Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 10 - சு. சமுத்திரம்
ராமன் பிரேக் இல்லாத ஒரு சைக்கிளில், சவாரி வந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவளுக்கு மரியாதையாக ஒதுங்கி நிற்பவன். ஏதாவது அவசியத்தால் பேச வேண்டியது ஏற்பட்டால் “பாப்பா... மச்சானுக்கு காபி வேணுமாம்” என்று ஒதுங்கி நின்றே கேட்பவன். ஆனால் இன்று...
மல்லிகா, வேக வேகமாக நடந்தபோது, அவனும் சைக்கிளை வேகவேகமாக மிதித்துக் கொண்டு “சைக்கிள்லே ஏறிக்குமே. அந்த ரிக்ஷா கஸ்மாலம் எங்க பூட்டான்” என்றான்.
மல்லிகா, அவனை கோபத்தோடு பார்த்தாள்.
“நான் என்ன எருமை மாடா ‘மே’ங்றீங்க?”
“கோவிச்சுக்காதமே. அக்காள், உன்னை ஏத்திக்கினு வரச்சொல்லிச்சு.”
“எனக்கு நடக்கத் தெரியும்.”
“ஒரு கஸ்மாலம் உன்கிட்ட பேசுனானே, அவன் யாரு?”
“கண்ணுக்கு எல்லாம் கஸ்மாலமாத்தான் தெரியும். அவரு... என்னோட நண்பர்...”
“அக்காண்ட சொல்லட்டுமா?”
“சொல்லேன். சரி... வழியை விடுங்க...”
ராமன் எதிர்திசையில் சைக்கிளை உருட்டினான். ஒரு வேளை, சரவணனை வழிமறித்துத் தாக்கப் போகிறானோ என்று மல்லிகா நினைத்தாள். பின்னாலேயே ஓடலாமா என்று கூட எண்ணினாள். ‘அவரை அடிக்காதே... அடிக்காதே’ என்று கத்துவதுபோல் முகத்தைக் கொண்டு போனாள். தலை தெறிக்க சைக்கிளை மிதித்த ராமனையும், தொலைவில் போய்க் கொண்டிருந்த சரவணனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.
மல்லிகா வீட்டுள் நுழைந்த போது, பார்வதியின் அண்ணன்மார்கள் இருவர் மச்சானோடு ஊஞ்சல் பலகையிலும், ஒருவர் சாய்வு நாற்காலியிலும் அமர்ந்திருந்தார்கள். ராமன் ஒரு ஓரமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தான்.
மல்லிகாவிற்கு, போன உயிர் திரும்பி வந்தது. சரவணனை இவ்வளவு சீக்கிரம் ராமன் அடித்திருக்க முடியாது.
மகளைப் பார்த்ததும், சொக்கலிங்கம் பதைத்துப் போனார். “ஆட்டோ ரிக்ஷாவை வரச்சொல்லி போன் பண்ணினால் என்னம்மா? இப்படியா, வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து வருவது?”
பார்வதியின் வாய் பல்லாக மாறியது.
“நான் ராமனை சைக்கிளில் அனுப்பி வச்சேன். இவள் பின்னால ஏறிக்க மாட்டேன்னு சொல்லி விட்டாளாம்.”
ஊஞ்சல் பலகையில் இருந்த பெரிய மைத்துனர் ராமசாமி, இடி இடியென சிரித்துக் கொண்டே