இங்கே வந்து இருபது வருஷமாவுது... இன்னும் இந்த வீட்டுல வெள்ளையடிச்சத கண்ணால பார்க்கல. வெற்றிலை போடும்போது சுவர்ல பட்ட சுண்ணாம்பைத் தவிர, எந்தச் சுண்ணாம்பும் படல. இருபது வருஷத்துல ஒருக்கா கூட ஓடு மாத்தல... இதெல்லாம் ஆயா... எதுக்காகச் சொல்றேன்னா, நீ ஒண்ணைச் சொன்னால், அவளுங்க ஒன்பது சொல்ல பாயிண்ட் இருக்கு. அதனால எல்லாரும் அனுசரிச்சுப் பூடணும். நீயும்... அவர்களை... அப்படி தத்தேறித்தனமா பேசியிருக்கப் படாது... அதுகளும் உன்ன வீட்டுக்காரம்மாங்கிற மதிப்பில்லாம... புறம்போக்குத்தனமா பேசியிருக்கப்படாது... சரி... சரி... விட்டுத் தள்ளுங்கோ... வேலையைப் பாருங்கோ.”
குடித்தனப் பெண்கள், விட்டுத் தள்ளுவது போல் தத்தம் வீட்டுக்குப் போய்விட்டார்கள். ஆனால், வீட்டுக்காரி விடத் தயாராக இல்லை. அவர்களை, அந்த வீட்டில் இருந்து தள்ளும் வரையும் அவள் விடத் தயாராக இல்லை. மனதுக்குள்ளே பேசினாள்:
‘என்ன ஆனாலும் பார்த்துட வேண்டியதுதான். என்னோட அண்ணன் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருக்கான். பெரியப்பா மகன், ‘கோட்டையில’ வேலை பார்க்கிறான். பெரிய அண்ணா, நாலுலாரி வச்சுருக்கார். சின்ன அண்ணா வக்கீலாய் இருக்கார். உங்களை மாதுரி கைவண்டி இழுக்கல. கட்டிடம் கட்டுற இடத்துல செங்கல் எடுத்துக் கொடுக்கல. கோணி வாங்கப் போகல. உங்களை... போலீஸ் மருமகன் கிட்ட சொல்லி உதைத்து... ‘கோட்டை’ அண்ணன் கிட்ட சொல்லி சிதைத்து... பெரிய அண்ணாவோட லாரிங்களை வைத்து... மோதியாவது... வக்கீல் அண்ணா மூலம் கோர்ட்டு கோர்ட்டா ஏற்றியாவது... உங்களை... தொலைக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்லை... வீட்டுக்காரியே இல்லை...’
இப்படி, தன் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரையும், அவர்களின் வேலைகளையும் நினைத்துப் பார்த்த அந்த வீட்டுக்காரி, தன் வீட்டுக்காரனை மட்டும் நினைக்கவில்லை.
சென்னைத் தமிழில் சொல்லப்போனால், அந்த ஆசாமி சரியான ‘டப்பா’. அதுவும் வீடு அவள் பெயருக்கு இருந்ததால், அவர் வெறும் தகர டப்பாவாகப் போனவர். என்றாலும் அந்த தகர டப்பாவை வைத்தாவது, அவர்களுக்கு சலசலப்பைக் காட்ட வேண்டும் என்பது போல், அப்போதுதான் உள்ளே வந்த அவரிடம், குடித்தனப் பெண்கள் சொன்னதை கூட்டி, தான் சொன்னதை ‘அமுக்கி’, அவரை ஊதிவிட்டாள்.
அந்த ஊதலில் பருமனாய்ப் போன அவர், ஒவ்வொருத்தியின் வீட்டு முன்னாலும் வந்து நின்று, “என்ன நினைச்சீங்க. தெரியாமத்தான் கேட்கிறேன். தொலைத்துப் புடுவேன். நாங்க மனசு வச்சால் நீங்கள் இந்தத் தெருவிலே இருக்க முடியாது” என்று கத்திவிட்டு, திரும்பிப் போய்விட்டார்.
குடித்தனப் பெண்கள், குறிப்பாக ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும் அந்தக்