத்தனைப் பேரும் ஓடிச்சென்று அத்தையைக் காரிலே ஏற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்... பாரதி போன் செய்த பிறகுதான் எனக்கே விஷயம் தெரிந்து ஓடி வந்தேன்'' என்றான் ராஜா.
வராந்தாவில் நின்ற வண்ணம் சேதுபதியும் ராஜாவும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்வதி சற்றுக் கவனமாகவே கேட்டுக் கொண்டாள்.
அந்தப் பேச்சில், சேதுபதி அவள் மீது கொண்டிருந்த அன்பு வெளிப்பட்டது.
'எவ்வளவு உரிமையோடு ராஜாவைக் கோபித்துக் கொள்கிறார்? அந்தக் கோபத்தில் எவ்வளவு பரிவும் பாசமும் புதைந்து கிடக்கின்றன? என்மீது இவருக்கேன் இத்தனை அக்கறை? தம்முடைய பொன்னான நேரத்தை யெல்லாம் வீணாக்கிக்கொண்டு இங்கே எத்தனை நேரமாகக் காத்திருக் கிறாரோ?’
"பாரதி! உன் அப்பாவை உட்காரச் சொல்லம்மா” என்று கூற வாயெடுத்தவள், சட்டென மெளனியாகி விட்டாள். காரணம், அவரைக் காணவே அவள் கண்கள் கூசின. அவரை உட்காரச் சொல்லவோ, அவரிடம் பேசவோ, அன்பு பாராட்டவோ மறுத்தது உள்ளம். உள்ளத்தை உறுதியாக்கிக்கொண்டு அவர் வந்திருப் பதையே மறந்தவளாய், மறக்க முயன்றவளாய், மறக்க முடியாதவளாய் - ஒரு பெரும் சோதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் பார்வதி.