Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 14 - சு. சமுத்திரம்
ஒரு வாரம் செத்து, மறுவாரம் பிறந்தது.
எந்த நிலைக்கு ஒருவர் வந்தாலும், அந்த நிலைக்கு ஏற்ப ஐம்புலன்களும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன என்ற தத்துவத்தை அல்லது விஞ்ஞான உண்மையை, மல்லிகா நம்பத் துவங்கினாளோ இல்லையோ, உணரத் துவங்கினாள்.
அந்தச் சூழல், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை. ஆதரிக்க முடியவில்லை என்றாலும், அனுசரிக்க முடிகிறது. அவள் வந்த நான்கைந்து நாட்கள் வரை, செல்லம்மா மகளுக்குப் பிடித்தமான இடியாப்பத்தையும், ரவா தோசையையும், தினந்தோறும் ஒரு உடுப்பி ஓட்டலில் இருந்து வாங்கிக் கொடுத்தாள். பிறகு கையில் காசில்லாததால், அந்த வீட்டின் திண்ணையிலேயே, இட்லி கடை போட்டிருந்த ஒரு ஆயாவிடம், கல்லை விடக் கடினமான, கல்லை உடைக்கும் இட்லிகளை, அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, கைகளைப் பின்னிக் கொண்டு ஒன்றோடொன்று மோதிய தாய்மையையும், இயலாமையையும் இணைக்கப் பார்த்து, அவை இணைபட முடியாமல் போகவே, வாசல்படியில் சாய்ந்து, வெளிக்கூரையை பற்றற்ற யோகி போல் உற்றுப் பார்த்தாள்.
மல்லிகா புரிந்து கொண்டாள். மறுநாள், அம்மா இட்லி வாங்கக் கூட காசில்லாமல், தன் மூத்த மகள் சந்திராவிடம் “உன்கிட்ட ஏதாவது...” என்று இழுத்த போது மல்லிகா ஒரு ஈயத்தட்டை எடுத்து, பழைய பானையைத் திறந்து, பழையை கஞ்சியை போட்டு சிரித்துக் கொண்டே, ஒரு வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டாள். செல்லம்மாவுக்கு அந்த வெங்காயம் படாமலே கண்ணீர் வந்தது. மல்லிகா அம்மாவை அதட்டினாள்.
“என்னம்மா நீங்க! நேற்று உங்கள் கூட மார்க்கெட்டுக்கு வந்த போது எத்தனை ஜனங்கள் தெருவில் அடுப்பு வைத்திருக்கிறதைப் பார்த்தேன். மழை பெய்யும் போது தாங்கள் நனைந்தாலும் பரவாயில்லை. அடுப்பு நனையக் கூடாதுன்னு நினைத்து பாவாடையோட நின்னுக்கிட்டு புடவைங்களால அடுப்பை மூடுன எத்தனை பெண்களைப் பார்த்தேன். நாமாவது நாலு பேருக்குத் தெரியாமல் வறுமையை மறைக்க முடியுது. அவர்களால அது கூட முடியவில்லை. மழை பெய்தாலும் ஒண்டுவதற்கு ஒரு இடமும், ருசியா இல்லாவிட்டாலும் சாப்பிடுவதற்கு ஒரு உணவும் இருக்கிற நீங்கள், நான் பழைய கஞ்சியை குடிப்பதற்கா அழுவது? பழைய கஞ்சியிலும் ஊசிப் போன கஞ்சியாப் போன அந்த ஜனங்களை அவமானப் படுத்துறது மாதிரி இருக்கிறது.”
செல்லம்மா, மகளைப் பார்த்து, ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தாள். உலகத்தில் பலர் கஷ்டப்பட்டாலும், தன்னை மாதிரி யாருமே கஷ்டப்படவில்லை என்று இதுவரை நினைத்து, அதனாலேயே அதிகமாகச் சோகப்பட்டு, அந்த சோகத்திலேயே ஒருவித சுகத்தைச் சுவைத்து