Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 13 - சு. சமுத்திரம்
தியாகராய நகர் வீட்டுக் கதையும், இதே கதை தான்.
மல்லிகா, தந்தையுடன் வெளியேறிவிட்ட செய்தியை, கடைப் பையன் ஒருவன் மூலம் கேள்விப்பட்ட சொக்கலிங்கம், கல்லாவில் போடப் போன காசுகளை, சிறிது நேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தார். பின்பு கடையில் இருந்து, மேலே ஒரு கம்பி வட்டத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்று வளையத்தைப் பிடித்துக் கொண்டே, கீழே இறங்கி ஓடாக் குறையாக நடந்தார்.
வாசலுக்கு வந்ததும், “என் மகளை துரத்திட்டியாடி பாவி எங்கே இங்கே... இங்கே வாடி... அவள் போன பிறகு உனக்கென்னடி இங்கே வேல...” என்று குரல் கொண்ட மட்டும் கத்திக் கொண்டே, படியேறினார். இப்படி மனைவியை, அவர் எப்போதும் பேசியதில்லை. ‘கடைப்’ பயல், விவகாரத்தை ‘ஊர்ப்பய பிள்ளை’ என்று தன்னை அடிக்கடி திட்டும் பார்வதிக்குப் பாதகமாகச் சொன்னதால், சொக்கலிங்கம் மனைவியைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்ற உறுதியுடன் தான் கத்தினார். பார்வதி, வெளியே வரவில்லை. பயங்கரமான நிசப்தம். களையான ஒன்று, அங்கே இல்லை என்பதைக் காட்டுவது போல் ஒரு வெறுமை. நடக்கக் கூடாதது ஒன்று நடந்து, அப்படி நடந்ததை மாற்ற முடியாதபடி இன்னொன்று புகுந்து விட்டது என்பது போல், ராமன், தன் தோள்களை வளைத்துக் கொண்டே, அங்கே நின்றான். சின்ன ‘நாய்னா’வைப் பார்த்ததும், ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டான்.
ஊஞ்சல் பலகையில், மல்லிகா விட்டு விட்டுப் போன ஸ்கேலை எடுத்துக் கொண்டே, வாயில் தகாத வார்த்தைகளை வீசிக் கொண்டே, சொக்கலிங்கம் சமையலறைக்குள் போனார். போனவர், வாயடைத்துப் போய் நின்றார். பார்வதி சமையலறை மூலையில், தலையை வைத்துப் புரண்டு கொண்டே, “போயிட்டியாடி... போயிட்டியாடி... என் ராசாத்தி போயிட்டியாடி... எங்களை விட்டுட்டுப் போக உனக்கு எப்படியடி மனம் வந்தது” என்று புலம்பிக் கொண்டிருந்தவள், கணவனைப் பார்த்ததும், கட்டிப் பிடித்து அழுதாள். ஒரு நாளும் தரக் குறைவாகப் பேசாத கணவன், இன்று, கடந்த இருபத்தைந்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒட்டு மொத்தமாக, வட்டியும் முதலுமாக திட்டித் தீர்க்க, சுரணை இல்லாதவளாய், அவரது காலில் தலைபட புரண்டாள். மனைவி நடிக்கிறாளோ என்று கூட சொக்கலிங்கம் முதலில் நினைத்தார். இல்லை நடக்கவில்லை. அப்படி இருந்தால், இப்படிப் பித்துப் பிடித்தவளாய் இருக்க மாட்டாள். இப்படி காலில் புரண்டு கதற மாட்டாள். அவளையே சிறிது நேரம் பார்த்துவிட்டு ‘அவள் மெய்யும், மெய்மையும், உடலும் உள்ளமும் ஒருங்கிணைய அழுகிறாள்’ என்பதை அவருக்குரிய அனுகூலங்களாக வைத்து, “என்னடி நடந்தது, எதுக்காக அந்த குடியன் கூட போயிட்டாள்” என்று படபடப்பாகவும், அதே சமயம் மனைவி மீது பரிதாபம்